14 February 2010

குண்டு வெடிக்கும் பாடலாசிரியர்.

Posted by Gunalan Lavanyan 6:17 AM, under | 1 comment

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலையின் சமீபத்திய பல பாடல்கள் செம ஹிட். கடந்த ஆண்டு ‘டாப் 10’ பாடல்கள் வரிசையில் இவரது இரண்டு பாடல்கள் இடம் பிடித்தன. ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ன்னு இவர் எழுதிய ‘வேட்டைக்காரன்’ படப் பாடல் குழந்தைகள் மத்தியிலும் நல்ல பிரபலம். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இவர் எழுதிய ‘பண்ணாரஸ் பட்டு கட்டி’ பாட்டும் மெகா ஹிட். அதேபோல ‘என் பேரு முல்லா...’, ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்...’ பாடல்களும் ஹாட் டாக். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஃபில்., தமிழ் இலக்கியம் படித்துவிட்டுப் பாடல் துறையில் இறங்கியிருப்பவர். இவர் பாடலாசிரியராக பரிணாமம் அடைவதற்கு முன்பே ழ, விருட்சம், அரும்பு என பல சிறு பத்திரிகைகளில் 50 க்கும் அதிகமான கவிதைகளை எழுதியிருக்கிறார். தவிர ஆனந்தவிகடன் போன்ற வெகுஜன பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் 50க்கும் அதிகமாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.அவரிடம் நமது doordo (செய் அல்லது செய்) ப்ளாகுக்காக எடுக்கப்பட்ட ஸ்பெஷல் பேட்டி. தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் 'ரசிக்கும் சீமானே' படத்தில் ரீமிக்ஸிய 'ரசிக்கும் சீமானே பாடலுக்கு இவர், வரிகள் எழுதும் போது குண்டுவெடிக்கும் நெஞ்சுவெடிக்கும் என்று எழுதி ரசிகர்கள் மனசை வெடிக்க வைத்திருக்கிறார்... அவரிடம் நிறைய பேசியதிலிருந்து தொகுக்கப்பட்ட நேர்காணல்.

அணுகுண்டு சோதனையில்
அத்தனை சேதமில்லை
பெண்கொண்ட பேரழகில்
பிழைத்தவன் யாருமில்லை!
- கவிஞர் அண்ணாமலை

‘‘நான் பிறந்த ஊர் திருவண்ணாமலை. என் தாய்வழித் தாத்தா வெச்ச பேரு அண்ணாமலை. எனக்கு சொந்த ஊர், தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள கீழப்பட்டு கிராமம். கீழப்பட்டு கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். திருவண்ணாமலையில் பத்தாவது வரைக்கும் படிப்பு. மேல்நிலை படிப்பை சங்கராபுரத்துல முடிச்சேன்.
பள்ளிக் காலத்திலேயே எனக்கு கவிஞர் வைரமுத்துன்னா உயிர். குறிப்பா, அவர் குங்குமத்துல எழுதுன ‘இதுவரை நான்’ தொடர் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தத் தொடர் வரும்போது கீழப்பட்டு கிராமத்தில் இருந்தால், பத்து கிலோமீட்டர் வரை சைக்கிள் மிதித்துக்கொண்டு கள்ளக்குறிச்சிக்குப் போய், குங்குமம் வார இதழை வாங்கி முதல் ஆளா படிப்பேன். அத படிக்கலன்னா அன்னிக்கு சாப்பிடவே பிடிக்காது. அந்த அளவுக்கு வைரமுத்து என்னை பாதிச்சார். தவிரவும், நான் சினிமா பாட்டெல்லாம் ரசிச்சு கேட்க ஆரம்பிச்ச பன்னிரெண்டு வயசுல வைரமுத்து பாட்டுதான் எங்க பாத்தாலும் கேட்கும். ‘இளையநிலா பொழிகிறது...’, ‘பனிவிழும் மலர்வனம்...’ எல்லாம் என்னை எங்கோ அழைச்சுட்டுப் போகும்.
அந்த ஈர்ப்பால, பள்ளி முடிச்சதும் வைரமுத்து படிச்ச கல்லூரியிலேயே படிக்கணும்னு நினைச்சிதான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில சேர்ந்தேன். அப்புறம் இளங்கலை, முதுகலை, எம்.ஃபில். ஆய்வு படிப்புன்னு ஏழு வருஷம் பச்சையப்பன் கல்லூரியிலேயே போச்சு. கல்லூரி காலத்துல நிறைய கவிதை போட்டிகள், ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும். எல்லா கவிதை போட்டியிலும் கலந்துக்குவேன். பாடலாசிரியர் கபிலன் அப்போ என்னுடைய வகுப்புத் தோழர். நானும் கபிலனும்தான் கவிதைப் போட்டியில எங்க கல்லூரி சார்பா கலந்துக்குவோம். 
அப்படி கவிதை போட்டிகள்ல நிறைய முதல் பரிசு வாங்கியிருக்கேன். அநேகமா, போட்டியில கலந்துகிட்டா, பரிசு வாங்காம வந்த தருணங்கள் மிகவும் குறைச்சல்!
அப்போ இயக்குநர் செல்வா, எனக்கு சீனியர் மாணவரா பச்சையப்பன் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். அந்த நேரத்துல அவர் ‘சித்திரப் பாவை’ன்னு ஒரு தொடர் எடுத்தார். பாலபாரதி இசை அமைச்சாரு. அந்தத் தொடருக்கு ஒரு டைட்டில் சாங் தேவை. அதுக்கு ‘பிரபலமான பாடலாசிரியர்களை வெச்சி பாடல் எழுத வேணாம். நம்ம கல்லூரியில் இருக்கிற திறமையான மாணவர் யாரையாவது வெச்சி எழுதிக்கலாம்’னு செல்வா முடிவு பண்ணியிருந்தார். நிறைய கவிதைப் போட்டிகள்ல நான் பரிசு வாங்கியிருந்ததால என்னை அழைத்து அதற்குப் பாடல் எழுதச் சொன்னார். அதுதான் என் முதல் பாடல் அனுபவம். அப்புறம் ‘நீலா மாலா’ன்னு ஒரு சீரியல் எடுத்தார். அதுலயும் நான் பாட்டு எழுதினேன். எனக்கு பாட்டு எழுதணுங்கிற ஆசை இல்லாத காலத்துலேயே, இயக்குனர் செல்வா எனக்கு வாய்ப்பு கொடுத்து எழுத வெச்சாரு. 
அதுக்கப்புறம் இசையமைப்பாளர் காந்திதாசன், எனக்கு ஜூனியர் மாணவரா பச்சையப்பன் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். அவர் தினமும் ஏதாச்சும் டியூன் போட்டுட்டே இருப்பார். அந்த டியூனுக்கு நான் பாட்டு எழுதிக்கிட்டே இருப்பேன். இப்படி ஒரு ரெண்டு வருஷம். அதுல டியூனுக்கு எழுதறதுல எனக்கு நல்ல பயிற்சி கிடைச்சுது.
பச்சையப்பன் கல்லூரியில எம்.ஃபில் முடிச்சுட்டு, வெளியே வந்தப்ப, செல்வாகிட்ட உதவியாளரா இருந்த சுகி.மூர்த்திங்கறவர் ‘கும்மாளம்’ படத்தை இயக்கினாரு. அதுக்கு காந்திதாசன்தான் இசை. அதுல மூணு பாட்டு எழுதச் சொன்னாங்க. ‘திம்சுகட்ட அடடா திம்சுகட்ட...’ன்னு அதுல நான் எழுதினதுதான் என் முதல் சினிமா பாட்டு. ‘சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறதே’, ‘ஒவ்வொரு நாளும் உன்முகம் பார்த்து’ன்னு மீதி ரெண்டு பாட்டும் அதுல வரும்.
அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ‘சேனா’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘மச்சி’ ‘ஜோர்’, ‘காற்றுள்ள வரை’, ‘ஜங்ஷன்’ போன்ற 10 படங்களுக்கு எழுதினேன். அப்படி நான் எழுதிய எல்லா பாட்டுமே எனக்கு பிடிக்கும். ‘திம்சு கட்டை’ பாட்டுல, 
‘செவப்பா செவப்பா ஒரு ஃபிகரு...
சிரிச்சா சிரிச்சா அட ஃபயரு!
அவ காம்ப்ளான் வாங்கிக் குடிச்சா 
ஹார்லிக்ஸ் மனசு நோகும்...
ஹெச்.எம்.டி. வாச்சு போட்டா, 
டைட்டான் ரொம்ப பாவம்...’
- இப்படி எழுதின எல்லா வரிகளும் நிறைய பேருக்கு பிடிச்சது. ‘சேனா’ படத்துல,  ‘பூச்செடிக்குகூட இந்த வீட்டில் 
காதல்தான் உண்டாச்சா... 
நீ போன பின்பு பூக்கவில்லை செடிகள் 
ஏன் என்று சொல்வாயா?
இதோ இந்த பூந்தொட்டி 
உன்னைக் கண்டால் பூப்பூக்கும்... 
அதோ அந்த நாய்க்குட்டி 
நீதான் வந்தால் வாலாட்டும்...’ என்பது போல எல்லா பாட்டிலும் நல்ல கற்பனை, புதுமை இருந்தாலும் எல்லாரையும் என் பாடல்கள் போய் சேரலை.
இப்படி போய்கிட்டிருந்த என் பாடல் பயணத்தில் முக்கியமான திருப்பம், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை சந்தித்ததுதான். அவரை தொடர்புகொண்டதும், என் திறமையை பரிசோதிக்க பாடல் மற்றும் மெட்டு சார்ந்த ரெண்டுவிதமான டெஸ்ட் வைத்தார். அதுல அவர் திருப்தியானதும் எனக்கு, அடுத்தடுத்து வாய்ப்பளித்தார். 
ஏவி.எம்-;மின் ‘அ ஆ இ ஈ’ படத்துல ‘நட்டநடு ராத்திரியை பட்டப்பகல் ஆக்கிவிட்டாய்’னு வரும் பாட்டு, ஓரளவு ஹிட் ஆச்சு. விஜய் ஆண்டனியோட இசையில ‘ரசிக்கும் சீமானே’, ‘பந்தயம்’னு தொடர்ந்து எழுதினேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துல மூணு பாட்டு... ‘பண்ணாரஸ் பட்டு கட்டி’, ‘என் பேரு முல்லா’, ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்’னு மூணுமே ஹிட். ‘பண்ணாரஸ்’ மெகா ஹிட். அடுத்து, விஜய் ஹீரோவா நடிச்ச ‘வேட்டைக்காரன்’ படத்துலயும் விஜய் ஆண்டனிதான் என் பேரை இயக்குநர் பாபுசிவனிடம் முன்மொழிந்து, என்னை எழுத வெச்சார். அப்படி எழுதின ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாட்டும் மெகா ஹிட்! 
அந்த பாட்டை ரொம்ப திட்டமிட்டு எழுதினேன். ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது உன்னை நான் பாக்கையில கிர்ருங்குது... கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது... டர்ருங்குது’ன்னு பல்லவி எழுதினேன். குழந்தைகளுக்கு பிடிக்கணுங் கிறதுனால சரணத்துல, ஆட்டுக்குட்டி, பூனை யானை, பேனா, இந்த மாதிரி வார்த்தைகள்லாம் பயன்படுத்தி இருப்பேன். அப்புறம் கிராமத்து வார்த்தைகளான ‘கம்மாங்கர காடு, சுட்ட கருவாடு’ன்னு வார்த்தைகள் வரும். இதுல விஜய்க்கு பொருத்தமா எழுதணும்னு ‘அப்பாவியா மூஞ்ச வெச்சி அங்க இங்க கைய வெச்சி, நீயும் என்னை பிச்சி தின்ன கேக்குறியேடா’ன்னு எழுதினேன். அனுஷ்காவுக்கு மூக்கு நீளம்ங்கறதால ‘துப்பாக்கியா மூக்க வெச்சி, தோட்டா போல மூச்ச விட்டு நீயும் என்னை சுட்டுத் தள்ள பாக்குறியேடி’ன்னு எழுதினேன். இப்படி எல்லாருக்கும் பொருத்தமா அமையணும்னு மெனக்கெட்டு எழுதுன பாட்டு, குழந்தைகளுக்கும் புடிக்கணும்னுதான் அதுல... காகிதம், பேனா, யான, பூன, ஆட்டுக்குட்டி போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தினேன். இப்ப அந்த பாட்டுதான், சினிமா துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலயும் ‘அண்ணாமலைன்னு ஒருத்தர் பாடல் எழுதிட்டு இருக்கார்’னு என்னை பிரபலப்படுத்தியிருக்கு!
அப்புறம் நடிகர் விஜய், வேட்டைக்காரன் பட ஆடியோ ரிலீஸ் சமயத்துல ‘பண்ணாரஸ் பட்டு கட்டி பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்’னு மேடையில சொன்னதிலும் எனக்குப் பெருமை. ‘என் உச்சி மண்டைல’ பாட்டும் அவருக்குப் ரொம்ப புடிச்சதுதான்!
‘வேட்டைக்கார’னுக்குப் பிறகு 17 பாட்டு எழுதிட்டேன். மேக்சிமம் குத்துதான். சினிமால அப்படித்தானே... ஒரு குத்து ஹிட்டானா, அப்புறம் குத்தோ குத்து, கும்மாங்குத்துதான்!
‘ரசிக்கும் சீமானே’ படத்துல ரெண்டு பாட்டு எழுதியிருக்கேன். ‘ஓ ரசிக்கும் சீமானே’ன்னு வர ரீமிக்ஸ் பாட்டுல ‘உன் கெண்டைக்கால் அழகுல என் கண்ணு வழுக்கும்... நீ குணியும்போது மனசுக்குள்ள குண்டு வெடிக்கும்’னு  ரெண்டு வரி வரும். இது கிளப்ல ஆடற மாதிரியான சூழல்ல வர்ற பாட்டு. கொஞ்சம் அசைவமாவும் யோசிக்கவேண்டியிருந்துச்சு. 
‘ரெட்டைச்சுழி’ படத்துல கார்த்திக் ராஜா இசையில, சுந்தர்.சி பாபு இசையில ‘அகராதி’, நடிகர் ஜீவா ரெட்டை வேடத்துல நடிக்கிற ‘சிங்கம் புலி’ங்கிற படத்துல, பிரசாந்த் ஹீரோவா நடிக்கிற ‘மம்முட்டியான்’ படத்துல, எஸ்.ஏ.சி-யோட ‘வெளுத்துக்கட்டு’ படத்துல, மணிஷர்மா இசையில ஒரு பாட்டுன்னு இந்தப் பட்டியல் இன்னும் நீளுது...
நான் எழுதுற ஒவ்வொரு பாடலும் ‘வெறும் வெற்று வார்த்தைக் கூட்டங்களாக இருக்கக்கூடாது. அதுல நம்ம வாழ்ந்த வாழ்கையின் அடையாளம் இருக்கணும்’னு நெனைக்கிறேன். சன் டி.வி.யில வர்ற ‘தங்கம்’ சீரியல்ல டைட்டில் சாங்லகூட ‘துன்பம் உன்னை செதுக்கும், நீ சிந்தும் வியர்வைத் துளிகள்... எல்லாம் வெற்றிப் படிகள்’னு எழுதியிருப்பேன். பாடல் துறையில் என் வியர்வைத் துளிகள் அத்தனையும் எதிர்காலத்தில் நிச்சயம் வைரக் கற்களாக மாறும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை!’’
சந்திப்பு: சா.இலாகுபாரதி புகைப்படங்கள்: ஜான்

13 February 2010

சல்லாப காதலர்கள் ஜாக்கிரதை!

Posted by Gunalan Lavanyan 6:57 PM, under | No comments

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக நிறைய காதல் ஜோடிகள் முன்கூட்டியே காண்டம்களை வாங்கிவருவதாகவும், அதனால் காதலர் தின ஸ்பெஷல் விற்பனையாகவே உலகமெங்கும் மில்லியன் கணக்கில் காண்டம்கள் விற்பனை ஆகி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.


காதலர் தினம் என்ற பெயரில் இப்படி சல்லாபமாக இருக்க விரும்பும் காதல் ஜோடிகளை எச்சரிப்பதற்காகவே இந்தக் கட்டுரை. தவிர காதலர்களுக்கோ அல்லது காதலர் தினத்தை சல்லாபமாக கழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும் காதல் ஜோடிகளுக்கோ எதிரான கட்டுரை அல்ல.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக காம லீலைகளில் ஈடுபடும் காதல் (காம) ஜோடிகளில் சிலர் அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக எண்ணி காம விளையாட்டில் ஈடுபடும்போது அதை செல்போனில் படம் பிடித்து விடுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இப்படி செய்பவர்கள் அவசியம் இத்தகைய வீடியோ பதிவுகளை தவிர்ப்பதுதான் உத்தமம். காரணம், செல்போனில் பதிவு செய்து அதை அல்பத்தனமாக பிறகு பார்த்து ரசிக்கலாம் என்று கருதியிருப்பார்கள். ஆனால், அந்த அல்பத்தனமே அதன்பிறகு அவர்களுக்கு ஆப்புவைக்கும்.

அது எப்படி என்று பார்ப்போம்?
பல ஆண்கள் (சில பெண்கள்), இந்த வீடியோ பதிவை தங்களுடைய நண்பர்களுக்கு போட்டு காட்டியும், புளூ டூத் வழியாக ஃபார்வர்ட் செய்தும் சில்லறைத்தனமான ஆசையை நிறைவேற்றப்பார்ப்பார்கள். ஆனால், அவர்களுடைய அந்த நண்பர்கள் மூலமாக எளிதாக மற்ற எல்லாருடைய செல்போன்களுக்கும் இந்த வீடியோ காட்சி பரவி பிரசித்தி பெற்ற வீடியோவாக மாறி, வீடியோவில் உள்ளவர்களின் பிற்கால வாழ்க்கையையே அது கேள்விக்குறியாக மாற்றிவிடுகிற வாய்ப்புகளை இதே தொழில்நுட்ப வளர்ச்சிதான் செய்து தருகிறது.

அப்படியில்லாமல், சிலர் தாங்கள் மட்டுமே வைத்து வீடியோவை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தாலும் சில நேரங்களில் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. திடீரென்று ஒருநாள் சொல்போன் ரிப்பேர் ஆகி சர்வீஸுக்கு போனால் அதில் இருக்கும் வீடியோவை சர்வீஸ் சென்டர்காரர்கள் சுட்டு உலகம் முழுக்க இணையதளத்தின் மூலமோ அல்லது அதே புளூ டூத் மூலமோ பரப்பிவிடும் சாத்தியங்கள் நிரம்ப இருக்கின்றன.

இப்படி பதிவு செய்யும் வீடியோவை மற்றவர்கள் பார்ப்பது மட்டும் இல்லாமல், சில மாஃபியா கும்பல்கள், குறுக்குசால் ஓட்டுபவர்களிடம் அது கிடைத்துவிட்டால் அந்தப் பதிவில் உள்ளவர்களின் கதி அதோ கதிதான். அதை வைத்தே அந்த கும்பல் அவர்களை ப்ளாக்மெயில் செய்து பணம் பறிக்கவும், தவறான வழிகளுக்கு அழைக்கவும் சந்தர்ப்பங்கள் இடம் கொடுக்கும்.

சில நேரங்களில் அந்த வீடியோ மீடியாகாரர்களின் கைகளில் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்... அதில் உள்ளவரின் மானம் கப்பலேரி ஊர் சுற்றி உலகம் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும்.

இதனால் சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆகவே, உல்லாசமாக ஈடுபடுபவர்கள் சல்லாபத்தை முடித்தோமா பாய் மடித்தோமா என்று இருப்பது நல்லது. தவறியும், 'நான் மட்டும்தானே பார்க்கப்போகிறேன். நாம் மட்டும் தானே பார்க்கப்போகிறோம்... இன்று இரவு பார்த்துவிட்டு நாளை டெலிட் செய்துவிடுகிறேன்' என்று எதிர் பாலினக்காரர் சொல்கிறார் என்று அதை நம்பி, சம்மதம் சொல்லி, வீடியோ பதிவு செய்ய அனுமதிக்காதீர்கள். அது உங்கள் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிவிடும்.

தேவை ஜாக்கிரதை!
தேவையா இப்படிப்பட்ட சல்லாபம்?

உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்... இந்தப் பதிவுக்கு வாக்களித்து, சல்லாப வீடியோ பதிவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்.

11 February 2010

காதலை தீர்த்துக்கொள்வோம்!

Posted by Gunalan Lavanyan 11:15 PM, under | No comments

உனக்காக எதையும் செய்வேன்
என்று பொய்சொல்லப் போவதில்லை
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்வேன்!

பிறைமுகம்
கயல்விழி
சங்கு கழுத்து
மேகக் கூந்தல்
மலை மார்பு
கொடியிடை
வாழை கால்கள்
தாமரை பாதம் என்று
அவளை வர்ணிக்கமாட்டேன்!
இதயத்தில் புகுந்து
எப்போதும் என்னை
இம்சித்துக்கொண்டிருக்கும்
அவள் ஒரு பிடாரிகளின் அரசி!

குடை இல்லாமல் போகும் போது
மழை வருவதைப் போல
நீ இல்லாமல் போகும்போது
அதிகமாகக் காதல் வருகிறது எனக்கு!

இதயத்தில்
பூக்கள் பூப்பதில்லை
பொழிகின்றன
காதல் மழை!

வாழையடி வாழையாக
உன்னை காதலித்துக்கொண்டிருக்கிறேன்
இந்தத் தலைமுறையிலாவது வா
காமம் செப்பி
காதலை தீர்த்துக்கொள்வோம்..!

10 February 2010

சொப்பன சுந்தரி!

Posted by Gunalan Lavanyan 9:29 PM, under | No comments

விலைமாதர்களுக்கு சமர்ப்பணம்...


வெம்பி வெதும்பி முளைத்தவைகள்
பஞ்சப் படர்நெருப்பில் பற்றி எரிய
இச்சைத் துடுப்புகளை வீசி
படகோட்டும் கோவலர்களின்
படகிலேறி பயணிக்க வேண்டியவளாய்
அடர்ந்த பேரிருட்டில்
சொப்பனமாய் மாறி
காமுகர்களின் களவிக்கு வழிவகுத்தாள்
துர்பாக்கிய சுந்தரி.

எச்சில் படாதவைகளும்
வலி அறியாதவைகளுமாக இருந்தவள்
காமத்துடுப்புப் போட்டு
வெளியேறுவதென முடிவெடுத்து
காட்டுத்தீயில் பொழுதுகளாய்
மல்லாந்திருக்கிறாள்
மறித்துப்போன பிணமென!

- சா.இலாகுபாரதி
(12.01.2005-ல் எழுதிய கவிதை)

09 February 2010

குடை பிடித்து நடக்கும் காதல்

Posted by Gunalan Lavanyan 10:32 PM, under | No comments

குடையில்
மஞ்சள் கதிர்களை சுமந்து
நடப்பவளை தொடர்கிறேன்...
நேற்றொருநாள் நிகழாத
சந்திப்பையெண்ணி
பின்திரும்பி விழிகளால்
நலம் பகர்கிறாள்...
நான் இமைகளால்
வழிமொழிகிறேன்...
நடையின் வேகம் குறைத்து
நடக்கிறாள்...
நடக்கிறோம்..!
குடை பிடித்து நடக்கிறது
காதல்!

- சா.இலாகுபாரதி

08 February 2010

ஒரு பால் புணர்ச்சி

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | 3 comments

கஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் காட்டுகிறார். கஜுராஹோ சிற்பங்களில் அவ்வாறு சித்தரிக்கப்படவில்லை. ஒருபாற்புணர்ச்சிக்குரிய உருவமென தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன.


1. அதிகம் பேசப்பட்ட காட்சி, அவ்வப்போது ஒருபாற்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது, அந்தத் தளத்தில் இருக்கும் விஷ்வநாதர் கோயிலின் வடக்கு சுவரில் இருக்கும் தலையைக் கவிழ்ந்திருக்கும் சிற்பம். முகப்பில் முதுகுப்புறத்தைக் காட்டும் மேலே இருக்கும் உருவம் ஒரு பெண் போல் தெரிகிறது, ஆனால் அது உண்மையிலேயே ஆண், அதனுடைய பிறப்புறுப்பைக் கீழ்ப்பாகத்திலிருந்து பார்க்க முடிகிறது. அந்த உருவம் பெண் என தவறாகப் புரிந்துகொள்வதற்கு, பின்புறத்தில் முடி கொண்டையாக கட்டப்பட்டிருந்தது தான் காரணம், மத்திய காலங்களில் இது ஆண்கள் முடிவைத்திருக்கும் பாணியாக இருந்து வந்துள்ளது.





2. அவ்வப்போது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட மற்றொரு சிற்பம் தேவி ஜகதாம்பா கோயிலின் தெற்குச் சுவரில் உள்ளது. இங்குத் தாடியுடன்கூடிய ஒரு சைவ (கபாலிகா) துறவி, ஆடையற்ற ஒரு க்ஷபானகா சந்நியாசியை, ஒரு கையால் அவருடைய உறுப்பை பிடித்துக்கொண்டு மற்றொரு கையை உயர்த்தி அடிக்கும் தொணியில், தன்னுடைய சமய நெறியில் இணையுமாறு மிரட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த சந்நியாசி சரண்டைவதுபோன்று கைகளைக் கூப்பி இருப்பதாகக் காட்டப்படுகிறது. இந்த உருவங்கள், நீதியுரைக்கும் உருவகக் கதை நாடகமான ப்ரபோதாசந்திரோதயாவின் இரு கதாபாத்திரங்களை பிரதிநிதிக்கின்றன, இந்த நாடகங்கள் 11-ம் நூற்றாண்டில் கஜுராஹோ பிரதேசங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சிற்பக்கலை காட்சியில் எந்த ஒருபாற்புணர்ச்சி உறவும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

07 February 2010

இனி இலவசமாக சினிமா பார்க்கலாம்!

Posted by Gunalan Lavanyan 4:42 AM, under | No comments

உலகத் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்களை தமிழகமெங்கும் மக்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்டிவரும் அமைப்பு 'நிழல்கள்'. இதன் அமைப்பாளர் திரு ப.திருநாவுக்கரசு.

இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், 'சென்னையில் அவ்வளவாக திரையிடல்கள் நடத்த முடியவில்லை. அதற்கு இடப்பற்றாக் குறைதான் காரணம்' என்று 'டிஸ்கவரி புக்பேலஸில்' சனி (5.2.2010) அன்று நடைபெற்ற திரையிடலின்போது திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.

சென்னை - கே.கே.நகரில் பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் உள்ளது டிஸ்கவரி புக்பேலஸ். திரைப்பட உதவி இயக்குநனுரும், இலக்கிய வாசகரும், சிறுகதை எழுத்தாளருமான கயிலை மு.வேடியப்பன் இந்த புத்தகக் கடையை நடத்தி வருகிறார். சற்று பெரிய இடவசதியோடு அமைந்துள்ள இந்தப் புத்தகக் கடையில்... சினிமா திரையிடல்கள், புத்தக வெளியீடுகள், நூல் அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டங்களை இலவசமாக நடத்திக்கொள்ள அவர் அனுமதி வழங்குகிறார் வேடியப்பன்.

'அந்தவகையில், இனி ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை தோறும் நிழல்கள் அமைப்பு சார்பாக டிஸ்கவரி புக்பேலஸில் திரையிடல்கள் நடைபெறும்' என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு படம் திரைடலுக்கு முன்பும், பின்பும் அந்த படம் குறித்த அறிமுகத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நிழல் அமைப்பு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. திரைத்துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்களும் இந்தத் திரையிடலில் பங்கேற்று சினிமா மற்றும் அதன் தொழில்நுட்பங்கள், திரைப்பட உருவாக்கம் தொடர்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி தங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். இது வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

அடுத்தமாதம் மாதம் முதல் இந்தத் திரையிடலில் திரைப்பட முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

முதல் சனிக்கிழமை

நேற்று நடைபெற்ற பிப்ரவரி மாதத்துக்கான திரையிடலின்போது... தேசிய விருது மற்றும் பல்வேறு மாநில அரசு விருதுகளைப் பெற்ற 'கர்ண மோட்சம்' குறும்படமும், எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய 'குறடு' சிறுகதையை வைத்து எடுக்கப்பட்ட 'நடந்த கதை' குறும்படமும் திரையிடப்பட்டன. (நடந்த கதை இதுவரைக்கும் ஐந்து அமைப்புகளிலிருந்து விருது பெற்றுள்ளது.) மேலும் சில உலகப் படங்களும் திரையிடப்பட்டன. விழாவில் முதல் இரண்டு படங்களின் இயக்குநர்கள் முறையே முரளி மனோகர் மற்றும் பொன்.சுதா பங்கேற்று படம் எடுக்கும்போது ஏற்பட்ட தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

கர்ண மோட்சம்

அழிந்து வரும் தெருக்கூத்துக் கலையைப் பற்றிய படம். மிக மெல்லிய குரலில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட கதை. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். விமர்சனுக்கு உட்படுத்தக் கூடாத படம். இயக்குநனை அப்ரிஷியேட் செய்ய வேண்டும். கமர்ஷியல் சினிமாவுக்கு போனாலும் இது போன்ற மக்கள் படங்களையே எடுக்கவேண்டும் என்று முரளி மனோகருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

நடந்த கதை

அழகிய பெரியவன் கதை. கதை சொல்லியாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் அறிவுமதி. எங்கள் ஊர் (பேரணாம்பட்டு) சுற்றி கதை பின்னலோடு எடுக்கப்பட்ட படம். மட்டுமின்றி தலித் மக்கள் படும் வேதனையை ஆதிக்க சாதியினர் செய்யும் கொடுமையை தோலுரித்து காட்டக்கூடிய படம். ஆதிக்க சாதியினர் பார்க்கவேண்டிய படம். தலித் நண்பர்கள் இந்தப் படத்தை பார்க்காமல் இருந்தால் பார்த்துவிடுங்கள். சமூகத்தில் உள்ள அவலங்களை எதிர்த்து போராட ஊக்கமளிக்கும் கதை.

06 February 2010

காதல் தூது போன எம்.ஆர்.ராதா

Posted by Gunalan Lavanyan 12:08 AM, under | No comments

‘காதல்ல எல்லாம் குயில் விடு தூது, கிளி விடு தூதுன்னுவாங்க. இந்த ஜீவா, என்னைப் பிடிச்சாரு பாரு. அப்ப எவ்வளவு முரட்டுக் காதல் பாருங்க.’
- எம்.ஆர்.ராதா

அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், கட்சி ஊழியர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அப்போது, ஜீவாவுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாதான் அடைக்கலம் கொடுத்து, அவரைப் பாதுகாத்து வந்தார். அந்தநாட்களில் ஜீவா, ராதாவிடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் கொண்டுவந்து தன்னிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வது வழக்கம். ராதாவும் எந்தத் தயக்கமும் இன்றி இருவருக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வித்திடப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் அவரால் இருக்கவும் முடியவில்லை.
ஒருநாள் ஜீவாவைப் பார்த்து, ‘‘புரட்சி எப்போது வெடிக்கும்’’ என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ‘‘பொறுத்திருந்து பார்’’ என்று பதில் சொல்ல, ராதாவும் ‘ஏதோ கட்சி ரகசியமாக இருக்கும்போல் இருக்கிறது; அதனால்தான் அண்ணன் நம்மிடம் சொல்லத் தயங்குகிறார்’ என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்குகிறது. இப்போது ராதா, ஜீவாவிடம் அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி, ‘‘அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா?’’ என்று கேட்கிறார்.
அதற்கு ஜீவா, ‘‘ஆம் ஏற்பட்டது’’ என்று பதில் சொல்கிறார். ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ‘‘ஆனால், நீங்கள் நினைப்பது போல் அவை கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் ‘காதல் புரட்சி’ ஏற்பட்டது’’ என்று ஜீவா சொல்ல, அப்போது ராதா, சந்தோஷக் கிளர்ச்சியால் தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்திருக்கிறார்.