கிருஷ்ணவேணி பஞ்சாலை
80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்
கிருஷ்ணவேணி பஞ்சாலை
வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை
ஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்
17 January 2010
இனி நிம்மதியா சிரிங்க!
Posted by Gunalan Lavanyan
12:26 AM, under ஹெல்த் | 2 comments
ரமேஷ் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அவருக்குத் திருமணம் நிச்சயமானது. கல்யாணத்துக்கு ஒருமாதம் இருக்கும்போது மணமகளுக்குப் பிறந்தநாள் வர, ஊரிலிருக்கும் தமது வருங்கால மனைவியைப் பார்த்துப் பரிசு கொடுத்துவர, பைக்கில் புறப்பட்டார் ரமேஷ்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில், மகிழ்ச்சியுடன் 70 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பயணிக்க, ஒரு வளைவில் லாரியொன்று எதிர்பாராமல் முளைத்துத் திரும்ப, ரமேஷ் சுதாரிப்பதற்குள் விபத்து நடந்தேவிட்டது. அதிர்ஷ்டவசமாக ரமேஷ் சிற்சில காயங்களுடன் உயிர்தப்ப, அவரின் தாடை எலும்பு நொறுங்கி, முகம் வீங்கிவிட்டது. வாய் திறக்க முடியவில்லை. முகம் கோரமாகிவிட்டது. 'ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படியாகிவிட்டதே... மகனது வாழ்க்கை அவ்வளவுதானா?' என்று கண்கலங்கிவிட்டனர் ரமேஷின் பெற்றோர்.
ஆனால், ''மருத்துவம் இன்றைக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளதால் ரமேஷின் பெற்றோர் கண் கலங்க வேண்டிய அவசியமில்லை'' என்கிறார் சென்னை நந்தனத்தைச் சேர்ந்த முகச் சீரமைப்பு மருத்துவர் செந்தில் முருகன்.
'ரமேஷின் பிரச்னையை எப்படி சரிப்படுத்தலாம்' என்று அவரிடம் கேட்டால், மளமளவென்று வருகிறது பதில்.
''இதுபோன்று விபத்தில் அடிபட்டு முகம் காயமடையும்போது தாடை நொறுங்கியிருக்கும். வாய் திறக்க முடியாது; சாப்பிட முடியாது. மிகுந்த அவஸ்தையாக இருக்கும். இதற்கு முன்பெல்லாம் கம்பி கட்டி சிகிச்சையளித்து வந்தோம். பற்களுக்கு இடையே கம்பி விட்டு, மேல் தாடை, கீழ்த் தாடையை சேர்த்து வைத்துக் கட்டுவோம். இப்படிச் செய்வதால் நான்கைந்து வாரங்களுக்கு வாயைத் திறக்க முடியாது; உணவருந்த முடியாது.
ஆனால், ப்ளேட்டிங் என்றொரு நவீன முறை இருக்கிறது. டைட்டானியம் என்றொரு மினி பிளேட் கொண்டு உடைந்த எலும்புப் பகுதியைச் சேர்த்துவைத்து ஸ்க்ரூ செய்துவிடுவோம். இந்த சிகிச்சையில் எப்போதும் போல் வாய் திறக்கலாம்; மிக எளிதாகவும் குணம் பெறலாம். என்றாலும், இதிலும் ஒரு சின்னப் பிரச்னை உண்டு. இந்த சிகிச்சையில் பொருத்தப்படும் டைட்டானியம், மெட்டல் ஆதலால், இரண்டிலிருந்து நான்கு வருடங்களுக்குள் பொருத்தப்பட்ட இடத்திலிருந்து அதனை எடுக்க நேரிடலாம்.
இப்போது இன்னும் அட்வான்ஸாக ரிசார்பிள் பிளேட்ஸ் (Rechargeable plates) வந்துவிட்டன. இவற்றை வாயிலிருந்து எடுக்கத் தேவையில்லை. நம் உடம்பில் உள்ள fluids மூலமாகத் தானாகவே இவை கரையும் தன்மை வாய்ந்தவை"" என்ற மருத்துவரிடம்,
'முகச்சீரமைப்பு வேறு எதுயெதெற்கெல்லாம் செய்யப்படுகிறது' என்றோம்.
"குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடான உதட்டுப் பிளவு, அண்ணப் பிளவு போன்றவற்றுக்கு முகச் சீரமைப்பு சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது. கருவுற்ற காலத்தில் தாய்க்குப் போதிய ஊட்டச்சத்து இல்லாதது, வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொள்வது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்துகொடுப்பது போன்ற காரணங்களால்தான் இந்த அண்ணப் பிளவு, உதடுப் பிளவு போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால், குழந்தை தாய்ப்பால் குடிக்க முடியாது. பேச்சு சரியாக வராது. முகம் விகாரமாக இருக்கும். இதற்கான சிகிச்சையாக ஐந்தாறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படும். முதலில், உதடுப் பிளவுக்கு சிகிச்சை பிறகு அண்ணப் பிளவு. அப்புறம் இடுப்பெலும்பை எடுத்துப் பொருத்தும் ஒட்டறுவை சிகிச்சை என்று அறுவை பல நிலைகளில் நிகழ்த்தப்படும்.
ரிசல்ட் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கவனமுடன் செய்யப்படும் இந்த சிகிச்சைகளால் குழந்தைக்கு அதன் எதிர்காலத்தைச் சிறப்பாக மீட்டுத்தர முடியும்" என்ற மருத்துவர் செந்தில் முருகன், "முகச்சீரமைப்பு இன்றைக்குப் பல பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று பொடி வைத்துப் பேசினார்.
'எப்படி' என்றோம். சொல்லத் தொடங்கினார்.
"பெண்களுக்குத் திருமண வாழ்வு இன்றியமையாதது. இதில் முகம் பெரும் பங்கு வகிக்கிறது. பற்கள் சற்று எடுப்பாக இருந்தாலே சுயநல ஆண்களால் பெண்கள் நிராகரிக்கப்படும் நிலை இன்றைக்குக் காணப்படுகிறது. எடுப்பாக இருத்தல், தாடை சிறியதாக அல்லது பெரிதாக உள்ளது. முகம் கோணலாகக் காணப்படுவது என்று எந்தவொரு குறைபாட்டையும் சரி செய்து. பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியை முகச்சீரமைப்பு நிபுணர்கள் கொண்டுவருகிறார்கள்.
களிப்பில் ஆரம்பிக்கும் சிகிச்சை, அறுவை வரை உள்ளது. யாருக்கு எது தேவையோ அதைச் செய்கிறோம். செலவும் மிகமிகக் குறைவுதான்" என்ற மருத்துவர், "இப்போது புதிதாக நோயாளிகளிடம் ஒரு பிரச்னையை நாங்கள் சந்திக்கிறோம். மேல் தாடை சிறியதாகவும் கீழ்த் தாடை பெரியதாகவும் இருக்கும்போது ஒருவருக்கு முகம் Dish face மாதிரி இருக்கும். இதற்கு Micrognathia என்று பெயர். இக்குறைபாட்டுக்கு எலும்பு விரிவாக்க சிகிச்சை மிகச் சிறந்தது. Distractor என்னும் கருவி கொண்டு தாடை எலும்பைத் தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்து இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது. முன்பெல்லாம் இடுப்பிலிருந்து எலும்பு எடுத்து சிகிச்சை செய்யப்படும். இப்போது இந்த Distraction Osteogenesis என்கிற புதிய முறை வந்துவிட்டதால் எல்லாமே எளிதாகிவிட்டது. நோயாளிகள் இனி நிம்மதியாகச் சிரிக்கலாம்" என்றார்.
-சா.இலாகுபாரதி
2006, 9 ஜூலை கல்கி இதழில் வந்த கட்டுரை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 93வது பிறந்தநாள்
Posted by Gunalan Lavanyan
12:17 AM, under பாப்கார்ன் | 2 comments
15 January 2010
அவளும் அவனும் மட்டும்...
Posted by Gunalan Lavanyan
10:57 PM, under கவிதை | No comments
வானம் கறுத்து
கடற்கரையே காணாமல் போயிருந்த நேரம்.
மழைதான் வராமல் அடம்பிடித்தது.
அதைப் பார்த்து காற்று சும்மா இல்லை
வம்படியாக கைக்கொட்டிச் சிரிக்க,
அலையும் சேர்ந்துகொண்டு
கும்மாளமிட்டு பொங்கி நுரைத்தது.
இப்போது
வானம் சும்மா இல்லை
மின்னல் வேர் விட்டு வெடித்தது...
ஒளி, இடியுடன் கலந்து
பொத்துக்கொண்டு வந்தது
மழை.
காதல் பொருட்படுத்தாது
மையமிட்டிருந்தது கரையை...
மழைதான் என்ன செய்யும்..?
தூறல் குடை பிடித்துப் பார்த்துக்கொண்டது
காதலை.
அவளும் அவனும்
மழையின் குடையில் நின்று
இதழில் முத்தம் செய்யத் தொடங்கினர்...
இப்பவும் காற்று சும்மா இல்லை
குடையை வளைத்தது... நெளித்தது...
ஆனாலும், உடையவில்லை
குடை.
முத்தம் செய்தவர்கள்
இப்போது
விரல்களால் பேசத்தொடங்கினார்கள்...
அவள் இடை அவன் விரல்களோடும்
அவள் விரல்கள் அவன் கழுத்தோடும்
பேசிக்கொண்டிருந்தன...
வானம் மேகத்தோடும்
அலை கரையோடும்
காற்று மழையோடும் பேசி முடிந்தது.
இப்போது
காதல் காமம் பேசுகிறது...
யாரும் இல்லை கரையில்...
அவளும் அவனும் மட்டும்
குடை அந்தரத்தில் தொங்குகிறது...
மழை
தமிழ் சினிமா இழந்த பொக்கிஷம்! - எம்.ஆர்.ராதா வாழ்க்கைச் சுருக்கம்
Posted by Gunalan Lavanyan
10:29 PM, under வரலாறு | 2 comments
1907 ஏப்ரல் 14-ம் நாள், இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெட்ராஸ் ராஜகோபால் நாயுடுவுக்கும் ராஜம்மாளுக்கும் இரண்டாவது பிள்ளை பிறந்தது. ராஜகோபால் தன் தந்தை மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, தனக்கு இரண்டாவதாகப் பிறந்த ஆண் பிள்ளைக்கு தந்தையின் பெயரான ராதாகிருஷ்ணன் என்பதையே சூட்டி மகிழ்ந்தார். ராதாகிருஷ்ணன் ரொம்பவும் சூட்டிகையான பையன். படிப்பைக்காட்டிலும் விளையாட்டின் மீதே அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது.
அதற்கு ஒரு காரணம் உண்டு. குழந்தை ராதாகிருஷ்ணன் பள்ளிக்குச் செல்லும் வயது வந்ததும் பெற்றோர் அவனை பள்ளியில் சேர்த்தனர். ஆனால், பள்ளிக்குச் சென்றால் வாத்தியார் பிரம்பால் அடிக்கிறார்... என்ன செய்வது என்று யோசித்த ராதா... ‘இனி, பள்ளிக்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பிவிட்டு தனக்குப்பிடித்த பில் தோட்டத்தைச் சுற்றித்திரிவது’ என்று முடிவு செய்கிறான். ஒரு சைக்கிளையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஜாலியாக சுற்றுகிறான். தோட்டத்தில் குஸ்தி கற்றுக்கொள்கிறான்.
ஒரு நாள் வீட்டை விட்டு ஓடி எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறான் ராதா. ரயில் நிலையத்தில் அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவனை, பெரியவர் ஒருவர் அழைத்து, தனது பெட்டி படுக்கையை ரயிலில் கொண்டுவந்து வைக்கும்படி கேட்கிறார். பெரியவர் ஏதோ முடியாமல்தான் கேட்கிறார் என்று நினைத்த ராதா அவற்றைக் கொண்டுபோய் ரயில் பெட்டியில் வைத்துவிட்டு திரும்பும்போது, ‘இந்தாப்பா...’ என்று பெரியவர் கையில் காலணாவைத் திணிக்கிறார்.
கையில் நயா பைசா இல்லாதிருந்த ராதாவுக்கு காலணாவைப் பார்த்ததும் முகத்தில் ரொம்பவும் பொலிவு... ராதா அப்போது நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை; பின்நாட்களில் தாம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கப்போகிறோம் என்று.
சிறு பிராயத்தில் இருந்த ராதாவுக்கு நாடக உலகம் அறிமுகமாகிறது. ஜெகந்நாத ஐயர் நாடகக் கம்பெனியில் சேர்கிறான் ராதா.
1924-ல் ஐயரின் நாடகக் குழு ‘கதரின் வெற்றி’ என்ற நாடகத்தை நடத்துகிறது. அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக காந்திஜி தம்பதியரும், சீனிவாச ஐயங்கார், ராஜாஜி போன்றோரும் வருகின்றனர்.
நாடகத்தில் சிறுவன் ராதா, ‘பாயசம்’ என்ற நகைச்சுவைப் பாத்திரமேற்று நடிக்கிறான். நாடகத்தைப் பார்த்த ராஜாஜி, ‘‘பாயசமாக நடித்த பையனைக் கூப்பிடுங்கள், நான் பார்க்க வேண்டும்’’ என்றார்.
சிறுவன் ராதா வந்ததும் முதுகில் தட்டிக் கொடுத்து, ‘‘பாயசம் மிகவும் நன்றாக இருந்தது’’ என்று பாராட்டினார். அப்போது ராதாவுக்கு பன்னிரெண்டு வயது இருக்கும்.
ஒருமுறை ஐயரின் கம்பெனி இலங்கைக்குச் சென்றிருந்தது. அங்கு நாடகத்துக்கான நோட்டீஸ் அச்சடிக்க வேண்டியிருந்ததால் ஓர் அச்சகத்தில் நோட்டீஸுக்கு ஆர்டர் கொடுத்தனர்.
ஆனால், நோட்டீஸ் அச்சடிக்கும் பிரஸ்ஸில் திடீரென்று மிஷின் பழுதாகிவிட்டது. அச்சக உரிமையாளர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். தகவலை அறிந்ததும் கம்பெனி வாத்தியார் பொன்னுசாமிபிள்ளை ராதாவை அழைத்தார். விஷயத்தைச் சொன்னதும் ராதா அச்சகத்துக்கு விரைந்தார். பழுது சரி செய்யப்பட்டது. அச்சக உரிமையாளர் திகைத்துப்போய் நூறு ரூபாய் தாளை எடுத்து ராதாவிடம் நீட்டினார். அதுதான் ராதா பார்த்த முதல் நூறு ரூபாய். ராதா மெக்கானிக்காவும், எலக்ட்ரீஷியனாவும் டிரைவராகவும்கூட பணியாற்றியிருக்கிறார்.
1932-ம் ஆண்டு சென்னை பெரம்பூரில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, ‘மதுரை ஸ்ரீபாலகான சபா’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். பால்ய கால நட்பின் காரணமாக ராதா அந்தக் குழுவிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
1937-ம் ஆண்டு ‘ராஜசேகரன்’ என்ற சமூகப் படத்தில் வில்லனாக நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அதுதான் அவரது முதல் படம். அதே ஆண்டு ‘சேலம் மார்டன் தியேட்டர்ஸ்’ கம்பெனியாரால் தயாரிக்கப்பட்ட ‘சந்தனத் தேவன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததது. ஆனால், அப்படம் சரியாக ஓடவில்லை.
ராதாவின் நடிப்பைப் பார்த்து வியந்துபோன ‘மார்டன் தியேட்டர்ஸ்’ உரிமையாளர் டி.ஆர். சுந்தரம் ராதாவுக்காக ஆங்கிலப் படத்தின் கதையை மையப்படுத்தி ‘சத்திய வாணி’ என்ற படத்தை எடுத்தார். அதில் ராதாதான் கதாநாயகன். 1940-ல் வெளிவந்த அப்படமும் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. பார்த்தார் ராதா, தனக்கு திரைப்படம் சரிப்பட்டு வராது என்று நினைத்து மீண்டும் நாடக உலகிற்கே திரும்பினார்.
மெட்ராஸ் ராஜகோபால் நாயுடுவின் மகன் ராதாகிருஷ்ணனான எம்.ஆர்.ராதா, பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ராதாவுக்கு பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் மீது நிரம்பவே நம்பிக்கையும் பற்றும் உண்டு. அதன்காரணமாக 1943-ம் ஆண்டு ‘திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார்.
நாடக அரங்கில் வண்ணத் திரைச் சீலைகளையும் ஓவியத் திரைகளையும் தொங்கவிட்டால்தான் பார்வையாளர்களை வசீகரிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் இருந்த காலகட்டத்தில், தனது நாடகக் கம்பெனி சார்பாக நடத்தப்பட்ட நாடகங்களில் கருப்பு, வெள்ளை திரையை தொங்கவிட்டு அந்த மூடநம்பிக்கையை உடைத்தவர் எம்.ஆர்.ராதா.
அன்றைக்கு, பொதுவுடமை இயக்கம் என்றாலே தெரித்து ஓடியவர்கள் மத்தியில் ராதா, ‘உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகத்தை தாங்கிய திரையைத் தொங்கவிட்டு நாடகங்களை நடத்தி வந்தார். அப்போது பெரியார் கம்யூனிசத்தை ஆதரித்துவந்த காலகட்டம். பெரியார் என்ன செய்கிறாரோ அதையே தானும் பின்பற்றுவார் ராதா.
அதேபோல ராதாவுக்கும் பொதுவுடமைத் தலைவர் ஜீவாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.
அது ஜீவா தலைமறைவாக இருந்த சமயம். ஜீவாவுக்கு ராதாதான் அடைக்கலம் கொடுத்துவந்தார். அப்போது, ஜீவா ராதாவிடம் தொடர்ந்து கடிதங்கள் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்வாராம். அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் தன்னிடம் கொடுக்கும்படி சொல்வாராம். ராதாவும் எந்தத் தயக்கமும் இல்லாது அதைச் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வழிவகுக்கப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு நாள் ஜீவாவைப் பார்த்து, ‘‘புரட்சி எப்போது வெடிக்கும்’’ என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ‘‘பொறுத்திருந்து பார்’’ என்று பதில் சொன்னார்.
கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்கிய பின், ராதா ஜீவாவிடம் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி ‘‘அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா?’’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ஜீவா, ‘‘ஆம் ஏற்பட்டது’’ என்றாராம்.
ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ‘‘ஆனால், நீங்கள் நினைப்பது போல் அது கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் ‘காதல் புரட்சி’ ஏற்பட்டது’’ என்றாராம்.
அப்போது ராதா, தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்தாராம்.
‘கலை கலைக்காக; கலை மக்களுக்காக’ என்று இரண்டு கோஷங்கள் எழுந்தபோது, கலை மக்களுக்காகத்தான் என்று தன் நாடகங்களின் வழி உரக்கச் சொன்னவர் எம்.ஆர்.ராதா.
அதேபோல், ‘‘நாடகம், சினிமா போன்றவை சிறந்த பிரச்சார சாதனங்கள். எனவே, என் எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அவற்றின் வாயிலாக வெளியிட்டு வருகிறேன்’’ என்று சொன்னார் ராதா.
அவர், தரகு கலைஞர்களிடமிருந்து வேறுபட்டு இருந்தார். காசுக்காக கலையை அடகு வைப்பதை ஒருபோதும் அவர் செய்தது கிடையாது.
ராதாவின் நாடகங்களுக்கு கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, நாடகத்தில் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் சொல்வதை அவர் அதிகரித்தார். இதனால், நாடகம் நடக்கவிடாமல் சில விஷமிகள் கலவரத்தில் ஈடுபடுவர். அப்படி யாராவது கலவரத்தில் ஈடுபட்டால் ராதா மேடைக்கு வருவார்.
‘‘யார் கலாட்டா செய்றது..? நாடகம் உங்களுக்கு பிடிக்கலைன்னா உங்கள் பணத்தை திரும்ப வாங்கிக்கொண்டு போய்விடுங்கள். அனாவசியமாக மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். டைம் வேஸ்ட் பண்ணாதீர்கள்.
உங்கள் பயமுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். என் உயிருள்ள வரை நான் என் கருத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்’’ என்று முழங்குவார்.
ராதா கொள்கையை விற்றவரல்லர் என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளைச் சொல்லலாம். ராதா நடத்திய பன்னிரெண்டு நாடகங்களிலேயே ‘ரத்தக் கண்ணீர்’தான் உலக நாடக வரலாற்றில் 60 ஆண்டுகாலமாக (இன்றும் ராதவின் மகன் ராதாரவி, பேரன் வாசு விக்ரம் போன்றவர்களால் நடத்தப்படுகிறது) நடந்துவருகிறது. அது நாடகங்களிலேயே உச்சத்தின் உச்சம். ராதாவாலேயே ‘ரத்தக் கண்ணீர்’ 3021 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. அதேபோல், ‘தூக்குமேடை’ 800 நாட்களும், ‘லட்சுமி காந்தன்’ 760 நாட்களும், ‘போர்வாள்’ 410 நாட்களும், ‘இழந்த காதல்’ 190 நாட்களும், ‘ராமாயணம்’ 170 நாட்களும், ‘தசாவதாரம்’ 110 நாட்களும் அரங்கேறி சாதனை படைத்தன.
‘தூக்கு மேடை’ நாடகம் மு.கருணாநிதியால் எழுதப்பட்டது. ‘போர்வாள்’ சிந்தனைச் சிற்பி சிற்றரசுவால் உருவாக்கப்பட்ட நாடகமாகும்.
ராதாவின் நாடகங்களில் கலகக்குரல் ஓங்கி ஒலித்ததால் ஏறக்குறைய அவரது பல நாடகங்கள் தடை செய்யப்பட்டன. அதற்கெல்லாம் ராதா அஞ்சியதே இல்லை. ‘ரத்தக்கண்ணீர்’ தடை செய்யப்பட்டபோது ‘மேல் நாட்டுப் படிப்பு’ என்ற பெயரில் அந்த நாடகத்தை அரங்கேற்றினார். ‘தூக்கு மேடை’ தடை செய்யப்பட்டபோது, ‘பேப்பர் நியூஸ்’, ‘காதல் பலி’, ‘நல்ல முடிவு’ என பல பெயர்களைக் கொண்டு அந்த நாடகம் அரங்கேறியது. ‘போர்வாள்’ நாடகம் ‘சர்வாதிகாரி’, ‘நண்பன்’, ‘சுந்தர லீலா’, ‘மகாத்மா தொண்டன்’ போன்ற பெயர்களில் அரங்கேற்றப்பட்டது.
எதிர்ப்புகள்தான் ராதாவை உச்சத்தை நோக்கி நகர வைத்தன. திராவிடர் கழக மாநாடு என்றால் கட்சியின் கொடியேந்தி வெள்ளைக் குதிரையில் மாநாட்டு திடல் வரைக்கும் ராதா கம்பீரமாக பவனி வருவாராம். ஒரு முறை அப்படி அவர் குதிரை மீது வந்தபோது, விஷமிகள் அவரை தாக்கினார்கள். அடிமொத்தம் வாங்கிக்கொண்ட ராதா அந்த விஷமிகளைப் பார்த்து, ‘‘போதுமா, திருப்தியா..? இப்போ போரியா..?’’ என்று கேட்டாராம்.
சீர்திருத்தத்தைப் பற்றி பேசவே பயந்த அன்றைய நிலையில் ‘விதவையின் கண்ணீர்’ என்ற சீர்திருத்த நாடகத்தை நடத்தினார் ராதா. பல எதிர்ப்புகளுக்கு உள்ளானது அந்த நாடகம்.
‘‘அது சாஸ்திர சம்பிரதாயத்துக்கு விரோதமானது. அதை நடத்தினால் சமூகத்தின் அமைதி கெட்டுவிடும்’’ என்று பிற்போக்குவாதிகள் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போது அந்த மன்றத்தின் நீதிபதி கணேசய்யர். ஆசாரமாக வாழ்ந்து வந்த நீதிபதி, நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
‘இதோடு ராதாவின் ஆட்டம் அவ்வளவுதான்’ என்று பேச்சுகள் எழுந்தன. நீதிபதி நாடகத்தை தடை செய்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். நாடகத்தை முழுவதுமாக பார்த்த நீதிபதி மேடை நோக்கி விரைந்தார்... ஒரு நிமிடம் ராதாவைப் பார்த்தார்; கை நீட்டினார்... ராதாவும் கை கொடுத்தார்... குலுக்கினார் நீதிபதி. அவருக்கு நாடகம் பிடித்துவிட்டது.
ராதாவைப் பார்த்துச் சொன்னார், ‘‘சாட்சாத் மார்க்கண்டேயன் மாதிரி என்னிக்கும் நீங்க சிரஞ்சீவியா இருக்கணும். இந்த மாதிரி நாடகம் இங்கே மட்டும் நடந்தால் போதாது; இந்தியா முழுக்க நடக்கணும். நீங்களும் உங்கள் நாடகமும் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்’’ என்று கூறினார். வழக்கு தொடுத்தவர்கள் பேச முடியாமல் போயினர். ராதா எதிர் கருத்து உடையவர்களையும் தனது ஆழமான கருத்தால் கவர்ந்துவிடுவார் என்பதற்கு இது ஒரு சான்று.
பெரியார், ஜீவாவைப் போல் ராதாவுக்கு காமராஜர் மீதும் கருணாநிதி மீதும் மிகுந்த அன்பு உண்டு. கருணாநிதியின் ‘தூக்கு மேடை’ நாடகம் பெரிய வெற்றிபெற்ற போது, ராதாவின் பெயர் பெரும் புகழ் அடைந்தது. கலைஞன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராதா, அந்தப் புகழுக்குக் காரணமான கருணாநிதிக்கு, கலைஞர் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார். அதுவே இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
ஒரு கூட்டத்தில் பெரியார் பேசும்போது, ‘‘நாட்டில் எல்லாக் கலைஞர்களும் ரசிகர்கள் பின் செல்கிறார்கள். அவர்கள் மனம் திருப்திப்படும்படி எல்லாம் நடந்துகொள்கிறார்கள். நண்பர் ராதா அப்படிப்பட்டவர் அல்ல. தாம் ரசிகர் பின் செல்லாமல் ரசிகர் தம் பின்னால் வரவேண்டும். தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று விரும்புபவர். மக்கள் தமது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முற்பட்டாலும், முற்படாவிட்டாலும் நமது கருத்தை வலியுறுத்தி எடுத்துச் சொல்லத் தவறுவதே இல்லை’’ என்று பேசினார்.
தனது 85வது பிறந்தநாள் விழாவில் பேசிய அதே பெரியார், ‘‘அறிவு அற்றவர்கள் புராணக்கதைகளில் நடித்துக்கொண்டு அசிங்கத்தையே சொல்லி வருகிறார்கள். சிரிப்பின் மூலம் சிந்திக்கும்படி சட்டென்று சொல்லிவிடுகிறார் ராதா. மற்ற மடையர்கள் சொல்லவில்லை. ராதாதான் தைரியமாகச் சொல்கிறார். அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார். வண்ணான் துறையிலேயே படுத்துக்கொண்டு அங்கேயே வண்ணான் துணிகளை வாங்கி நாடகம் நடத்தினார். ரயில் கட்டணம்கூட இல்லாமல் திண்டாடினார். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு கொள்கையை மறக்காமல் எடுத்துக்கூறி திருப்பத்தை உண்டாக்கினார்.
சுயமரியாதைக் கருத்துக்களை எடுத்துச் சொன்னதால் ராதா ஒழிந்துவிடவில்லை. வாழ முடியாமல் போனதுமில்லை. ஆகவே, மற்றவர்கள் திருந்தி அவரைப் பாராட்ட வேண்டும். ராதா வாழ்க. ராதாதாவைப் போல் மற்றவர்களுக்கும் புத்தி வரட்டும்’’ என்று சமூக சிந்தனையற்றவர்களைப் பார்த்து கடிந்துகொண்டார்.
ராதா, பெரியார் பேச்சை தட்டாதவர். அவர் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறார் என்றால் அதை செய்வார். காங்கிரஸ்காரர்களை ஆதரிக்கிறார் என்று தெரிந்தால் அவரும் காங்கிரஸை ஆதரிப்பார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா 1952-ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் ‘போர்வாள்’ என்ற நாடகத்தை நடத்தினார். அப்போதுதான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவருக்கு நடிகவேள் என்ற பட்டத்தைச் சூட்டினார்.
சினிமாவில் நடித்து புகழடைந்துவந்த காலகட்டத்தில்கூட நடிகவேள் நாடகத்தை மறந்துவிடவில்லை. அவருக்கு சினிமா உடல் என்றால், நாடகம்தான் உயிர். உயிர் இன்றி உடல் அசையாது என்பதை உணர்ந்திருந்தார் ராதா.
சிறந்த நடிகன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு முறை ராதா சொன்ன பதில், ‘‘நேராக சினிமாவில் சேர்ந்த எவனும் நடிகனாக மாட்டான். சிறந்த நடிகன் சினிமாவிலிருந்து வெளிவர முடியாது. ஒரு ரீடேக் இல்லாமல் மூன்று மணி நேரம் நாடகத்தில் நடித்து எவன் மக்களை தன்வசப்படுத்துகிறானோ அவனே சிறந்த நடிகன்.
அதல்லாமல் ஒருவனுக்கு வசனத்தைக் கொடுத்து அதே காட்சியை இரண்டாயிரம் மூவாயிரம் அடிகள் வரை பல கோணங்களில் எடுத்து எந்தக் கோணத்தில் எடுத்தக் காட்சி நான்றாக இருக்கிறது என்று பார்த்து சேர்க்கிறார்களோ அவனெல்லாம் சிறந்த நடிகனாக மாட்டான்’’ என்று நடிகனுக்கான வரையறையைச் தெளிவாகச் சொன்னார். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றில்லாமல், அதை தானே செயல்படுத்தவும் செய்தார். அதுதான் ராதா.
ராதாவின் நடிப்பு ஆங்கில நடிகர் டக்ளஸ் பேர்பாங்ஸுக்கு இணையாக இருந்ததால் அவர் நடித்து வெளிவரும் படங்களின் போஸ்டர்களில் ‘இண்டியன் டக்ளஸ்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
‘ரத்தக்கண்ணீர்’ படமாக்கப்பட்டபோது இதற்குமுன் கே.பி.சுந்தராம்பாள் வாங்கிய ஒருலட்ச ரூபாயைவிட தனக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகம் தர வேண்டும் என்று கேட்டு வாங்கினார் ராதா. பண விஷயத்தில் அவர் கரார் பேர்வழி. சினிமாவை அவர், ஒரு பணம் காய்க்கும் மரமாகத்தான் பார்த்தார். அதனால்தான் எந்தப் படமானாலும், தனது கேரக்டர் என்ன என்றுகூட கேட்காமல் சம்பளம் என்ன என்றுதான் கேட்பார். ஆனால், நாடக உலகில் அவர் அப்படியில்லை.
1978-ல் ‘தூக்குமேடை’ நாடகத்தைப் பார்த்த கலைஞர், ராதாவின் நடிப்பைப் பற்றி, ‘‘நடிப்பை, தலைமுடியின் ஆட்டத்திலேயே காட்டிய நடிகர் ஒருவர் இந்த நாட்டில் உண்டென்றால் அது ராதாதான்’’ என்று பேசினார்.
அத்தகைய நடிப்பின் உச்சத்தை தொட்ட ராதாவை இந்திய அரசு பெரிய அளவில் கௌரவிக்கவில்லை. தமிழக அரசு ‘கலைசிகாமணி’ என்ற விருதை மட்டும் வழங்கியது. அது இப்போது ‘கலைமாமணி’ விருதாக பெயர் மாற்றப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனே தான் ராதாவைப் பார்த்துதான் நடிக்கக் கற்றுக்கொண்டதாக ஒருமுறை அவரது மகன் ராதாரவியிடம் கூறியிருக்கிறார்.
நடிப்பின் இமாலயமாக திகழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, பெரியாரோடு 40 ஆண்டுகாலம் இருந்த ராதா, அவரது 101-வது பிறந்தநாளான 1979 செப்டம்பர் 17 அன்று தனது நடிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். தமிழ் சினிமா ஒரு பொக்கிஷத்தை இழந்துவிட்டது.
- சா.இலாகுபாரதி
‘கவிஞர் அறிவுமதி இயக்கும் படத்தில் கவிக்கோ அப்துல்ரகுமான் பாடல்கள்’
Posted by Gunalan Lavanyan
1:45 PM, under பேட்டி | 4 comments
தாய்க் கோழியின் கால்கள் போகிற திசையெல்லாம் ஓடித் திரியும் கோழிக்குஞ்சு போல 80-களின் தொடக்கத்திலிருந்து கவிக்கோ அப்துல்ரகுமானின் விரல் பிடித்து நடந்தவர் கவிஞர் அறிவுமதி. இருவருக்கும் இடையில் தாய்க்கும் சேய்க்குமான உறவு இருந்தாலும், ஒரு குருவிடம் சிஷ்யன் கொண்டிருக்கிற பயத்தையும் பக்தியையும் ஒன்றாகக் கலந்து கவிக்கோ மீது அளவற்ற மரியாதை வைத்திருந்தார் அறிவுமதி. இந்த இரண்டு கவிமனசுகளையும் இணைக்கும் உணர்வு இழையைப் பற்றி கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சு நெகிழப் பேசுகிறார்கள் இருவரும்.
முதலில் கவிக்கோ தொண்டையை கனைத்தபடி, கண்கள் விரித்துப் பேசத் தொடங்கினார்...
“அது 1982. அதிகமாக நான் கவியரங்கங்கள் நடத்தி வந்த காலம். அந்தச் சமயத்தில்தான் நானும் தொழிற்சங்கத் தலைவர் சு.வெங்கடேசனும் இணைந்து பாரதி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த விழாவுக்கு கலைஞர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. அந்த விழாவுக்கு சில நாட்களுக்கு முந்தான் அவர் திருச்செந்தூர் நடைபயணம் போய்விட்டு களைப்போடும், கால்களில் கொப்பளத்தோடும் வந்திருந்தார். அதைப் பார்த்தபிறகு அதற்குமேல் அவரை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால் கவியரங்கத்துக்கு சிற்பி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் அறிவுமதியோடு இன்னும் சிலர் கவிதை வாசித்தனர். வாசித்தவர்களிலேயே அறிவுமதியின் கவிதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. விழா முடிந்து அறிவுமதியை சந்தித்து, ‘இனி நான் நடத்துகிற எல்லா கவியரங்கங்களிலும் நீ தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறிவிட்டு போய்விட்டேன்.
சில நாட்கள் ஓடின. வாணியம்பாடியில் நான் நடத்தி வந்த ஹைக்கூ கவிதைகளுக்கான ‘ஏதேன்’ இலக்கிய அமைப்பில் கவிதை வாசித்தார். அதில் நான் சில திருத்தங்கள் செய்தேன். அவருக்கும் அது பிடித்துப்போகவே தொடர்ந்து நடக்கிற ஹைக்கூ வகுப்பில் கலந்துகொள்ளத் தொடங்கினார். அதேபோல நான் நடத்துகிற கவியரங்கங்களிலும் தவறாமல் வந்து கலந்துகொள்வார்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் வீட்டுக்கு வந்துவிடுவார். சில சமயம் குடும்பத்தோடு வருவார்; வருகிறார் என்றால் சும்மா வரமாட்டார். கவிதை பற்றி ஏதாவது யோசனையோடு வருவார். சந்தேகங்களை அடுக்குவார். ஒவ்வொன்றாய் நான் உடைத்து, எளிதாக தெளிவுபடுத்துவேன். இந்த இடத்தில் ஒன்று சொல்லிவிடுகிறேன்... அதாவது எதைச் சொன்னாலும் கற்பூரத்தைப் போல பிடித்துக்கொள்வார்.
பொதுவாக இரவு நேரத்தில்தான் எல்லோரும் தூங்குவார்கள். ஆனால், அவர் வந்துவிட்டால் விடியவிடிய என்னிடம் கவிதை கேட்பார். நான் ஜப்பானிய ஹைக்கூக்களையும், உருது கஜல்களையும், பாரசீகக் கவிதைகளையும் அந்த நட்ட நடு நிசியில் அவருக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருப்பேன். சில மார்கழி இரவுகளில் கவிதையே எங்களுக்குப் போர்வையாகிவிடும். மதி தொடர்ந்து எழுதுவார். அவர் கவிதைகளில் இருந்த கவித்துவம் என்னை மிகவும் ஈர்த்தது. நான் அவர் கவிதைகளின் ரசிகனாகிவிட்டேன்.
ஒருமுறை என்னிடம் இருந்த ஜப்பானிய ஹைக்கூ புத்தகத்தை எல்லாம் எடுத்துக்கொண்டுபோய் என்னோடு படித்த தி.லீலாவதியிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னேன். அப்போது அவர் ராணி மேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். அவரும் அதை ஆர்வத்தோடு வாங்கி மொழிபெயர்த்துக் கொடுத்தார். அந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளை நான் அறிவுமதியிடம் படிக்கச் சொல்லி கொடுத்தேன். அவரும் கவிதைகளைப் படித்தார். அந்தக் கவிதைகளின் ஈடுபாட்டால் ஹைக்கூ கவிதைகள் எழுதி வந்து என்னிடம் காண்பிக்கவும் செய்தார்.
கவிதைகளைப் பார்த்து மகிழ்ந்துபோய், ‘மதி! இன்னும் சில கவிதைகளை எழுது, ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்பாக போட்டுவிடலாம். அப்படி அந்த தொகுப்பு வரும்போது அது உனக்குப் பெருமை சேர்க்கும். இதுவரை தமிழில் யாருமே செய்யாத இந்த வேலையை நீ செய். தமிழில் முதன் முறையாக ஹைக்கூ கவிதைகள் எழுதிய பெருமை உன்னைச் சேரட்டும்” என்று சொல்லி அனுப்பினேன். இவரோ ஆர்வத்தில், தான் படித்தது மட்டுமின்றி மற்றவர்களும் பயன் பெறட்டுமே என்ற நல்ல நோக்கில் வேறொரு கவிஞரிடம் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புத்திசாலிக் கவிஞரோ, லாட்ஜில் ரூம் போட்டு அந்தக் கவிதைகளிலிருந்து தான் பெற்ற தாக்கத்தால் ஒரு ஹைக்கூ தொகுப்பையே எழுதிவிட்டார். எழுதியது மட்டுமல்லாமல், ‘தமிழில் முதன் முறையாக ஒரு ஹைக்கூ தொகுப்பு’ என்று அச்சடித்து, அறிவுமதி வெளியிடுவதற்கு முன்கூட்டியே அதை வெளியிட்டுவிட்டார். நாகரிகம் கருதி அந்தக் கவிஞர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.
ஒருமுறை தி.நகரில் அலுவலகம் போட்டு, படம் இயக்கப் போவதாக அறிவுமதி சொன்னார். அதில் நான் பாடல் எழுத வேண்டும் என்றும் கேட்டார். அந்த நேரத்தில் படத்தின் தலைப்பு, இசையமைப்பாளரின் பெயரோடு என் பெயரையும் சேர்த்து போஸ்டரில் அடித்திருந்தார். அதில் பலருக்கு ஆச்சர்யம்! ‘எப்படி அப்துல்ரகுமானை சம்மதிக்க வைத்தாய். இதற்கெல்லாம் அவர் ஒப்புக்கொள்ள மாட்டாரே’ என்று ஆச்சர்யப்பட்டவர்கள் கேட்டனர். அவர்கள் சொன்னதைப் போலவே நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் ஏனோ படமும் நின்றுபோனது.
அறிவுமதி நிறைய இடத்தில் என்னை குருவாக சொல்லுவார். ஆனால், ஒரு இடத்தில் மட்டும் அவர்தான் எனக்கு குரு. ‘ரொம்பவும் நல்லவனாக இருந்தால் வாழ முடியாது’ என்பதை அவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்” என்று நிறுத்தியவர் சிஷ்யனின் தோளில் கை போட்டு, “தம்பி பேசு” என்று தட்டிக் கொடுத்தார்.
அன்பின் பெருங்கரங்கள் தன்னைத் தழுவியதும் நெகிழ்ந்துபோன அறிவுமதி மெல்லிய குரல் எடுத்துப் பேசத் தொடங்கினார்.
“என்னை அய்யாவிடம் அறிமுகப்படுத்தியது அண்ணன் மீராதான். மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் நான் படித்த கவியரங்கக் கவிதையைக் கேட்டுவிட்டு அங்கிருந்த மீரா அண்ணன் ஏராளமான பார்வையாளர்களையும் கடந்து வந்து என் கைகளைப் பிடித்து குலுக்கினார். பிறகு, அய்யாவுக்குத் தொலைபேசி செய்து, ‘மாநாட்டில் அறிவுமதி என்கிற பையன் சிறப்பாக கவிதை வாசித்தான். நீங்கள் அவனை வாணியம்பாடிக்கு அழைத்து உங்கள் கவியரங்கங்களில் பயன்படுத்தினால், சிறப்பாக வருவான்’ ” என்று உரிமைமையோடு கூறினார். இருவரும் தியாகராயர் கல்லூரியில் வகுப்புத் தோழர்களாக இருந்ததும் அந்த உரிமைக்குக் காரணம்.
இதை மனதில் வைத்திருந்த அய்யா, வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி முத்தமிழ் மன்ற விழாவில் சிறப்பாக நடைபெறும் ‘கவிராத்திரி’க்கு என்னையும் வந்து பங்குபெறுமாறு அன்போடு அழைத்தார். அதில் எனது கவிதைகளையும் கவிதை வாசிப்பு முறையையும் கேட்டுவிட்டு மிகவும் மகிழ்ந்தார்.
அதேபோல, சென்னை புதுக்கல்லூரிக்கு எதிரில் உள்ள பஞ்சாப் நிறுவன பள்ளியொன்றில் ஆண்டுக்கு ஒருமுறை ‘முஷைரா’ என்கிற ‘கவிராத்திரி’ விடியவிடிய நடக்கும். அதற்கு என்னை அழைத்துச் சென்று பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு, இந்தியாவின் பல இடங்களிலிருந்து வந்த கவிஞர்களின் கவிதைகளை ‘அடடே...’ போட்டு வியந்து ரசித்தபடியே எனக்கு மொழிபெயர்த்துச் சொல்லும் அழகே அழகு. அந்த ரசனைக்காரர் எனக்கு மொழிபெயர்த்துச் சொன்ன ஒரு ரசமான கவிதை இப்பவும் நெஞ்சில் அப்படியே ஒட்டிக்கிடக்கிறது...
‘அவளது கண்களின்
ஆழத்துக்குள்
எட்டிப்
பாருங்கள்...
சமுத்திரத்தின் ஆழத்துக்குள்
ஒரு சமுத்திரம்
கிடைக்கலாம்!’
இப்படி இனிக்க இனிக்க அவர் சொல்லச் சொல்ல, கை வலிக்க வலிக்க நான் எழுதிக்கொண்ட பக்கங்கள் ஏராளம்.
பல சிரமங்களுக்கு இடையில் உதவி இயக்குநராக திரைத்துறையில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த நேரத்தில், ஒருநாள் எனக்குத் தந்தி வந்தது. அதில் ‘உடனே வாணியம்பாடிக்கு புறப்பட்டு வரவும்’ என்று மட்டும் அய்யா எழுதியிருந்தார். நான் என்னவோ ஏதோ என்று பதறியடித்துக்கொண்டு ஓடினேன். என்னைப் பார்த்ததும் அருகில் வந்தார். ஒரு தோழனைப் போல் தோள்களை அணைத்துச் சொன்னார்... ‘உனக்கு திரைப்படத் துறை சரிப்பட்டு வராது. அதனால், ஆம்பூர் இசுலாமியா கல்லூரியில் நாளை முதல் நீ தமிழ்ப் பேராசிரியராக பணியாற்று’ என்று கட்டளையிட்டார். அன்று மாலையே என்னை வாணியம்பாடி நகருக்கு அழைத்துச் சென்று, ஒரு மகள் தனிக்குடித்தனம் போவதற்கு ஒரு தாய் என்னென்ன செய்வாளோ அவை அத்தனையும் அய்யா எனக்குச் செய்தார். பாய், தலையணை, பானை, துடைப்பம் என்று சகலத்தையும் விலைபேசி வாங்கி, அதை என் கையில் கொடுத்து, பின்னிருக்கையில் பிடித்துக்கொண்டு உட்காரச் சொல்லிவிட்டு அவரது செல்ல டி.வி.எஸ்.50-ல் அழைத்துச் சென்று ஓர் அறை எடுத்து என்னை தங்க வைத்த நினைவு இப்பவும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.
எந்த ஊர், எந்தச் சாதி, எந்த மதம் என்று எதுவுமே பார்க்காமல் என்னிடமிருந்த தமிழை மட்டுமே பார்த்து, ‘முன்னா... முன்னி...’ என்று அவர் செல்லமாக அழைக்கிற இரண்டு பிள்ளைகளோடு என்னையும் ஒரு மூன்றாவது பிள்ளையாக ஏற்று வளர்த்த அந்த உயர்ந்த மனது அய்யாவுக்கே உரியது.
அய்யாவுக்குத் திரைத் துறையில் படைப்பாளிகளை தரம் தாழ்த்தி நடத்துவதைத்தான் பிடிக்காதே ஒழிய, மற்றபடி திரைப்படங்களில் வருகிற பாடல்களில் அவர் கேட்ட நல்ல வரியைப் பற்றி என்னோடு பேசுவார். ‘மதி இந்த வரியை யார் எழுதியது. இந்தப் பாட்டு யாருடையது’ என்று ஆர்வத்தோடு கேட்கும்போது, மிகப் பெரிய கவிஞன், ‘ஒரு திரைப்பாடலில் ஒளிந்துகொண்டிருக்கிற நல்ல வரிகளை எப்படித்தான் தேடிப் பிடிக்கிறாரோ’ என்று வியந்துகொள்வேன்.
அவர் கற்பனைகளில் பயணம் செய்யும் கலாரசிகன் மட்டுமல்ல, களத்திலும் தன்னை நிரூபிக்கும் நெஞ்சுறுதிக்காரர்.தமிழீழப் பிரச்னை தொடங்கிய காலத்தில் மூன்றே நாட்களில், வாணியம்பாடியைச் சுற்றிய பகுதிகளில் மக்களைச் சந்தித்து ஏறக்குறைய இரண்டு லட்ச ரூபாய் வசூல் செய்து, ஈழக் கவிஞர் காசி ஆனந்தனை அழைத்து, அவரை மேடையில் பேசச் செய்து, ஈழத் தமிழர்களுக்கு அந்தத் தொகையை நன்கொடையாக வழங்கினார். கடல் கடந்து வாழும் தமிழர்கள் மீதும் அவர் வைத்திருக்கிற அபிமானத்தை அப்போது என்னால் நேரடியாகப் பார்க்க முடிந்தது.
இப்படிப்பட்ட என் குருநாதர், என் தாய், என் தோழர், என் கவிக்கோவுக்கு ‘கண்ணதாசன்’ இதழைப்போல ‘அப்துல்ரகுமான்’ என்ற இலக்கிய இதழ் நடத்த விரும்பி தொடங்கினேன். பிறகு அது ‘கவிக்கோ’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. அவரது உடல்நிலை காரணமாக அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது.
அவர் என்னை வளர்த்தாரே தவிர, என் கொள்கைகளைக் கேள்வி கேட்கவில்லை. என் பயணத்துக்கு வழி காட்டினாரே தவிர, என் பாதையை மாற்றவில்லை. இதுபற்றி அவரே ஒருமுறை கூறியிருந்தார்...
‘அறிவுமதி
என் வளர்ப்பு.
ஆனால்,
என் வார்ப்பு
அல்ல!’
அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை”
ஆமாம். அவரவர் சுயம் அவருக்கன்றோ!
சந்திப்பு: சா.இலாகுபாரதி
photo courtesy: vikatan deepavali malar 2009
photo courtesy: vikatan deepavali malar 2009
14 January 2010
சமுதாயத்துக்கு உதவி செய்யுங்கள்... - சுதா ரகுநாதன் பேட்டி
Posted by Gunalan Lavanyan
1:50 AM, under பேட்டி | No comments
கர்நாடக இசை உலகில் சுதா ரகுநாதனுக்கு என்று தனியிடம் உண்டு. இவர் குரலுக்கு உருகாத இசை ரசிகர்களே இல்லை. கார்மேகம் சூழ்ந்து ஜில்லென்று மழை பெய்தால் உடல் எப்படி குளிருமோ, அப்படி இவர் பாடக் கேட்டால் காதும் குளிரும். டிசம்பர் சீஸன் வந்தால், இவர் பாட்டு இல்லாமல் சீஸன் களைகட்டாது. ‘திரை இசையிலும், கர்நாடக இசை உலகிலும் கொடிகட்டிப் பறந்த எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யை என்று சொல்லிக்கொள்வதில் பெருமையாக இருக்கிறது’ என்று சொல்லும் சுதா ரகுநாதனை பேட்டிக்காக அபிராமபுரத்தில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தோம். சுதாவின் வீட்டுக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட விருதுகள் நம்மை வரவேற்கின்றன. விருதுகளாலேயே அலங்கரிக்கப்பட்டிருக்கிறது வீட்டின் வரவேற்பறை. ‘கிட்டத்தட்ட இசைக்காகக் கொடுக்கப்படும் எல்லா விருதுகளையும் வாங்கிவிட்டீர்களோ’ என்று சந்தேகத்தோடு கேட்டால் ‘கொல்’லென்று இசையாகவே சிரிக்கிறார். டெல்லியில் ‘இந்திர பிரஸ்தா’ இசைப் பண்டிகைக்கு போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவரிடம், பயணக்களைப்பு என்பதே இல்லை.இந்திர பிரஸ்தாவைப் பற்றிச் சொல்லுங்கள்...
டெல்லி மாநில அரசும், சாகித்திய கலா பரிஷத்தும் இணைஞ்சி நடத்துறதுதான் இந்திர பிரஸ்தா. இது இசைக்கான முழு திருவிழா. இந்தியாவின் முக்கியமான மொழிகளின் இசைச் சங்கமம். இந்திய அளவுல புகழ்பெற்ற நிறைய கலைஞர்கள் வந்து பாடுவாங்க. இந்த வருஷம் நான்தான் தமிழகத்தோட பிரதிநிதி. ஒருபக்கம் இந்துஸ்தானி, மறுபக்கம் ‘கர்நாடிக்’ன்னு இசைத் திருவிழா ரொம்ப ஜோர்” சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அடுத்த கேள்விக்கு முன்னோட்டமாக எங்கிருந்தோ ‘அனல் மேலே பனித்துளி’ பாடல் வந்து காதில் விழுந்தது.
‘வாரணம் ஆயிரம்’ படத்தில், ‘அனல் மேலே பனித்துளி’ பாடல் பாடிய அனுபவம் எப்படியிருந்தது?
‘‘இந்தப் படத்துக்கு முன்புவரைக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் - தாமரை கூட்டணிக்கு பாம்பே ஜெயஸ்ரீதான் ஸ்லோ மெலடி பாடல்களைப் பாடிட்டு இருந்தாங்க. ஏனோ, இந்தப் படத்துல ஒரு வித்தியாசத்தை அவங்க எதிர்பார்த்தாங்க. ரெக்கார்டிங் வரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்துச்சு. மிட் நைட்லதான் ரெக்கார்டிங். பாடல் வரிகள் பார்த்தேன், அசத்தல். கவிதையா தாமரை எழுதியிருந்தாங்க. தூக்கம் போயேபோச்சு! ஹாரிஸ் சொன்னபடி பாடினேன். புதிய காம்பினேஷன் கிளிக்!”
‘அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி
இவைதானே இவள் இனி’
- சுதாரகுநாதனின் குரலில், மனசு மழையில் நனைகிறது. வெளியேயும் மழை கொட்டத்தொடங்கியதுதான் ஆச்சரியம்! மழை வந்ததால் இந்தப் பாடல் வந்ததா? இந்தப் பாடல் பாடியதால் மழை வந்ததா?
‘அனல் மேலே பனித்துளி’க்குப் பிறகு சினிமாவுக்கு நிறைய பாடுகிறீர்களா?
‘‘வாய்ப்பு நிறைய வருது. ஆனா, கச்சேரி இருப்பதால் ஒப்புக்கொள்ள முடியலை. இருந்தும் இடையிடையே மூணு பாட்டு பாடிட்டேன். சூர்யா நடிக்கிற ‘ஆதவன்’ படத்தில ஒரு பாட்டு பாடியிருக்கேன்.” என்கிற சுதா இதுவரைக்கும் சினிமாவுக்காக டஸன் பாடல்கள்தான் பாடியிருக்கிறாராம்!
டிசம்பர் சீஸன் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘ஸ்கூல், காலேஜ் டேஸ்ல ஸ்டூடன்ட்ஸ் பரீட்சைக்கு எப்படி தயாராவாங்களோ அப்படிதான். பரீட்சைக்கு பத்துநாள் முன்பாகத்தானே மாணவர்கள் படிக்கிறாங்க. நானும் அப்படித்தான். சீஸனுக்கு பத்துநாள் முன்புதான் பிரிபரேஷன்ல உட்காருவேன்.
டிசம்பர் வருதுன்னாலே எனக்கு கொஞ்சம் ஃபியர்தான். ரசிகர்களை திருப்திப்படுத்தணும். சபாக்காரர்களுக்கு ஏத்தாமாதிரி பாடணும். நான் பிரிப்பேர் பண்ணிவெச்சிருக்கிற பாடல்களைப் பாடணும். புதுசா சில ராகங்கள், கீர்த்தனைகள். இப்படி நிறைய எதிர்பார்ப்புகள். இதை எல்லாத்தையும் பூர்த்தி செஞ்சி கச்சேரியைக் கொண்டுபோகணும்.
முன்னாடியெல்லாம் டிசம்பர்ல இருபத்தஞ்சு கச்சேரிகள் வரை பாடிட்டிருந்தேன். இப்ப கொஞ்சம் கொஞ்சமா குறைச்சி பதினஞ்சிலிருந்து இருபது கச்சேரிகள் வரை பாடுறேன். ‘டிசம்பர்’ன்னாலே 180 பாடல்களாவது தயார் செய்யவேண்டியிருக்கு. தவிர, வருஷந்தோரும் சீஸனுக்கு என்னோட ஆல்பம் ரிலீஸ் பண்ணுவேன். அதுக்காகவும் பாட்டுகள் ரெடிபண்ணணும்.
இடையில விநாயகர்சதுர்த்தி, நவராத்திரி மாதிரி நிறை ஃபெஸ்டிவல்ஸ். அதுக்கும் நேரம் ஒதுக்கி ரெடியாகணும்; கச்சேரிகள் போகணும். தியாகராஜர், சியாமாசாஸ்திரி போன்ற இசை பிரம்மாக்கள் கடலளவு பாடல்கள் எழுதியிருக்காங்க. பாரதி, பாரதிதாசனின் தமிழிசைப் பாடல்களும் நிறைய இருக்கு. எல்லாத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தாகணும். இப்படி சீஸனுக்கு முன்னும் பின்னும் நிறை மெனக்கெடல் தேவையிருக்கு. அப்படி மெனக்கெடாட்டா கச்சேரி களைக்கட்டாது” என்கிற சுதா ரகுநாதனின் கச்சேரியில், ராகம்தான் ப்ளஸ். அவர் பாடும் பாடல்களில் ராகத்துக்குத்தான் மெயின் ரோல்.
உங்கள் கச்சேரியில் என்ன விசேஷம்?
‘‘என் பாட்டுதான். ரசிகர்களை எழுந்திரிக்காமல் உட்கார வைக்கணும்னா பாடுற ஒவ்வொரு பாட்டும் கலகலன்னு இருக்கணும். அந்தமாதிரி பாடல்களைத்தான் செலக்ட்பண்ணுவேன். என் கச்சேரிக்கு சோகமான மனநிலையில் ஃபேன்ஸ் வந்தாலும் போகும்போது மனம் நிறைய மகிழ்ச்சியோடுதான் போவாங்க. காரணம், என் பாடல்களில் ராகத்துக்கும் தாளத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து கச்சேரியை கலகலன்னு கொண்டுபோவேன். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்க்குறாங்க. நான் ஆலாபனைக்கு நேரம் அதிகம் ஒதுக்குறதில்லை. ஸ்ட்ரெயிட்டா ராகத்துக்கே போயிடுவதுதான் என் பாணி. அதுதான் விசேஷம்.”
எந்த ராகங்களை நீங்கள் அதிகம் பாடுகிறீர்கள்?
‘‘72 மேளகர்த்தா ராகத்துல பிரதிமத்திம ராகம் 36. சுத்தமத்திம ராகம் 36. நான் அதிகம் பாடுவது கல்யாணி, தர்மவதி, ஷண்முகப்ரியா மாதிரியான பிரதிமத்திம ராகங்கள்தான்.
ஒரு கூடுதல் தகவல்: நிறைய சினிமாப் பாடல்கள் பிரதிமத்திம ராகங்கள்லதான் பாடுறாங்க” என்கிற சுதா ரகுநாதன் தமிழ் உட்பட தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி என்று கிட்டத்தட்ட 10 பத்து மொழிகளில் பாடுவார்.
பாட்டுக்கு எது முக்கியமாக நீங்கள் கருதுகிறீர்கள்?
‘‘எமோஷன். ப்பாவம்தான். ப்பாவம் இல்லாம பாடினா உப்புச்சப்பு இல்லாத சாப்பாடுமாதிரிதான் பாட்டும். மேகத் திரள்கள் ஒன்றுகூடி மழை பொழிகிறமாதிரி எமோஷன் இருக்கணும். அப்படி பாடினா வராத மழையும் வரும்” வெளியில் மழை இன்னும் ஜோராகக் கொட்டிக்கொண்டிருந்தது.
உங்கள் குருவைப் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘இந்த இசைத் துறையில் நான் இவ்வளவு தூரம் வளர்ந்தது, புகழ் பெற்ற பல விருதுகள் பெற்றதெல்லாம் என் குரு இல்லாம நடந்திருக்காது. இசைத் தவிர, ‘வாழ்க்கைக்கு எது நல்லது? எது தேவையற்றது’ன்னு எனக்கு சொல்லி கொடுத்ததும் என் குரு ‘எம்.எல்.வி’தான். எனக்கு கிடைத்த புகழையும் விருதுகளையும் அவங்களுக்கு காணிக்கையாக்குறேன்.” அடக்கம் தெறிக்கப் பேசும் சுதா, ‘இசைக்கு சேவை செய்யும்நேரத்தில், கொஞ்சம் சமுதாயத்துக்கும் சேவை பண்ணவேண்டும்’ என்கிறார். சமூகசேவைக்காகவே ‘சமுதாய அறக்கட்டளை’ என்ற பெயரில் டிரெஸ்ட் நடத்தி வருகிறார்.
சமுதாய அறக்கட்டளைப் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘1999-ல் அறக்கட்டளை தொடங்கினேன். இப்போ பத்தாண்டு ஆகியிருக்கு. பல லட்சங்களை இந்த டிரெஸ்ட் மூலமா சமுதாயத்துக்கு வழங்கியிருக்கோம். அறக்கட்டளை மூலமா செய்ற உதவிகளுக்கு என்னோட நண்பர்கள்தான் அதிகம் உதவறாங்க. அவங்களோட உதவியை முக்கியமா குறிப்பிடணும். குழைந்தைகளுக்காகத்தான் நிறைய செய்றோம். மருத்துவ உதவி. ஆதரவற்ற குழைந்தைகளுக்கு உதவி, கல்வி உதவின்னு குழந்தைகளுக்குதான் முக்கியத்துவம் தர்றோம். அவங்க நல்லா இருந்தாத்தானே நாடு நல்லா இருக்கும்.
கொளத்தூர்ல இருக்குற ‘அருணோதயம்’ ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துல ஒரு ரூம் கட்றதுக்காக கடந்த ஆண்டு ஐந்து லட்சம் வழங்கினோம். பெங்களூர்ல ‘உன்னத்தி’ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அங்க வறுமையால பாதிக்கப்பட்டவங்க, படிப்பறிவு இல்லாதவங்க, ஏழைக் குழந்தைகள்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு உணவுக்கே மூவாயிரம் ரூபாய் செலவாகும். நாங்க அஞ்சு நாள் உணவு செலவுக்கு எங்களால் முடிஞ்ச உதவியை இந்த வருஷம் செஞ்சோம். கடந்த வருஷம் ராமச்சந்திரா மருத்துவமனை மூலமா 100 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய 50 லட்சம் தந்தோம். அதுல என் சொந்த பணம் 25 லட்சம். அந்த நிகழ்ச்சியில எஸ்.எம்.கிருஷ்ணா வந்து கலந்துகிட்டார். இதுவரைக்கும் 75 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை முடிஞ்சிருக்கு. இன்னும் பல மைல் தூரம் போகவேண்டியிருக்கு. இதெல்லாம் மக்களுக்கு தெரியணும்னு சொல்லலே. எல்லாரும் தங்களால முடிஞ்ச உதவியை சமுதாயத்துக்கு செய்யணும்னுதான் சொல்றேன்.” வெளியே மழை விட்டிருந்தது. சமுதாய அறக்கட்டளையின் சேவை சமுதாயத்துக்கு தேவை.
சந்திப்பு: சா.இலாகுபாரதி
(2009 – விகடன் தீபாவளி மலருக்காக எடுக்கப்பட்ட பேட்டி)
13 January 2010
எனக்குப் பிடித்த கவிதை: சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் வைரமுத்து பேச்சு!
Posted by Gunalan Lavanyan
12:20 AM, under பாப்கார்ன் | No comments
செவ்வாயன்று (12.01.2010) சென்னை பிலிம் சேம்பரில் தொடங்கிய சென்னை சங்கமத்தின் 'தமிழ்ச்சங்கமம்' நிகழ்ச்சியில் 'கவிதைக் குற்றாலம்' நூல் வெளியிடப்பட்டது. இது 2009 தமிழ்ச்சங்கமத்தில் படிக்கப்பட்ட சில கவிதைகளின் தொகுப்பு. நூலின் முதல் படியை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார். திருமதி இராஜாத்தி அம்மையார் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கிவைத்தார். செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக கவிஞர் இளையபாரதி வரவேற்க, நிகழ்ச்சியின் முடிவில் கவிஞர் முத்தமிழ் விரும்பி நன்றி கூறினார்.
விழாவில் பேசியவர்கள் சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழியை பாராட்டு மழையிலும் வாழ்த்து மழையிலும் நனைத்துவிட்டார்கள்.
நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் வைரமுத்து புத்தகத்தில் உள்ள இரண்டுமூன்று கவிதைகளை மேற்கோள் காட்டி பாராட்டியும் பொருள் குற்றம் உள்ள கவிதையைச் சுட்டிக்காட்டியும் பேசினார்.
பாராட்டிய கவிதை:
புளி இருந்த பாணை
எனக்கு நன்றாய்
நினைவிருக்கிறது.
அந்த வீட்டுக்குப்
போகும்போதெல்லாம்
ஆச்சர்யத்தோடு பார்ப்பேன்.
வரிசையாய் இருக்கும்
பெரிசாய் பானைகள்.
பழம்புளிக்கு இரண்டு.
இனிப்புக்கு ஒன்று.
உருட்டி உருட்டி,
புளி எடுத்து
ஊரே மணக்க
அந்த அம்மாள்
புளிக் குழம்பு வைத்தால்
அதற்காகவே
ஒரு தட்டுச் சோறு
அதிகம் சாப்பிடலாம்.
ரசம்
இனிப்பாய் இருந்தால்தான்
இளையவனுக்கு பிடிக்குமென்று
தனியாய்ச் செய்வாள்.
மகன்
மறு வீடு போன அன்று
கட்டிக்கொடுத்த
புளிசாதம் சாப்பிட
சம்பந்தி வீட்டாரிடையே
சண்டையே நடந்ததாம்.
புருஷன் செத்துப் போக
பிள்ளைகள் கைவிட்டுப்போக
வீசியெறிந்த
புளிச் சக்கையாய் அவள்.
உள்ளூர்க் கோயிலின்
உற்சவத்தில்
இலவசமாய் வழங்கும்
புளிசாதப் பொட்டலங்களை
நடுங்கும் கைகளோடு
அவள்
வாங்குவதைப் பார்க்கையில்
மனசுக்குள்ளொரு கேள்வி.
‘‘அந்தப் பானைகள்
இப்போது
பரண்மேல் கிடக்குமோ?''
- ஜீவி
பொருள் குற்றம் உள்ள கவிதை:
கண்ணகி
ஏ பாண்டிய மன்னா!
பிழைப்புத் தேடி மதுரை வந்தேன்
இழந்துவிட்டேன் உன்னால்
என் கணவனை.
உயிரோடு ஒருத்திக்கு
ஒப்படைத்தேன் கணவனை
கட்டின தாலியோடு கன்னி கழியாமல்.
பொருளையெல்லாம் தொலைத்துவிட்டு
பெண்டாட்டியிடம் வந்தான்;
தருதலையை ஏற்றேன் சகிப்புத்தன்மையால்
அகமும் புறமும் அவலத்தில் ஓலமிட
அடக்கினேன் உணர்வுகளை.
ஆறுதல் அவனுக்குச் சொல்லி
காற்சிலம்பை விற்றுவா
கஞ்சியாவது குடிக்கலாம் என்று
கடைவீதி அனுப்பினேன்.
செய்யாத குற்றத்துக்கு
சாக அடித்துவிட்டாய்!
மாறாத மனதோடு மாதவி வீட்டில்
மாண்டிருந்தால்
ஊருக்காக ஒருகுரல் அழுதுவிட்டு
சுகம்தரா தாலியைத்
தூக்கி எறிந்துவிட்டு
சும்மாயிருந்திருப்பேன்.
மனம் மாறி வந்தவனை
மதுரையில் பறிகொடுத்து
துடியாய்த் துடிக்கிறேன்.
என்
துயர் நெருப்பு
சுட்டெரிக்கட்டும்
உன்னையும் உன் ராஜ்ஜியத்தையும்!
- பூரணி
இந்தக் கவிதையில் வரும் 'கன்னி கழியாமல்' என்ற வரிதான் பொருள் குற்றம் என்று கவிஞர் சுட்டினார்.
கண்ணகி கன்னி கழியாமல் இல்லை. இளங்கோவடிகள் கன்னகியையும் கோவலனையும் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் இருவரும் பாம்பைப் போல் பின்னிப் பிணைந்து இருந்தனர். 'நாளை விடியுமோ விடியாதோ விடிந்தால் இருப்போமோ இல்லாதிருப்போமோ என்று நினைத்து அப்படி பிணைந்திருந்தார்கள்' என்று இளங்கோவடிகள் கூறுகிறார் என்று வைரமுத்து சுட்டினார்.
இந்தமாதிரி பொருட்பிழையைத் தவிர்க்க இலக்கியத்தில் பரிட்சயம் அதிகம் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, "பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்திருக்கும் கவிஞர் கனிமொழி தலைமை தாங்கி வழி நடத்துகின்ற சென்னை சங்கமம் ஈரோட்டுப் பாதையில் செல்கிறது" என்று கூறினார். "தமிழரின் பாரம்பரியக் கலைகள் காணாமல் போய்விடுமோ ஒழிந்துவிடுமோ என்று வேதனையில் இருந்தபோது சென்னை சங்கமம் அதை மீட்டெடுத்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார். வடமொழி பண்டிதர்கள் தமிழை எப்படியெல்லாம் அழிக்கப்பார்த்தார்கள் என்றும் சுட்டிகாட்டினார். மு.வ. எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு' நூலிலிருந்து அதை மேற்கோள் காட்டினார்.
கனிமொழி பேசும்போது, தமிழ்ச்சங்கமத்தை ஒருங்கிணைக்கும் கவிஞர் இளையபாரதிக்கு பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக பரிதி இளம்வழுதி பேசும்போது, "நான் தலைவர் கலைஞர் வழி நடப்பவன். சொன்னதைத்தான் சொல்வேன்; செய்வதைத்தான் சொல்வேன். அதனால் சுருக்கமாக என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்" என்று கூறி தன் பேச்சை முடித்துக்கொண்டார். அதற்குமுன், கவிஞர் கனிமொழியை தங்கை என்று அன்புகாட்டி பாராட்டினார்.
கவிஞர் கனிமொழியை எத்தனை முறைவேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பாராட்டலாம், மக்கள் கலைகளை மீட்டெடுக்க இப்படியொரு திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டிருப்பதற்காகவே...
நாமும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
பாராட்டும் வாழ்த்தும்தான் கலைஞனை தீவிரமாக செயல்பட வைக்கும்!
நொறுக்ஸ்:
- பிலிம் சேம்பர் மைக் அடிக்கடி மக்கர் செய்துகொண்டே இருந்தது. பேசுகிறவர்களைவிட கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு அது பெரும் தொல்லையைத் தந்தது.
- "நிகழ்ச்சியில் தமிழைப் பற்றி பேசியதைவிட கனிமொழியை பற்றி பேசியதுதான் சற்று தூக்கலாக இருந்தது" - இது ஒரு கவிஞரின் குரல். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!
10 January 2010
சென்னை சங்கமம் கோலாகலத் தொடக்கம்
Posted by Gunalan Lavanyan
7:23 PM, under பாப்கார்ன் | No comments
கனிமொழி மற்றும் ஜெகத்கஸ்பார் இணைந்து நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி 4வது ஆண்டாக சென்னையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. கடந்த ஆண்டு இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏராளமான மக்கள் ஆதரவு கிடைத்தது. லட்சக்கணக்கான மக்கள் இந்தக் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.
அதேபோல இந்த ஆண்டும் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சென்னை சங்கம நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கனிமொழி கூறியிருக்கிறார்.
கிராமியக் கலைகள், நிகழ்த்துக் கலைகள் என்று காணாமல் போய்க்கொண்டிருக்கும் இந்தியக் கலைகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் நடைபெறும் இந்த கலைநிகழ்ச்சியை இந்த ஆண்டும் மக்கள் அமோகமாக வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாம் ஆண்டு (2007) இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றபோது பல்வேறு எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் கனிமொழி சந்திக்க வேண்டியிருந்தது.
ஆனால், அந்த எல்லா சவால்களையும் சந்தித்த கவிஞர் கனிமொழி இப்போது 4வது ஆண்டை நோக்கி சங்கமம் நிகழ்ச்சியைக் கொண்டுவந்திருப்பதற்கு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம். மக்களுக்கு மகிழ்ச்சியையும் மக்கள் கலைகளுக்கு வளர்ச்சியையும் ஏற்படுத்துவதில் யார் முன்வந்தாலும் மக்கள் அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதற்கு இந்த சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.
சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் ஜனவரி 11 முதல் 15 வரை ஐந்து நாட்கள் நடக்க இருக்கின்றன.
சங்கமம் நிகழ்ச்சி சென்னையில் மொத்தம் 17 இடங்களில் நடக்க இருக்கிறது.
நடக்கும் இடங்கள்:
1. எலியட்ஸ் கடற்கரை - பெசன்ட் நகர்
2. கண்டோன்மெந்த் பள்ளி வளாகம் - பல்லாவரம்
3. அண்ணா நகர் டவர் பூங்கா
4. கோடம்பாக்கம் மாநகராட்சி மைதானம்
5. திரு.வி.க. பூங்கா - பெரம்பூர்
6. லேடி வெலிங்டன் கல்லூரி அரங்கு - மெரீனா கடற்கரை
7. தீவுத் திடல் அரங்கு
8. நாகேஸ்வர ராவ் பூங்கா - மயிலாப்பூர்
9. சிவன் பூங்கா - கே.கே.நகர்
10. தந்தை பெரியார் அரங்கம் - வளசரவாக்கம்
11. அசோக் நகர் பூங்கா
12. அண்ணா பூங்கா, ராயபுரம்
13. சுதந்திர தின விழா பூங்கா - வள்ளுவர் கோட்டம்
14. திரு.வி.க.பூங்கா - ஷெனாய் நகர்
15. பாலவாக்கம் பல்கலைநகர்
16. நடேசன் பூங்கா - தி.நகர்
17.திருவொற்றியூர் பூங்கா - விம்கோநகர் கார்ப்பரேசன்
மற்றும்
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பரில் சென்னை சங்கமத்தின் ஓர் அங்கமான 'தமிழ்ச்சங்கமம்' நிகழ்ச்சியும் நடக்கிறது.
இங்கு முழுக்க முழுக்க எழுத்து எழுத்துசார்ந்த நிகழ்ச்சிகளை அரங்கேறும்.
இந்த விழாக்களை சென்னை மக்கள் கண்டுகளித்து, நம் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்க வேண்டுகிறேன்!





