02 February 2010

காதல் வயப்பட்ட பிறகு...

Posted by Gunalan Lavanyan 12:50 AM, under | No comments



காதல் என்பது எந்த கணத்தில், எந்தச் சூழலில் நமக்குள் ஒரு விதையைப் போல் மனசைக் கீறி முளைக்கிறது என்கிற ரகசியம் இன்றுவரை காதலர்களுக்குக்கூட புரிபடாத ஒன்றே.
ஆனபோதிலும், காதல் வயப்பட்ட பிறகு, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், அவரவர் ரசனையை மற்றும் ஈடுபாட்டை மற்றவர் ஏற்றுக்கொள்வதோ அல்லது அது மற்றொருவர் விருப்பம் என அங்கீகரிப்பதோதான் உண்மைக் காதல் மறுபடியும் துளிர்க்கிற இடம்.
காதலிக்கும்போது குறை, நிறைகளை பெருமையாக ஏற்றுக்கொள்ளும் மனம் திருமணத்திற்குப் பிறகு எதிர்மறையாக மாறுவது புரிதலின்மையை காட்டுகிறது. புரிதலற்றும், அங்கீகரிக்க மனமுற்ற இடங்களில் இடைவெளிகள் உருவாகி, வாழ்வில் வெற்றிடத்தையே உண்டாக்கிவிடுகிறது.
காதல்வயப்பட்ட அனைவரும் காதலர்களாகவும் மாற, பரஸ்பர புரிதலுக்கான திறவுகோல்களை இந்த காதலர் தினத்திலாவது கண்டெடுங்கள்; அது போதும்.

- அ.வெண்ணிலா - மு.முருகேஷ்

சிற்றின்பம் சார்ந்த சிற்பங்கள்

Posted by Gunalan Lavanyan 12:28 AM, under | 1 comment



கஜுராஹோ  மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கிறது. இந்திய சுற்றுலாத் தளங்களில் மிகவும் புகழ்பெற்ற  ஒன்றான கஜுராஹோ, மிக அதிக அளவிலான இந்து மற்றும் சமணக் கோயில்களைக் கொண்டிருக்கிறது. இது சிற்றின்பம் சார்ந்த சிற்பங்களுக்குப் புகழ் பெற்றது. கஜுராஹோ தொகுதி நினைவுச்சின்னங்கள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாகப் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘ஏழு அதிசயங்’களில் ஒன்றாகக் இது கருதப்படுகிறது.
கஜுராஹோ என்ற பெயர், பழங்காலத்தில் ‘கர்ஜுராவாஹகா’ என்று அழைக்கப்பட்டது. இது சமஸ்கிருதச் சொல்லான கர்ஜூர் என்ற சொல்லில் இருந்து வந்தது. சமஸ்கிருதத்தில் கர்ஜூ்ர் என்றால் பேரீச்சம்பழம் என்று அர்த்தம்.

01 February 2010

அமெரிக்காவிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும் 2 விருதுகள்

Posted by Gunalan Lavanyan 8:35 PM, under | No comments

அமெரிக்காவில் உள்ள 'நேஷனல் அகாடமி ஆஃப் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்' நிறுவனம் 1958-\லிருந்து 'கிராமி விருது'  வழங்கி வருகிறது.

கிராமி விருதுகள் இசை உலகின் ஆஸ்கார் விருதாக மதிக்கப்படுகிறது. 'கிராம ஃபோன் விருது'தான் நாளடைவில் 'கிராமி விருது' என்று மாறிவிட்டது. 52-ஆம் ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று இந்திய நேரப்படி இன்று (பிப்ரவரி 1 திங்கள்) விடியற்காலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஸ்டப்ளஸ் மையத்தில் நடைபெற்றது.


விருது பெறும்போது...

கிராமி விருதுக்கான பரிந்துரைகள் கடந்த இரண்டு மாதங்களாக இசை உலகில் சூடுபறக்க நடந்து வந்தது. ஏற்கனவே இரண்டு ஆஸ்கார் விருதுகளை தட்டிவந்த இசை உலக இளவரசர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் கிராமி விருதுக்காக இரண்டு பிரிவுகளில் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஒன்று ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக சிறப்பான இசை அமைத்தமைக்காக. மற்றொன்று ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் வந்த 'ஜெய்ஹோ' பாடலுக்காக... இந்த இரண்டு பிரிவுகளிலும் 2 கிராமி விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவுகளில்தான் அவருக்கு 2 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கிராமி விருது ரஹ்மானுக்கு கிடைத்திருப்பது இந்திய இசை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 2 விருதுகளையும் பெற்றுக்கொண்ட ரஹ்மான் விழா மேடையில் நன்றி தெரிவித்து பேசினார்.... ''கடவுள் பெரியவர். இந்திய இளைஞர்களே... நாம் மீண்டும் 2 விருதுகளைப் பெற்றுள்ளோம். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். நான் தொடர்ந்து அமைதியாக என் பணியை செய்ய விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி'' என்று உற்சாகம் பொங்க தன் பாணியில் பேசி முடித்தார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்:

இன்று (பிப்ரவரி 1 திங்கள்) விடியற்காலை கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் ரசிகர்கள் குவிந்தனர். ரஹ்மான் இசைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் திரண்டனர். அப்போது ரஹ்மான் பாடல்களைப் பாடி ஆரவாரம் செய்தனர். பாட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி பாத்திமா அங்கு திரண்டிருந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் குடும்பத்தினரின் மகிழ்ச்சியை ரசிகர்களுக்குத் தெரிவித்துக் கொண்டார்.

Posted by Gunalan Lavanyan 1:10 AM, under | No comments


காமம் இன்றி காதல் இல்லை...
காமமே காதல் இல்லை...
காதலும் காமமும் வாழ்வதற்கே!

ஆதலினால் காதல் செய்வீர்!

Posted by Gunalan Lavanyan 12:58 AM, under | 1 comment




காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்;
கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்?
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணிதனை நாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வம் எல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்: வானோர்க்கேனும்
மாதர் இன்பம்போல் பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.

கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதாசனும் பூஜித்தான்;
மங்கைதனைக் காட்டினிலும் உடன்கொண்டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனும் சென்று பல துன்பமுற்றான்;
இங்கு புவிமிசைக் காவியங்கள் எல்லாம்
இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ?

நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடர் எய்திக் கெடுக்கின்றாரே.

காதலிலே இன்பம் எய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ?
மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள்வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்தொழிலைக் கருதுவாரோ?

- மகாகவி சுப்ரமண்யபாரதி

கூந்தலிலிருந்து வழியும் வாசனை...

Posted by Gunalan Lavanyan 12:34 AM, under | No comments

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதியின் கவிதை -1

இப்போதுதான் முதன்முறையாக
அவளைப் பார்க்கிறேன்...
தோட்டத்திலிருக்கும்
பூக்களை கொய்கிறபோது
வருகிற வாசனையைப்போல்
மயிர் கற்றைகளை சரிசெய்கிறபோது
அவள் கூந்தலிலிருந்து
வாசனை வழிகிறது...



இதுவரை காணாத அழகு
இதற்குமுன் நுகராத வாசம்
புதிதாய் காதல் கசிய
கற்றுக்கொள்ளும் கண்கள்
முத்தம் செய்யாத இதழ்கள் என்று
பூப்படைந்து
இப்போதுதான் வெளியே வருபவள் போல்
இருக்கிறாள்.


அடையிலிருந்து வரும்
கோழிக்குஞ்சைப் போல்
நடக்கிறாள்...
சுடச்சுட உருட்டிய பஞ்சுமிட்டாய் போல்
சிரிக்கிறாள்...
இன்னும்
அவளை உங்களிடம் சொல்லமுடியாது
காதல் ரகசியமானது.

30 January 2010

காதலர் தினக் கொண்டாட்டம்

Posted by Gunalan Lavanyan 10:11 PM, under | No comments

வலைப்பூ உலகில் ஒரு புதிய முயற்சி - பிப்ரவரி 1 (திங்கள்) முதல் பிப்ரவரி 15 வரை காதல் ஸ்பெஷல்.



காதலித்து திருமணம் செய்தவர்கள் - இப்போது காதலித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு காதலில் வெற்றி பெறுவது எப்படி? காதலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எப்படி காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று பல்வேறு டிப்ஸ்களை தர இருக்கிறார்கள். தினம் ஒரு ஜோடியாக 15 நாட்களுக்கும் 15 ஜோடிகள் காதல் டிப்ஸ் அளிக்க இருக்கிறார்கள்... இன்னும் காதல் கவிதைகள்... காதல் கடிதங்கள்... கஜிராஹோ சிற்பங்கள், காதலர்களின் புகைப்படங்கள்... மறைந்த பிரபலங்களின் உன்னதமான காதல் சங்கதிகள்... இன்னும் இன்னும் ஏராளமான பதிவுகளை பதிவேற்ற இருக்கிறேன். காதலர்கள், காதல் மணம் புரிந்தவர்கள், காதலிக்க பிரயத்தனப்படுவர்கள் எல்லோரும் நம் வலைப்பூவில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளை படித்து உங்களது கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்... விமர்சனங்கள், பாராட்டுகள், ஆலோசனைகளை வரவேற்கிறேன்...
காதலைக் கொண்டாடுங்கள்!

மிகுந்த அன்புடன்
சா.இலாகுபாரதி

28 January 2010

காதல் நதி

Posted by Gunalan Lavanyan 7:33 AM, under | No comments

பூத்த நாள்முதலாய்
வண்டுகளே மொய்க்காத
மலரைப்போல் இருந்தாய்.
நான் வந்து மொய்த்துவிட்டேன்.



உன்
மகரந்தத்திலிருந்து உறிஞ்சுகிறேன்...
ஆனாலும்,
வாற்றாது சுரக்கிறது
தேன்.

ஒரு கணம்
கண்களைப் பார்த்தேன்.
உன் கண்கள் சொன்னது...
‘நமது காதல் ஜீவநதி’ என்று...
என் கண்கள் நதியாகிவிட்டன...

என்ன செய்யப் போகிறாய்..?
முடிந்தால் கட்டிக்கொள்...
அல்லது
ஆனந்தப் பெருநதியை வழியவிடு...