கிருஷ்ணவேணி பஞ்சாலை
80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்
கிருஷ்ணவேணி பஞ்சாலை
வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை
ஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்
Showing posts with label ரொமான்ஸ். Show all posts
Showing posts with label ரொமான்ஸ். Show all posts
04 May 2011
மூன்று தலைமுறை காதல்!
Posted by Gunalan Lavanyan
12:30 AM, under ரொமான்ஸ் | No comments
அன்று கண்ணோடு கண் பார்த்து காதல் வளர்த்தவர்கள், இன்று எஸ்.எம்.எஸ் மூலம் காதல் வளர்க்கிறார்கள். இப்படி காதலின் வெளிப்பாடு மாறினாலும், தலைமுறைகள் தாண்டியும் மாறாமல் இருப்பது காதல் மட்டுமே. அப்படிப்பட்ட மூன்று தலைமுறைக் காதலர்களின் காதல் வாழ்க்கை.
மதம் கடந்த காதல்
இவங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சவங்க. 2002-ல் காதலிக்க ஆரம்பிச்சபோது, ரெண்டு வீட்ல இருந்தும் நிறைய எதிர்ப்பு. வீணா - பாஷாங்கிற பேரைப் பார்த்தாலே தெரியலையா... இந்து, முஸ்லீம் காதல்னு. ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பார்க்கும்போதுதான் இவங்களுக்குள்ளே காதல் முளைச்சது. காதல் வளர வளர ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு எதிர்க்க ஆரம்பிச்சாங்க.
‘என்ன அமைதியா இருக்கே’ன்னு பாஷா கேட்டதுக்கு, ‘இது எனக்கு ஏற்கனவே தெரியும்’னு வீணா சொன்னது பாஷாவுக்குதான் ஆச்சரியமா இருந்தது.
‘அப்ப நீ மதம் மாற தயாரா இருக்கியா... மதம் மாறினா பர்தா போடணும்... தினமும் அஞ்சு வேளை தொழுகை நடத்தணும்... இதுக்கெல்லாம் உனக்கு சம்மதமா...’
‘நீதான்னு ஆனபிறகு, இஸ்லாம், பர்தா, தொழுகை எல்லாம் எனக்கு பிடிக்காம இருக்குமா?’ - வீணா பளிச்சுன்னு பதில் சொன்னதும் பாஷா மனசுல பட்டாம்பூச்சிகள் பறந்தன.
பாஷாவும் வீணாவும் ரொம்பவே புரிஞ்சிக்கிட்டாங்க. ஆனா, ரெண்டு வீட்டுலயும் இவங்களை புரிஞ்சுக்கலை. எதிர்த்துட்டுதான் இருந்தாங்க.
‘வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே... நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்... நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்’னு பைபிள்ல சொல்றமாதிரி, மெரீனா பீச் இவங்களைப் பார்த்து சொல்லுச்சு. ஆமாம், துவண்டுபோற நேரத்துல எல்லாம், கடல் காத்தும் அந்த அலைகளும்தான் இவங்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கு.
‘எப்படி கடல் ஓயாமே அலையடிச்சுட்டு இருக்கோ, அப்படிதான் நம்ம காதலும் ஓயாம இருக்கணும்’னு கண்ணியமா காதல் சபதம் ஏற்றது நம்ம காதல் ஜோடி. இடைவிடாத முயற்சியில 2009-ல் திருமணமும் நடந்தது. இப்ப வீணா, தன் பெயரை ‘தபஸம்’னு கெஸட்லேயும் மாத்திக்கிட்டாங்க. பாஷாவுக்கும் தபஸமுக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு. பெயர் ரேஹான் உசேன். மதத்தைக் கடந்த காதலுக்கு கிடைச்ச பரிசு அந்தக் குழந்தையின் சிரிப்பு!
எதிர்பில் வளர்ந்த காதல்
கோயமுத்தூர்ல, ஒரு கல்யாண வைபவத்துல காதல் வைபவம் தொடங்கிய ஜோடி இவங்க. அது 1993. பொன்.சுதா - சினிமா அஸிஸ்டன்ட் டைரக்டர். சென்னையில வாசம். உமா - கல்லூரி மாணவி. கோவை பொண்ணு. இவங்க அறிமுகம் ஆனது, காதல் துளிர்விட்டது எல்லாமே இந்த கல்யாணத்துல தாங்க. மாப்பிள்ளை தோழனா பொன்.சுதாவும், மணப்பெண் தோழியா உமாவும் இருக்கவேண்டியதாப் போச்சு. இந்த தோழன் - தோழி உறவுதான், இவங்களுக்கு உள்ளே ரசாயன மாற்றத்தை உண்டுபண்ணுச்சு.
இந்த மாற்றம் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாது. ஆனா, ரெண்டு பேருக்கும் நிகழ்ந்துருச்சு. இருந்தாலும் பொன்.சுதாவுக்கு கொஞ்சம் தயக்கம். ‘பார்த்ததுமே காதலா... இதைச் சொன்னா, அந்தப் பொண்ணு நம்மளை என்ன நினைக்கும்’னு சங்கடத்தோடு நெளிஞ்சாரு மனுஷன்.
‘சொல்லாமல் போகிற காதல் பலிக்காது’னு அனுபவஸ்தர்கள் சொல்வாங்க. இதை உமா புரிஞ்சுக்கிட்டாங்க. ஒரு கைக்கடிகாரத்தை வாங்கிட்டு, பொன். சுதாவை பார்க்கப் போனாங்க. உமா, தன் காதலை சொன்னதும், மனுஷன் அலாரம் அடிச்சமாதிரி அலறினாரு. ‘என்ன நீயும் என்னை காதலிக்கிறீயா... இது முன்னயே தெரிஞ்சிருந்தா நான் முந்தியிருப்பேனே’ன்னு லேசான இதய அதிர்ச்சி ஏற்பட்டுச் சிரிச்சார்.
காதல் ரயில் ஓட ஆரம்பிச்சது. வாரம் ஒருமுறை சென்னைக்கும் கோவைக்கும் இடையே டெலிபோனில் காதல் டிரிங்... டிரிங்... மாசம் ஒருமுறை நேருக்குநேர். இப்படி காதல் வளர்ந்துட்டு வர்ற நேரத்துலே உமா வீட்டுக்கு காதல் நிலவரம் தெரிந்து, கலவரமானது. உமா ஹவுஸ் அரெஸ்ட்.
‘என் மக கலெக்டர் ஆகப்போறா... அவளுக்கு இப்போ காதல் கத்திரிக்கா யெல்லாம் வேணாம். மீறி ஏதாவது நடந்தா, நாங்க குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்குவோம்’ - உமா வீட்டிலிருந்து பொன்.சுதாவுக்கு இப்படி மிரட்டல்.
‘நீங்க இந்த ரூட்டில் போனா, நாங்க வேற ரூட்டில் போவோம்’னு ரெண்டு பேரும் முடிவு பண்ணாங்க. ரகசிய ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்தது. கல்யாணத் துக்குப் பிறகு எதுவுமே நடக்காதமாதிரி ரெண்டுபேரும் அவங்கவங்க வீட்ல இருந்தாங்க. ஆனா, கொஞ்சநாள்ல பொன்.சுதா வீட்டுக்கு இந்தக் கல்யாண விவகாரம் தெரிஞ்சும், தெரியாத மாதிரி இருந்தாங்க.
காதல் நாயகிக்கு படிப்பு முடிஞ்சதும் அவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து
நின்னார் நம்ம காதல் நாயகன். சமாதானமாகி மாப்பிள்ளை சொந்தங்கள் இணைந்து திருமணத்தை முடிச்சது. விஷயம் பொண்ணு வீடு வரைக்கும் போனது. ‘இனிமேலும் நாம சும்மா இருந்தா நாகரிகமா இருக்காது. பொண்ணு நம்மளை என்னா நினைப்பா...’னு நினைச்ச பொண்ணு வீட்டார், தம் பங்குக்கு திருமண வரவேற்பு நடத்தி, மாப்பிள்ளையோடு கை குலுக்கினாங்க.
கல்யாணத்துக்குப் பிறகு அசிஸ்டன்ட் டைரக்டர் பொன்.சுதாவும் உமாவும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பிச்சாங்க. சினிமா கனவோடு கணவன் வலம் வருவதால், வரும்படி இல்லாத குடும்பத்தை கவனிக்க தானே தயாராகிவிட்டார் மனைவி.
குடும்பம் சுழல ஆரம்பித்தது. பொன்.சுதா இரண்டு குறும்படங்களை இயக்கி 22 விருதுகள் பெற்றிருக்கிறார். அடுத்து சினிமாவை நோக்கி நகர்ந்துகொண்டு இருப்பவருக்கு இப்போது, இரண்டு குருத்துகள்: அன்புமதி, அனிச்சமலர்!
கடிதம் வளர்த்த காதல்
இது 70களில் நடந்த காதல். ரெண்டு பேரும் ஒரே மாவட்டம். ஒரே ஊர். ஒரே தெரு. அடுத்தடுத்த வீடு. இந்த நெருக்கம்தான் இவங்களுக்குள்ளகாதலை வளர்த்துச்சு. கடலூர் மாவட்டம் கீரப்பாளையம்தான் நம்ம முதல் தலைமுறை காதலர்களோட ஸ்பாட். உஷா பள்ளிக்கூட மாணவி. பாலு பி.ஓ.எல் (Bachelor Oriental Language) முடிச்ச விவரப்புள்ளி. (பி.ஓ.எல். பட்டம் இப்ப கிடையாது) உஷாவுக்கு ரெண்டு அண்ணன். ரெண்டு தம்பி. அப்பா இல்லை. அம்மாதான். பாலு தனிக்காட்டு ராஜா. கம்யூனிஸ்ட் பாதையில போற இடதுசாரி.
உஷா ராணியோட மூத்த அண்ணனும் பாலசுப்ரமணியனும் கட்சி தோழர்கள். பாலு வீட்டுக்கு உஷா அண்ணன் வர்றதும், உஷா வீட்டுக்கு பாலு போறதும் வழக்கம். இப்படி நம்ம நாயகன், நாயகி வீட்டில் அடிக்கடி வலம் வருவார். பள்ளி படிப்புல உஷாவுக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் திருவாளர் பாலுதான் டியூஷன் மாஸ்டர். கல்வி பரிவர்த்தனை நடக்கும்போதெல்லாம், இவங்களுக் குள்ளே காதல் பரிமாற்றமும் நடக்கும்.
இப்படி கல்வி தோட்டத்தில் காதல் பூ மலர்ந்தபோது, இடையில் ஒரு நாள் மடல் ஒன்று தீட்டினார் உஷா.
‘அன்புள்ள பாலு, உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது - அன்புடன் உஷா.’ இதுதான் எழுபதுகளின் காதல் எஸ்எம்எஸ்.
உஷா வீட்டுக்கு பாலு போய்வரும் படலம் இப்போது அதிகமானது. உஷாவின் அம்மா புரிந்துகொண்டார். பாலுவை தனியாகச் சந்தித்து கேட்டார்... ‘என்னப்பா இப்படி பண்ணிட்டே...’ - இந்தக் கேள்வி பாலுவுக்கு புரிந்துவிட்டது. ஆனால், பதில் சொல்லத் தெரியவில்லை. அமைதியாக நகர்ந்துவிட்டார். அதன்பிறகு, வீட்டுக் காதல் குளத்துக் காதலாக மாறிப்போனது.
குளத்துக்கு உஷா மட்டும்தான் குளிக்க வருவது வழக்கம். இப்போது பாலுவையும் குளத்துப் பக்கம் பார்க்க முடிந்தது. மூணு பேருக்கு தெரிஞ்ச காதல் இப்போ ஊருக்கே தெரிய ஆரம்பிச்சது. இந்த நேரத்தில், உஷாவின் இரண்டாவது அண்ணனுக்கு பாண்டிச்சேரியில் வேலை கிடைக்க, குடும்பமே பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தது.
பாண்டிச்சேரியிலும், கடலூரிலுமாக காதல் தொடர்வண்டி பிரிந்து இருந்தது. ரெண்டு வருஷத்துக்குப் பிறகு ஒருநாள், போஸ்ட் மேன் பாலு வீட்டுக் கதவை தட்டினார், ‘சார் போஸ்ட்...’ - பாலு நண்பர், உஷா அண்ணனிடமிருந்து கடிதம்.
‘நீங்களும் உஷாவும் பிரிந்து இருந்தாலும், உஷா மனதில் நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள். உங்கள் காதலில் சிவப்பு விளக்கு போய், இப்போது மஞ்சள் விளக்கு எரிகிறது...’ - கடிதத்தை படிச்சதும் பாலு நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டார். இப்போ பாலு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் முடிச்சிருந்தார். படிப்பு முடிச்சு, கம்யூனிஸ்ட் கூட்டங்களில் சுற்றிக்கொண்டு இருந்தவருக்கு ஒருநாள் மெட்ராஸிலிருந்து லெட்டர் வந்தது.
‘அன்புள்ள பாலுவுக்கு, உஷா எழுதுவது. நாங்கள் இப்போது சென்னையில் வசித்து வருகிறோம். நான் ஆயிரம்விளக்கில் உள்ள சீட்டு கம்பெனியில் வேலை பார்க்கிறேன். நீங்கள், சென்னை வந்து என்னை அழைத்துப் போங்கள்...’ - உஷா கடிதம் எழுதியது சீட்டு கம்பெனி முதலாளிக்கும் தெரியும்.
பாலு, சென்னை வந்ததும் உஷாவை முதலாளியே அனுப்பிவைத்தார். சென்னையிலேயே இருவருக்கும் வீடு பார்த்துக் கொடுத்தார். தாலி கட்டாமலேயே தம்பதிகளாகிவிட்டனர்; குழந்தையும் உண்டானது.
அக்கம்பக்கத்து வீட்டார் உஷாவை பயமுறுத்தினார்கள். ‘தாலி இல்லாமல் பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்கு போனா, நர்ஸ் திட்டுவாங்க. சந்தேகப் படுவாங்க. எதுக்கும் ரெண்டுபேரும் யோசிச்சு முடிவெடுங்க...’
‘உண்மைதான். வாழ்பவர்களுக்குள் புரிதல் இருந்தாலும், தாலி இல்லாமல் போனால், இந்தச் சமூகம் பின்னாடியும் பேசும்; முடிந்தால் முன்னாடியும் பேசும்’ - பாலு சுதாரித்துக்கொண்டு, உஷா கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறைக் கட்டினார். பெண் குழந்தை பிறந்தது.
பிறகு, தீக்கதிர் நாளிதழில் செய்தி ஆசிரியராகச் சேர்ந்தார். இரண்டாவதும் பெண் குழந்தை. இரண்டு பெண்களுக்கும் திருமணமாகி, இப்போது பேரன் - பேத்திகள் வந்துவிட்டார்கள். காலமெல்லாம் வாழும் காதல், இவர்கள் மனதில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது!
- சா.இலாகுபாரதி
நம் தோழி - பிப்ரவரி 2011
படங்கள்: கமல்
02 February 2010
காதல் வயப்பட்ட பிறகு...
Posted by Gunalan Lavanyan
12:50 AM, under ரொமான்ஸ் | No comments
காதல் என்பது எந்த கணத்தில், எந்தச் சூழலில் நமக்குள் ஒரு விதையைப் போல் மனசைக் கீறி முளைக்கிறது என்கிற ரகசியம் இன்றுவரை காதலர்களுக்குக்கூட புரிபடாத ஒன்றே.
ஆனபோதிலும், காதல் வயப்பட்ட பிறகு, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், அவரவர் ரசனையை மற்றும் ஈடுபாட்டை மற்றவர் ஏற்றுக்கொள்வதோ அல்லது அது மற்றொருவர் விருப்பம் என அங்கீகரிப்பதோதான் உண்மைக் காதல் மறுபடியும் துளிர்க்கிற இடம்.
காதலிக்கும்போது குறை, நிறைகளை பெருமையாக ஏற்றுக்கொள்ளும் மனம் திருமணத்திற்குப் பிறகு எதிர்மறையாக மாறுவது புரிதலின்மையை காட்டுகிறது. புரிதலற்றும், அங்கீகரிக்க மனமுற்ற இடங்களில் இடைவெளிகள் உருவாகி, வாழ்வில் வெற்றிடத்தையே உண்டாக்கிவிடுகிறது.
காதல்வயப்பட்ட அனைவரும் காதலர்களாகவும் மாற, பரஸ்பர புரிதலுக்கான திறவுகோல்களை இந்த காதலர் தினத்திலாவது கண்டெடுங்கள்; அது போதும்.
- அ.வெண்ணிலா - மு.முருகேஷ்
19 January 2010
காதலிக்காதவர்கள் படிக்கவேண்டாம்!
Posted by Gunalan Lavanyan
11:33 PM, under ரொமான்ஸ் | No comments
அன்பிற்கினியவளே,
இப்போதும் நான் உன் கூந்தலைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதுயெப்படி நான் பார்க்கிற ஒவ்வொரு முறையும் உன் பார்வையைப் போலவே, உன் ஸ்பரிஸத்தைப் போலவே, உன் சிரிப்பைப் போலவே உன் கூந்தலும் புதுப் பொலிவோடும் புது அழகோடும் எனக்குக் காட்சித் தருகிறது; தெரியவில்லை.
நக்கீரர் காலத்திலிருந்தே கேட்டுவருகிறார்கள், ‘வாசனை மிகுந்த பூக்களைச் சூடுவதால் கூந்தலுக்கு மணம் வருகிறதா..? அல்லது இயற்கையிலேயே கூந்தலிலிருந்து வாசனை வழிகிறதா?’ என்று.
இத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நீ பிறப்பாய் என்று தெரிந்திருந்தால், ‘வாசனை மிகுந்த பூக்களைச் சூடுவதால்தான் கூந்தலில் மணம் கமழ்கிறது’ என்று நக்கீரர் சொல்லியிருப்பாரா?
உன் கூந்தலிலிருந்து வழியும் வாசனை எப்படி வருகிறது என்பதில் எனக்கும் சந்தேகம்தான். ஆனால், (ஷாம்)பூவால்தான் வருகிறது என்பது மட்டும் இல்லை என்று எனக்கு நிச்சயம் தெரியும்.
அன்றொருநாள் பார்த்தேன், வாசனையற்ற பூக்களைச் சூடிக்கொண்டு தெருவலம் வந்துகொண்டிருந்தாய். தெருவில் இருப்பவர்களின் பார்வை மொத்தமும் உன் கூந்தலைச் சுற்றிதான் வட்டமடித்துக் கொண்டிருந்தது. இந்த மாதிரி ஒரு வாசனையை நான் வாங்கிய எந்த வாசனை திரவியங்களிலிருந்தும் நுகர்ந்தது இல்லை. பார்த்த எந்தப் பூக்களிலிருந்தும் சுகித்தது இல்லை. வாசனையற்ற பூ, கூந்தலிலோ இயற்கையிலேயே மணம் இல்லையாம்! பின் எப்படி மணங்கமழும் கூந்தல்?!
நீ பூக்காரியிடம் பூ வாங்கும்போது பார்த்திருக்கிறேன். உன் கூந்தலின் ஓரம், ஓர் இடம் கிடைக்காதா என்று பூக்களெல்லாம் பிரயாசைப்பட்டு பெருமூச்சு விடுவதை.
அப்படி எத்தனை வயதுதான் ஆகிறது உன் கூந்தலுக்கு..? பதினெட்டு வயதாகிய உன்னைப் போலவே உன் கூந்தலும் இன்னமும் வயதுக்கு வராதது போலவே இருக்கிறதே!
நான் முதன்முதலாய் உன் கூந்தலுக்குதான் அறிமுகம்! மழைநாள் ஒன்றில் குடையின்றி மரங்களடர்ந்த சாலையில் மழையோடு பேசிக்கொண்டு நடந்து வந்தாய். மெல்லிய காற்றில் உன் கூந்தல் மழைச்சாரலோடு கைகுலுக்கி கட்டியணைத்தபோதுதான் தெரிந்துகொண்டேன் உன் தோழிதான் மழை என்பதை.
அப்போதுதான் ரோஜா தோட்டத்திலிருந்து பூ பறித்துவிட்டு நான் வெளியே வந்துகொண்டிருந்தேன்... தோழியோடு இருந்த மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே தோட்டத்தின் வாசலைப் பார்த்தது உன் கூந்தல். நான் நின்றுகொண்டிருந்தேன். என் கையில் கூடை இருந்தது. கூடையில் ரோஜா இருந்தது. இப்போது நான் ரோஜாவைப் பார்த்தேன், உன் கூந்தலையும் பார்த்தேன். கூந்தல் ரோஜாவைப் பார்த்தது, ரோஜா கூந்தலைப் பார்த்தது. மழை சிரித்தது. ஒரு ரோஜாவை எடுத்து நீட்டினேன் உன் கூந்தல் பெற்றுக்கொண்டது. நானும் சிரித்தேன். தோழர்களாகிவிட்டோம் நான், மழை, உன் கூந்தல்.
பிறகொரு நாள் நீ கோலப் போட்டியில் மயில் கோலம் வரைந்து கொண்டிருந்தாய். உன் கூந்தல், உன் பின்னங்களில் தூரிகையாகியிருந்தது. உன் கூந்தல்தான் எத்தனை அழகாய் வரைகிறது தெரியுமா? இப்போதெல்லாம் நான் உன் கூந்தலைப் பார்க்கும்போது நிறைய பேசுகிறேன். அதிகமாய் உன்னைப் பற்றிதான். ஒருநாள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இடையில் என் பேச்சை நிறுத்தி, நீ இவளை காதலிக்கிறாயா என்று என்னிடம் கேட்டுவிட்டது. மௌனமாகவே இருந்தேன். அதுவாகவே தெரிந்துகொண்டது. பிறகுதான் அந்தப் பேருந்துப் பயணத்தின்போது என் சட்டையில் சிக்குவதுமாதிரி சிக்கி உன்னை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.
அப்போதுதான் உன் முகத்தைப் பார்த்தேன். ஆயிரம் நட்சத்திரங்களை ஒரே நேரத்தில் பார்த்ததுபோல அத்தனைப் பிரகாசம் உன் கண்களில். நீ குறுநகை பூத்தாய். நான் சிறுநகை பொழிந்தேன். கூந்தல் சிரித்தது. உன் உதடுகளிலிருந்து வழிந்தது... ‘கொஞ்சம் இருங்களேன்...”
இப்போது நான் அதிகமாகவே இருக்கிறேன் உன் இதயத்தில்.
எப்போது சந்திப்போம்?
மிகுந்த அன்புடன்
சா.இலாகுபாரதி.
01 September 2008
நதியான காதல்கள்
Posted by Gunalan Lavanyan
1:39 PM, under ரொமான்ஸ் | 2 comments
அது மலைகளால் நிறைந்த கிராமம். குழந்தைகள் வட்டமாக நின்று கை கோர்த்து ஆடும் ஆட்டத்தைப்போல அந்த கிராமத்தைச் சுற்றி மலைகள் கைகோர்த்து நின்று ஆடும் ஆட்டம் அலாதியானது. பனிக்காலத்தில்தான் அதன் அழகை தரிசிக்க முடியும். அப்போது மலை பனி ஆடை கட்டிய தேவதையாக காட்சியளிக்கும்.மார்கழித் திங்களில் பனி படர்ந்த இரவுகளில் ஊரின் தெருக்களெங்கும் கோல மழையில் நனைந்துகொண்டிருக்கும்... பெண்கள் ஒன்றுகூடி இன்று நான் இந்தக் கோலம் போடுகிறேன். நீ எந்தக் கோலம் போடுவதாக உத்தேசம்..? அவள் மயில் கோலம் போடப்போகிறாளாம்..! அக்கா நீங்கள்... என்று குழுவாகக் கூடி நின்று, விளித்துப் பேசும் பெண்களின் கோல உற்சவம் மார்கழி மாதத்தில்தான் விமரிசையாக நடைபெறும். கோலம் என்றால் சரளைக் கற்களைப் பொடியாக்கிப் போடும் கோலமல்ல. பச்சரிசியை ரவைப் பதத்தில் உரலில் இடித்துப் போடும் மாக்கோலம்.ஊர் பெண்களுக்கு கோலமென்றால் கொள்ளை ப்ரியம். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு போகும்போது தோழியைப் போல் கோல நோட்டையும் உடன் எடுத்துச் செல்லும் அளவுக்கு ப்ரியம். பருவம் எய்திய பெண்களுக்கு சமைப்பதையடுத்து கோலம் போடுவதே தொழில். கம்பிக்கோலம், பூக்கோகலம், வண்ணக்கோலம் என்று வகைவகையாய் கோலம் இடும் பெண்களின் கன்னக்குழியின் கோலம் அழகின் உச்சக்கோலம்.கற்பனை நிறைந்த அவர்களின் விரல் இடுக்குகளிலிருந்து துளித்துளியாக அச்சுகள் பூமியை முத்தமிடும். ஈரம் நிறைந்த பூமியில் முத்தமும் சேர்ந்து கரைந்துபோகும். பின் புள்ளிகள் ஒன்றுகூடி கோலம் தன்னைத்தானே வரைந்துகொள்ளும்.அதிகாலையில்தான் பெண்கள் கோலமிடுவது வழக்கம். கூதிர்க்கால அதிகாலைகளிலோ, பனி ராட்சஸனாகி தலையில் ஏறி உட்கார்ந்து உடலை கவ்விப்பிடித்து உலுக்கிவிடும் என்பதால் பெண்கள் இரவிலேயே கோலம் இட்டு முடித்து, பறவைகள் கூடு தேடி அடைக்கலம் அடைவதைப்போல், வீட்டில் போர்வையைப் போர்த்தி உறங்கத் தொடங்கிவிடுவார்கள். மாடி வீடு உள்ளவர்கள் பனிக்காலங்களில் நடுக்கமின்றி குளிருக்கு அடக்கமாக இருப்பார்கள். ஆனால், கூரை வேய்ந்த வீட்டில் வசிப்பவர்களும், ஓட்டு வீட்டில் குடியிருப்பவர்களும் மழையில் நனைந்த கோழியைப்போல் பனியில் நனைந்து வெடவெடத்துக் கிடப்பார்கள். போர்வை, கம்பளி என்று எதைப் போர்த்தினாலும் குளிர் அடங்கவே அடங்காது; பற்கள் கிடுகிடுவென ஆடத்தொடங்கும்.அப்படிப்பட்ட பனிக்காலத்தில் அந்த ஊரின் இயற்கை அழகு காண்பதற்கு அரிய காட்சியாக இருக்கும். ஆனாலும், முதுமை தாங்கிய வயசாளிகளுக்கு, அழகெல்லாம் ஒரு பொருட்டல்ல. பனி எப்போது போகும் என்று போர்வைக்குள் ஒடுங்கிக் கிடப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே என்று இருப்பார்கள். பனி என்றால் அவர்களுக்கு மேல் அன்னமும் கீழ் அன்னமும் சேர்ந்து நடுங்க ஆரம்பித்துவிடும்.ஆனால், பருவம் வந்த பெண்களுக்கும் இளமைப் பொங்கும் காளையருக்கும் பனிக்காலம்தான் காதல் பூக்கும் வசந்தகாலம். அப்போதுதான் காதல் மொழி பேசுவதற்கு & வெண்பனி சிந்தும் மாலைகள், பச்சைப் பூத்த பசுஞ்சோலைகள், வண்ண மலர்கள் தூவி வரவேற்கும் பூங்காக்கள் என்று காதலர் கூடும் இடங்கள் தோறும் ஆளரவமற்று காதலரின் வருகையைப் பார்த்து காத்துக் கிடக்கும். காதலர்கள் பேசிக்கொள்வதைக் கேட்பதில் அவைகளுக்கு அப்படியென்ன ஆனந்தக் களிப்போ... அதைக் காதலர்தான் அறிவர்!அப்படி வழக்கமாய் குளிர் இரவுகளின் நடுக்கத்தில் தாவணிகள் கோலத்துக்கு புள்ளி வைக்க, அப்புள்ளிகள் இளங்காளைகளை மான்களாக்கிவிடும். புள்ளிகள் ஒவ்வொன்றும் புள்ளி மான்களாகி, காதல் புல் மேய இதய வனத்தைத் தேடி, சதா சர்வகாலமும் துள்ளியலையும் பணிக்கு ஆட்பட்டுப் போகும்.பெண்களின் வீட்டு வாசற் கோலப்புள்ளிகள், ஆண்களின் இதய வாசலில் நிறைந்து வண்ணங்கள் தூவிய கலர்க் கோலமாகிவிடும். காதல் பதற்றத்தில் காளையர்களின் நெஞ்சப் படபடப்புக் கூடி, காதல் குளிரெடுக்கும். காட்சியின் திசைகள் நோக்கி, கண்கள் கரைந்து நதியாவதும் உண்டு.
உன் விரல்களிலிருந்து விழும்புள்ளிகளில்
என் நெஞ்சத்தின் ஏக்கப் பெரும்புள்ளிகள்
கூடிக்கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொருமுறை நீ புள்ளி இடுகையிலும்
சொல்ல நினைக்கிறேன்.
ஆனாலும், உன் பார்வைக் கரும்புள்ளிகளில் சிக்கி
என் வார்த்தைச் சிறுபுள்ளிகள் மூழ்கி
கோலம் முற்றாகிவிடும்போது
எப்படி முடியும் என்னால்
அந்த மூன்றெழுத்தை உச்சரிக்க.
என் நெஞ்சத்தின் ஏக்கப் பெரும்புள்ளிகள்
கூடிக்கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொருமுறை நீ புள்ளி இடுகையிலும்
சொல்ல நினைக்கிறேன்.
ஆனாலும், உன் பார்வைக் கரும்புள்ளிகளில் சிக்கி
என் வார்த்தைச் சிறுபுள்ளிகள் மூழ்கி
கோலம் முற்றாகிவிடும்போது
எப்படி முடியும் என்னால்
அந்த மூன்றெழுத்தை உச்சரிக்க.





