26 October 2010

ஹைக்கூ கவிதைப் போட்டி

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | No comments

24 April 2010

கண்டுகொள்ளுமா தமிழக அரசு...?

Posted by Gunalan Lavanyan 4:10 PM, under | 3 comments




(காட்சியில் வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்கள்... டிசைன்ஸ் பற்றி ஒரு புத்தகம் இருந்தது. 1800களிலேயே டிசைன்ஸ் பற்றி வெளிவந்திருக்கிற புத்தகம் அது படம் -3,4)

சென்னை கன்னிமரா நூலகத்தில் உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு இரண்டு நாட்கள் புத்தகக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 1608-ம் ஆண்டில் வெளியான பைபிள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூர் வரலாறு, திருவாங்கூர் சமஸ்தான வரலாறு, சென்னை மாகாண கணக்கு வழக்கு நூல், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், செடிகள் பற்றிய அரிய வகைப் புத்தகங்கள் என்று வேறெங்கும் கிடைத்திராதப் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் புத்தகங்களை யாரும் பயன்படுத்த முடியாது. ஆய்வுக்கும் உபயோகப்படுத்த முடியாது. காரணம், ஸ்கேன் செய்யப்பட்டோ, லேமினேஷன் செய்யப்பட்டோ புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கவில்லை. வெளியான ஆண்டில் எப்படி வெளியிடப்பட்டதோ அப்படியே வைத்திருக்கிறார்கள். ஆனால், நிறைய நூல்கள் அக்கு அக்காக வருகின்றன. அதனால், சில நூல்களை கையால் கூடத் தொட அனுமதிக்க மறுக்கிறார்கள். அவர்களைச் சொல்லி என்ன குற்றம். புத்தகங்கள் அந்த அளவுக்கு சிதிலமடைந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து வருகிறதா என்று தெரியவில்லை. ஆனால், நூலகப் பணியாளர்களிடம் கேட்கும்போது அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்கேன் செய்தால் நூல் மேலும் சிதிலமாகும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். வளர்ந்துவரும் நவீன அறிவியல் உலகில் புத்தகங்களை லேமினேன் செய்தோ, ஸ்கேன் செய்தோ பாதுகாப்பதற்கெல்லாம் வழிவகைகள், வாய்ப்புகள் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன. அல்லது சில நவீன உத்திகளை வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கியும் செய்ய முடியும். அரசாங்கத்தால் முடியாததுதான் என்ன? அதைச் செய்யுமா இந்த அரசு? உங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்து, இந்தச் செய்தியை பிரபலமாக்கி அரசின் கவனத்தை ஈர்க்க உதவலாமே! இதைவிட வேறென்ன செய்யப்போகிறோம் அடுத்தத் தலைமுறைக்கு... வாக்களியுங்கள் நண்பர்களே... உங்கள் கருத்துரைகளை பின்னூட்டம் இடுங்கள். முடிந்தால் கன்னிமரா செல்லுங்கள். சந்திப்போம்.

23 April 2010

காதல் ரசம்

Posted by Gunalan Lavanyan 7:38 AM, under | No comments

உனக்காக எதையும் செய்வேன் என்று
பொய்சொல்லப் போவதில்லை...
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்கிறேன்!

அவள் திராட்சை கண்களில் இருந்து
காதல் ரசம் வழிந்துகொண்டு இருக்கிறது...
பீப்பாய் நிறைய பருகிவிட்டேன்.
தீரவில்லை தாகம்!

இருசக்கர வாகனத்தில் போகும்போது
பின்னால் வரும் தேவதைகளை
கண்ணாடியில் பார்ப்பது மாதிரி
நடந்துபோகும்போதும்
தேவதைகளைக் கடந்துபோகையில்
பார்ப்பதற்கு ஒரு சைடு மிர்ரர் கேட்கிறது
மனசு!

நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
நீ என்னைப் பார்க்காமல் இருப்பது மாதிரி
நீ என்னைப் பார்க்கும்போதெல்லாம்
உன்னைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை என்னால்!

ஒற்றைக் காலில் நின்று
மீன் கொத்திப் போகும்
கொக்கைப் போல
ஒற்றைக் கண்ணில் பார்த்து
என் இதயம் கொத்திப் போகும்
கொக்கு அவள்!

ஆடும்போது தோகை விரித்து
மயில் ஆடுவதைப் போல
போகும்போது கூந்தல் விரித்துப் போகும்
அவளும் ஒரு மயில்!

03 April 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 6

Posted by Gunalan Lavanyan 4:02 PM, under | 2 comments

அமெரிக்கா பயணம்
சட்டசபையில் அண்ணாவின் பேச்சுகள் அரியணை ஏறின. அண்ணா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தினார். குறிப்பாக சென்னை, மதராஸ் என்று இருந்த பெயர்களை மாற்றினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் - ஆங்கிலம் என்று இருமொழிக் கொள்கைகளைக் கொண்டுவந்தார். பெரியாரின் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி பெரியாருக்கு சிறப்பு செய்தார். ஓயாமல் உழைத்தார். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த உடலுக்கு நோய் வந்துவிட்டது. அண்ணா முதல்வராக இருக்கும்போது அவருக்கு வந்த வயிற்று வலி அவரைப் பாடாகப்படுத்தியது. பரிசோதித்ததில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. புற்றால் வந்த தீராத வயிற்று வலியால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு, நியூயார்க் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அண்ணாவுக்கு அறுவைசிகிச்சை செய்து முடித்தார்.

‘அண்ணா... அண்ணா...'
சிகிச்சைமுடிந்ததும் மருத்துவர்கள் அண்ணாவுக்கு சில ஆலோசனைகள் சொன்னார்கள். உடலை அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள். மேடை ஏறுவதை கொஞ்ச காலத்துக்கு தவிர்த்துக்கொள்ளுங்கள். முடியாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அலைச்சல் கூடாது. அதனால், சுற்றுப்பயணங்கள் வேண்டாம். இப்போது உங்களுக்குத் தேவை - ஓயாத ஓய்வு ஒன்றுதான். இப்படி அவருக்கு என்னவெல்லாமோ சொன்னார்கள். எல்லாவற்றையும் தலையாட்டி கேட்டுக்கொண்ட அண்ணா, இந்தியா வந்தார். விமானநிலைத்தில் ‘ஜேஜே’வென்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். உற்சாகம் குறையாமல் எட்டுத் திசைகளிலும் பார்த்தார். எங்கு திரும்பினாலும் ‘அண்ணா... அண்ணா...’ என்று குரல்கள். யோசித்தார். மக்கள் ஓயவில்லை; தொண்டர்கள் ஓயவில்லை; தம்பிகள் ஓயவில்லை; எனக்கெதற்கு ஓய்வு..? முடிவெடுத்துவிட்டார். அண்ணாவும் ஓயவில்லை. தமிழகத்துக்காக ஓயாமல் உழைத்தார். ஆனால், உடல் சும்மா இல்லை. ஓய்வு... ஓய்வு... என்று கேட்டுக்கொண்டே இருந்தது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய மூன்றாவது மாதத்தில் அண்ணாவின் உடல் தன்னிச்சையாக முடிவெடுத்து, படுத்துக்கொண்டது.

ஆமாம்! அண்ணா மீண்டும் நோயுற்றார்; அவதிப்பட்டார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்தார்கள். மீண்டும் உணவுக் குழாயையே தாக்கியிருந்தது புற்று. அண்ணா படுத்தபடுக்கையானார்; மக்கள் துயரப்படுக்கையில் வீழ்ந்தனர். அண்ணா உடல் தேர வேண்டும் என்று தமிழகமே பிரார்த்தனை செய்தது. தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்துவந்து போனார்கள். தமிழகத்தையே பதற்றம் தொற்றிக்கொண்டது. அண்ணாவின் உயிர் இறுதி முடிவெடுவு எடுத்துவிட்டது.

1969 பிப்ரவரி 2, இரவு 12.30 மணிக்கு வானொலி கண்ணீர் வடித்தது. உயிர் காற்றில் கலந்துவிட்டது. தமிழகமே கதறியது. அண்ணா மறைந்தார்.

கின்னஸ் சாதனை
வாழ்நாள் முழுவதும் அரசியல், எழுத்து, நாடகம், பத்திரிகை, சினிமா என்று பல்துறைகளிலும் சாதனை படைத்துக்கொண்டிருந்த அறிஞர் அண்ணா, இறந்தபின்னும் சாதனையாளராகவே இறந்தார். சாதனையென்றால் சாதாரணச் சாதனையல்ல. உலக அளவில் போற்றப்படும் கின்னஸ் ரெக்கார்ட்.
அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் சுமார் ஒன்றைரை கோடி (15 மில்லியன்) பேர். எள் போட்டால் எண்ணெய் எடுக்கலாம். இறுதிச் சடங்குகள் சென்னை மெரினா கடற்கரையில் நடந்துகொண்டிருந்தன. வானத்திலிருந்து பார்த்தால், கடற்கரையெங்கும் மணல் இல்லை. வெறும் தலைகளாகவே இருந்தன. மக்கள் கூட்டம் அலையலையாக மோதியது. ஒன்றரைக் கோடி மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு அண்ணா சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது கின்னஸ் சாதனையாக பதிவுசெய்யப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்புகள்
பெயர்:                        அண்ணாதுரை
காலம்:                        1909 - 1969
புனைபெயர்கள்:       சௌமியன், வீரன், பரதன், சமதருமன், ஒற்றன், சம்மட்டி
பிறந்த ஊர்:               சின்ன காஞ்சிபுரம்
பெற்றோர்:                 நடராஜன் - பங்காரு அம்மாள்
வளர்ப்புத்தாய்:         (தொத்தா) இராஜாமணி
உடன்பிறந்தவர்கள்: இருவர் (இரட்டையர்)
மனைவி:                    ராணியம்மாள்
குழந்தைகள்:             இல்லை. நான்கு வளர்ப்புப் பிள்ளைகள்                                                                                                                                            (பரிமளம், இளங்கோவன், கவுதமன், பாபு).
குடும்பத்தொழில்:     நெசவு
படிப்பு:                        இன்டர் மீடியட், பி.ஏ.(ஹானர்ஸ்), எம்.ஏ
தொழில்:        ஆங்கில ஆசிரியர், நாடகம், சினிமா, எழுத்து, மொழிபெயர்ப்பு, பத்திரிகை, அரசியல்
பத்திரிகை பணி:       பாலபாரதி, நவயுகம், விடுதலை, குடியரசு, ஜஸ்டிஸ் (ஆங்கிலம்), திராவிடநாடு, காஞ்சி, மாலைமணி, நம்நாடு, ஹோம் ரூல் (ஆங்கிலம்),
முதல் கட்டுரை:         ‘மகளிர் கோட்டம்’ (தமிழரசு)
முதல் சிறுகதை:        ‘கொக்கரக்கோ’ (ஆனந்த விகடன்)
முதல் குறுநாவல்:      ‘கோமளத்தின் குறும்பு’ (குடியரசு)
முதல் நாவல்:             ‘வீங்கிய உதடு’ (குடியரசு)
முதல்
மேடை நாடகம்:        சந்திரோதயம்
முதல் தேர்தல் களம்: 1936 - சென்.மாநகராட்சி தேர்தல்,  பெத்துநாயக்கன் பேட்டை. (தோல்வி)
முதல் சிறை:               1938 - இந்தி எதிர்ப்புக்காக நான்கு மாதம்
அரசியல் பிரவேசம்: 1934 - நீதிக்கட்சி
சட்டமன்ற
பிரவேசம்:                  1957 - காஞ்சிபுரம் தொகுதியிலிருந்து தேர்வு
அரசியல் பணி:          நீதிக்கட்சி, திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க-வில்
தி.மு.க. தொடக்கம்: 1949 செப்டம்பர் 17,
பொறுப்பு:                  பொதுச்செயலாளர்
நாடாளுமன்ற
உறுப்பினர்:               1962- (மாநிலங்கள் அவை)
தமிழக முதல்வர்:      1967, மார்ச் 6 (138 இடங்களுடன்
                                    தனிப் பெரும்பான்மை)
சிறப்பு விருது:            1968 ஏப்ரல், ‘சப்-ஃபெலோஷிப்’ (யேல் பல்கலை)
சிறப்புப் பட்டம்:        1968 செப்டம்பர், ‘இலக்கியப் பேரறிஞர்’                                                                         (டாக்டர் பட்டம் - அண்ணாமலைப் பல்கலை.)

........தொடர் நிறைந்தது.

26 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 5

Posted by Gunalan Lavanyan 7:12 PM, under | 1 comment

அண்ணாவுக்கு தோல்வி
1962-ம் ஆண்டு வந்தது. தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அடுத்த யுத்தம் தொடங்கியது. இந்தமுறை தி.மு.க. 142 இடங்களில் போட்டியிட்டது. பெரியார் தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். ஆனால், பிரசார மேடைகளில் அண்ணா பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் புருவம் உயர்த்தினர். இந்தத் தேர்தலில், முன்பு தி.மு.க. வெற்றி பெற்றிருந்த இடங்களில் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. விளைவு அந்த இடங்களில் தி.மு.க-வுக்கு தோல்வி. அண்ணாவும் தோல்வியைத் தழுவினார். ஆனால், வேறொரு வகையில் தி.மு.க. உற்சாகம் பெற்றது. புதிதாக, அதேநேரத்தில் முன்பைவிட அதிகமாக 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தும் அண்ணாவின் தோல்வி தம்பிகளிடத்தில் சற்று அயர்ச்சியை உண்டாக்கித்தான் இருந்தது.

ஆனால், அண்ணா துவளவில்லை. ‘நான் தோற்றதால் தோல்வி என்னை அழுத்திவிடும் என்று நினைக்காதீர்கள். ஓர் அண்ணாதுரைக்கு பதிலாக ஐம்பது அண்ணாதுரைகளை அனுப்பிவைக்கிறேன்’ என்று தம்பிகளை உற்சாகப் படுத்தினார். இருந்தும் தொண்டர்கள் ஓயவில்லை, அண்ணாவை பாராளு மன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். அண்ணா எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் திராவிடநாடு கோரிக்கையை அவர் வலியுறுத்திப் பேசினார்.

இந்தச் சூழலில் இந்தியா ஒரு புதிய சோதனையை சந்தித்தது. 1962 - இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இந்தப் பிரச்னை ஓயும்வரை திராவிடநாடு கொள்கையை கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் தி.மு.க-வின் வளர்ச்சி அபாரம்! மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றி!


முதல்வரானார் அண்ணா
அடுத்த திட்டத்துக்கு அண்ணா கட்சியை தயார்படுத்தினார். 1967-ல் தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அதற்கு ஓர் ஆண்டு முன்பாகவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். புதிதாக வியூகம் அமைத்தார். தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இருந்தன. அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டினார். காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணி தயார்! தேர்தலுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் கூட்டணி இதுவே. வெற்றிக்கு இதுமட்டும் போதும் என்று அவர் நினைக்கவில்லை. அதனால், மற்றுமொரு திட்டத்தையும் செயல்படுத்தினார். தமிழகம் முழுவதிலும் தி.மு.க. வேட்பாளர்களையே நிறுத்தாமல், தொகுதிப்பங்கீடு செய்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் காங்கிரஸை எதிர்த்து களம் கண்டன. ஆனால், காங்கிரஸ் இந்தச் செயல்பாடுகளை மதிக்கவில்லை. அண்ணாவின் திட்டம் பலிக்காது என்று நினைத்தது.

ஆனால், காங்கிரஸ் நினைப்பில் விழுந்தது மண்! உணவுத் தட்டுப்பாடும், விலைவாசி ஏற்றமும் இருந்துவந்த நேரம் அது. தேர்தல் பிரசாரத்தில் அண்ணா மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கெனவே மக்களின் அமோக ஆதரவைக் குவித்துவந்த தி.மு.க-வுக்கு இந்த வாக்குறுதி கைகொடுத்தது. தேர்தலில் காங்கிரஸ் வெறும் 49 இடங்களை மட்டுமே பிடித்தது. தி.மு.க. மொத்தம் 138 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. அதன் கூட்டணிக் கட்சிகள் 40 இடங்களை வென்றன. பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைத்தது. அண்ணா தமிழக முதல்வரானார். கழக உடன் பிறப்புகளான அவரது தம்பிகள் இரா.நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, க.அன்பழகன் போன்றோர் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர். இந்த வெற்றில் எம்.ஜி.ஆரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் அண்ணாவின் தளபதியாக இருந்த மு.கருணாநிதி தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் தகுதிகளோடு வளர்ந்து கொண்டிருந்தார்.

நாடகமும் சினிமாவும்
அண்ணாவின் வாழ்க்கையிலும், அவரது வளர்ச்சியிலும் நாடக - சினிமா உலகுக்கு முக்கியப் பங்குண்டு. அவரது சமூக நாடகங்களும், திரைப்படங்களுக்கு அவர் எழுதிய கதை-வசனங்களும் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தின; சமூகத்தில் அதிர்வை உண்டாக்கின. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த அதேவேளையில் கலைத்துறையிலும் அண்ணாவின் பங்களிப்பு கோலோச்சிக்கொண்டு இருந்தது. ‘தணிக்கை ஏதும் செய்யாமல் இருந்தால், ஒரே திரைப்படத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்’ என்று ஒருமுறை அண்ணா கூறினார். அதனால், ஒரே படத்தின் மூலமாக, அரசியலில் அவரால் திருப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை உணரமுடியும். ஆனால், தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கும் நாடகமும் சினிமாவும் திருப்புமுனையாக அமைந்தன.

அண்ணா, நாற்பதுக்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களை எழுதினார். ‘குடியரசு’ பத்திரிகையில் வெளிவந்த ‘காங்கிரஸ் வாலா’ என்ற நாடகம்தான் அண்ணா எழுதிய முதல் ஓரங்க நாடகம். இதைத் தவிர எட்டு பெருநாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். இவற்றில் சில திரைப்படங்களாகவும் பின்னர் எடுக்கப்பட்டன.
சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் அல்லது சந்திரமோகன், வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, காதல் ஜோதி, சொர்க்கவாசல், பாவையின் பயணம் போன்றவை அண்ணாவின் எட்டு பெரிய நாடகங்கள். இதில் ‘ஓர் இரவு’ நாடகம் ஒரே இரவில் எழுதப்பட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற நாடகம். அதேபோல, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியால் அரங்கேற்றப்பட்ட ‘வேலைக்காரி’ நாடகம், நூற்றுக்கணக்கான நாட்கள் நடத்தப்பட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. ‘நல்லதம்பி’ - சிரிப்பூட்டி சிந்திக்கவைக்கும் நாடகம். பின்னர், இது திரைப்படமாக வந்தது. படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நல்லதம்பியாக நடித்து மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். ‘ரங்கோன் ராதா’ என்ற திரைப்படம் அண்ணாவின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதையும் வசனமும் அண்ணாவின் இந்தக் கதைக்கு மெருகூட்டின.

அண்ணா திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்புவரை படங்கள் முழுக்க வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், சில படங்கள் மக்களுக்கு புரியாமல்கூட போனதுண்டு. இந்த நிலையை அண்ணாவின் தமிழும், வசனமும் மாற்றிக்காட்டியது என்று சொல்லலாம். அரசியல் தவிர, தமிழ் திரைப்படத்துக்கும் திருப்புமுனையைத் தந்தார் பேரறிஞர் அண்ணா.
(தொடரும்...)

24 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 4

Posted by Gunalan Lavanyan 7:02 AM, under | No comments

தி.மு.க. உதயம்
என்ன சொன்னாலும் பெரியார் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவரின் முடிவு இறுதிசெய்யப்பட்ட முடிவு. அண்ணாவுக்கு பெரியாரின் வாரிசு அரசியல் பிடிக்கவில்லை. அதனால், பெரியாரின் நிலைப்பாட்டையும் தன்னுடைய நிலைப்பாட்டையும் விளக்கி திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எழுதினார். அண்ணாவின் நிலைக்கு உடன்பட்ட தம்பிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’. அண்ணா தீர்க்கமாக முடிவெடுத்தார். தன் தம்பிகளோடு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார். வேறொரு பெயரில் தி.க-வுக்கு மாற்றாக இன்னொரு இயக்கத்தை தொடங்குவது என்று முடிவு செய்தார். தொடங்கினார். அந்த இயக்கம் 1949 செப்டம்பர் 17 அன்று உதயமானது. பெயர்: தி.மு.க - திராவிடர் முன்னேற்றக் கழகம்.

தி.க-வில் பெரியார் மட்டும்தான் எல்லா பொறுப்புகளையும் வகித்தார். யாருக்கும் பொறுப்புகளை பகிர்ந்தளிக்க அவருக்கு விருப்பமில்லை. ஆனால், தி.மு.க-வில் எல்லோருக்கும் பொறுப்பு. எல்லோரும் கட்சியின் தூண்கள் என்று அண்ணா நினைத்தார். அதனால், அனைவருக்கும் பொறுப்புகளை பகிர்ந்து அளித்தார். பொதுச் செயலாளராக அண்ணா செயல்பட்டார். கழகத்துக்கு கொடியும் தேர்வு செய்யப்பட்டது. கறுப்பு - சிவப்பு நிறத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கழகக் கொடி பறக்கத் தொடங்கியது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்தது. காங்கிரஸின் திட்டங்களும், செயல்பாடுகளும் அண்ணாவுக்கு துளியும் பிடிக்கவில்லை. அதனால், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எதிராக கழகத் தொண்டர்களை ஒன்று திரட்ட முடிவு செய்தார். தமிழகமெங்கும் தி.மு.க-வுக்கு கிளைகள் தொடங்கப்பட்டன. கூட்டங்கள், மாநாடுகள் நடந்தன. தமிழகமே தி.மு.க-வின் பக்கம் திரும்பியது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்துகிற காங்கிரஸின் மக்கள் விரோதப் போக்குகளை தி.மு.க. வன்மையாகக் கண்டித்தது. பேரணிகள், கூட்டங்கள், துண்டறிக்கைகள் வழியாக அண்ணா மக்களைச் சந்தித்தார். அதேநேரத்தில், காங்கிரஸ் எதிர்ப்பு மக்களுக்கு பாதகத்தை விளைவித்துவிடக் கூடாது என்பதிலும் அவர் கண்ணாக இருந்தார்: ‘காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரில் பொது சொத்துகளை பாழ்படுத்தக்கூடாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தேவை’ என்று, தன் தம்பிகளுக்கு அண்ணா அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் 1952-ல் பாராளுமன்றத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் தேர்தல் வந்தது. அண்ணாவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஆனாலும், கட்சி ஆரம்பித்து அப்போதுதான் மூன்று ஆண்டுகள். அதனால், ஆழம் தெரியாமல் காலை விட அவர் விரும்பவில்லை. அதேநேரத்தில், அன்றைய அரசியல் சட்டம் திராவிடர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கவில்லை. ஆகவே, அத்தகைய ஒரு சட்டத்தின் கீழ் நடைபெறும் தேர்தலை புறக்கணிப்பதாக அண்ணா அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இதைத் தொடர்ந்து, அடுத்த தேர்தலுக்குள் தி.மு.க-வை பலப்படுத்தவேண்டும் என்று அண்ணா தீவிர முயற்சியில் இறங்கினார். அதன் முதல்கட்டமாக 1956-ல் தி.மு.க-வின் மாநில மாநாடு திருச்சியில் கூடியது. மாநாட்டுக்கு வந்தவர்களை இரண்டு பெட்டிகள் வரவேற்றன. ஒன்று, சிவப்பு. மற்றொன்று கறுப்பு. தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாம் என்று விரும்பம் கொண்டவர்கள் தங்களுடைய வாக்குகளை சிவப்புப் பெட்டியில் போடவேண்டும். போட்டியிடத் தேவையில்லை என்று கருதுபவர்களின் வாக்கு கறுப்பு பெட்டியில் போய்ச் சேரவேண்டும். சிவப்புப் பெட்டியில் வாக்குகள் அதிகரித்தன. தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

தேர்தலில்  தி.மு.க.
இதைத்தொடர்ந்து, 1957-ல் காங்கிரஸை எதிர்த்து தி.மு.கழகம் களம் கண்டது. அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் 112 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தலில் தி.மு.க.-வுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. முதல் தேர்தல் முடிவிலேயே 15 இடங்களை தி.மு.க. பிடித்தது. காஞ்சியில் அண்ணாவுக்கே வெற்றி! மீண்டும் காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைத்தபோதிலும், முழுமையான வெற்றி காங்கிரஸுக்கு கிடைக்காமல் போனது, அந்த இயக்கத்தில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கட்சி தொடங்கிய எட்டு ஆண்டுகளில் தி.மு.க. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.


சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து அண்ணா பேசினார். அவருடைய பேச்சில் ஆழ்ந்த கருத்துகள் இருந்தன. எதிர்கட்சிக்காரர்களும் அவருடைய பேச்சுக்கு மயங்கினர். சிந்தனையை தூண்டக்கூடிய வகையில் அண்ணா பேசினார்.

தி.மு.க. தமிழகமெங்கும் வெற்றிக்கொடி கட்டியிருந்த நேரத்தில், 1959 - சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் வந்தது. தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. மேயர் பதவியும் தி.மு.க-வுக்கே! இந்த வெற்றி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. தம்பிகள் கட்சியின் வளர்ச்சிக்கு அண்ணாவோடு சேர்ந்து அதிகமாக உழைத்தார்கள்.

20 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 3

Posted by Gunalan Lavanyan 2:27 AM, under | 2 comments

திராவிடர் கழகம் உதயம்
சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு கூடியது. மாநாட்டில் அண்ணா சில தீர்மானங்களைக் கொண்டுவந்தார்: பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட சர், ராவ்பகதூர், திவான் பகதூர், ராவ் சாகிப் போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் அவற்றை ஒதுக்கித்தள்ள வேண்டும். இனி அத்தகைய பட்டங்களை யாரும் பெறக்கூடாது. ‘நீதிக் கட்சி’ என்ற பெயருக்கு பதிலாக ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்ற வேண்டும் - இப்படி பல தீர்மானங்களை அண்ணா முன்மொழிந்தார். இந்தத் தீர்மானங்களுக்கு ‘அண்ணா தீர்மானங்கள்’ என்று பெரியார் பெயர் வைத்தார்.

பட்டம் பதவிகளைத் துறக்க விரும்பாதவர்கள் அண்ணாவின் தீர்மானங்களுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையெல்லாம் மீறி பெரியாரின் ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நீதிக்கட்சி என்ற பெயர் மறைந்தது. திராவிடர் கழகம் மலர்ந்தது.

மாநாடு முடிந்தபிறகு, திராவிடர் கழகத்துக்கு மாவட்டங்கள் தோறும் கிளைகள் தொடங்கப்பட்டன. தி.க-வின் செயல்பாடுகளை மக்கள் கவனிக்கத் தொடங்கினர். திராவிடர் கழகம் செல்வாக்குப் பெற்ற இயக்கமாக வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்காக அண்ணா அயராது உழைத்தார்.

பெரியார் – அண்ணா அறிக்கைப் போர்
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை திராவிடர் கழகத்தினர் முன்வைத்தனர். தி.க.வின் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. 1947, இந்தியாவுக்கு சுதந்திரம் தருவதென்று முடிவு செய்யப்பட்டிருந்த நேரம். 1947 ஆகஸ்ட் 6 ‘விடுதலை’ இதழில் பெரியார் ஓர் அதிர்ச்சிகரமான அறிக்கை விடுத்தார்: ‘திராவிட நாடு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியை துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்பதுதான் பெரியாரின் அந்த அறிக்கை. பெரியாரின் இந்த முடிவில் அண்ணாவுக்கு உடன்பாடு இல்லை. அதனால், பெரியார் அறிக்கைக்கு தன்னுடைய திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எதிர் அறிக்கை விட்டார்: ‘ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி ஒழியும் நாள். உலகமே பேசக்கூடிய நாள். வரலாற்றில் இடம்பெறும் நாள். ஆகவே, அந்தத் திருநாளைக் கொண்டாடவேண்டும்’ என்று அண்ணா அறிக்கையில் கூறினார்.

சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அண்ணா எதிர்ப்பாளர்கள், அண்ணாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பெரியாரை திசை திருப்பினர். கழகத்தில் அண்ணா எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்தன. இந்த எதிர்ப்பை அண்ணா எதிர்பார்த்தார். எதிர்ப்பு வரும் என்பதற்காக, அகில இந்தியாவே கொண்டாடக்கூடிய திருநாளை துக்க நாளாக ஏற்றுக்கொள்ளமுடியுமா? அண்ணாவின் அறிக்கை பெரியாரை கோபம் கொள்ளச் செய்தது. இதன்பிறகு அண்ணாவின் கழகப் பணிகள் சற்று ஓயத்தொடங்கின. அதனால், தி.க-வில் உற்சாகம் குறைந்தது.

இந்தநிலையில் அண்ணாவை சமாதானப்படுத்தும் விதமாக 1948 அக்டோபர் 23 அன்று ஈரோட்டில் சிறப்பு மாநாட்டை பெரியார் கூட்டினார். மாநாட்டில் பேசிய பெரியார், ‘நான் பொதுத்தொண்டில் ஈடுபட்டு நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கோ வயது எழுபதுக்கும் மேல். எத்தனை நாட்களுக்குத்தான் என்னால் உழைக்க முடியும்? எனக்குப் பின் அண்ணாதுரையால்தான் கழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுத்துவிடுகிறேன். இதன்மூலம் தந்தையாகிய யான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனி தனயனாகிய அண்ணா தன் கடமையைச் செய்ய வேண்டும்’ என்று பேசினார். பெரியார் - அண்ணா கருத்து வேறுபாடு தணிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், திடீரென்று நடந்த ஒரு சம்பவம் பெரியார் - அண்ணாவுக்கு இடையில் விரிசலை அதிகப்படுத்தியது.

1949-ம் ஆண்டு பெரியார், மணியம்மையை இரண்டாவது திருமணம் செய்தார். ‘திராவிடர் கழகத்தின் இளம் தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; அதனால்தான், கழகத்தையும், கழகத்தின் சொத்துகளையும் பாதுகாக்க இந்த வயதில் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார். முன்னதாக அண்ணாவால் மட்டும்தான் கழகத்தைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று கூறியிருந்த பெரியார், இப்போது இப்படிக் கூறுவது கழகத் தொண்டர்கள் மத்தியிலும், அண்ணா ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. பெரியார் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. அவர்களை அண்ணா அமைதிப்படுத்தினார். ‘ஆவேசமும் ஆத்திரமும் கொண்டால், மக்கள் மத்தியில் கழகத்துக்குத்தான் அவப்பெயர். அதனால், பொறுத்திருங்கள் முடிவெடுப்போம்’ என்று ஆறுதல்படுத்தினார்.

16 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 2

Posted by Gunalan Lavanyan 10:10 PM, under | No comments

தொடர்கிறது... (முதல் அத்தியாயம் படிக்கா தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கலாம்:                                                                                                             http://doordo.blogspot.com/2010/03/1909-2009.html) 1935-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இந்த ஆண்டு திருப்பூரில் செங்குந்தர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்தான் மிகப்பெரிய சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த அண்ணாவும் பெரியாரும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். முன்னதாக மாநாட்டில் அண்ணா பேசினார். அவருடைய வசீகரமான பேச்சு பெரியாரை ஈர்த்தது. அண்ணாவை எப்படியாவது சுயமரியாதை இயக்கத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று பெரியார் விரும்பினார். பெரியாரின் விருப்பம் நிறைவேறியது. அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். அண்ணாவின் பேச்சும் எழுத்தும் - விடுதலை, குடியரசு பத்திரிகைகளின் துணையாசிரியர் பொறுப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.

‘விடுதலை’யில் அவர் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ‘ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள்’ என்ற தலையங்கத்தை பெரியார் படித்தார். அண்ணாவின் எழுத்து, மேலும் பெரியாரை ஈர்த்தது. படித்த பெரியார் தரை தளத்தில் இருந்தார். எழுதிய அண்ணா மூன்றாவது மாடியில். மாடிக்குச் செல்லும் பாதையோ குறுகலானது. அந்த படிகளில் ஏறி மாடிக்குச் செல்வது பெரியாருக்கு சற்று சிரமம்தான். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், ‘அண்ணா... அண்ணா...’ என்று அழைத்தவாறு மாடி ஏறிவிட்டார்.

பெரியார் வந்தவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் அண்ணா. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் ஏன் வரவேண்டும். சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் அண்ணா. பெரியார் அதைப் பொருட்படுத்தாமல், ‘அண்ணாதுரை, நீங்கள் எழுதிய ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள், பிரமாதம்... பிரமாதம்...’ என்று பாராட்டினார். பெரியாருக்கு யாரையும் பாராட்டும் வழக்கம் இல்லை. ஆனால், அண்ணாவின் தலையங்கம் அவரை மூன்றாவது மாடியே ஏறவைத்துவிட்டது. அண்ணாவின் எழுத்தாற்றல் பெரியாரையே மாற்றியது.

இந்தி எதிர்ப்பு
இந்தச் சூழலில் 1937-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தேர்தல் வந்தது. காங்கிரஸ் அமோக வெற்றி. ராஜாஜி மாகாண முதலமைச்சர் ஆனார். 1938-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டு ராஜாஜி இந்தி மொழியை கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார். 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்தி கட்டாயத்தை தமிழ்நாடே எதிர்த்து போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் பெரியார், அண்ணா, மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், மு.சி.பூரணலிங்கம் பிள்ளை, தெ.பொ.வேதாசலம், அழகிரிசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், ஈழத்து சிவானந்த அடிகள் போன்றோர் தீவிரம் காட்டினர்.

‘எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி, எத்தனை பட்டாளம் கொண்டு வரும்’ என்று அண்ணா முழங்கினார். ‘இப்படை தோற்கின், எப்படை வெல்லும்’ என்று தமிழர்களை உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்தார். பள்ளிக்கூடங்கள் முன் மறியல்கள் நடந்தன. இந்தி எதிர்ப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறி பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனை. அண்ணாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனை. இந்தி திணிப்புக்கு எதிராக எழுதிய பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டன. பத்திரிகை ஆசிரியர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்பு கூட்டங்களுக்கு தடை! ‘இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அடக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் காங்கிரஸ் தன் புனிதத்தை இழந்துவிட்டது’ என்று மகாகவி ரவீந்திரநாத் தாகூர், ஜின்னா, அயத்கான் போன்றோர் குற்றம் சாட்டினர்.

ராஜாஜி பின்வாங்கினார். இந்தி எல்லாப் பள்ளிகளிலும் இல்லை. சில பள்ளிகளில் மட்டும்தான் என்று அறிவித்தார். அப்படியும் போராட்டம் ஓயவில்லை. 1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் அனுமதி இல்லாமலேயே இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியது. இதைக் கண்டித்து மாகாண காங்கிரஸ் அரசுகள் பதவி விலகின. ராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒருவழியாக இந்தி கட்டாயம் கதை முடிந்தது.

‘சாமி’யார்? அண்ணா
1940-ம் ஆண்டு வட இந்தியா முழுவதும் பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரோடு அண்ணாவும் சென்றார். இந்தப் பயணத்தின்போது வெண்தாடியுடன் கங்கை நதிக்கரையில் பெரியார் நடந்துச் செல்வார். அவரோடு அண்ணாவும் நடப்பார். பெரியாரின் தாடியையும் அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற சால்வையையும் பார்த்த பலர், ‘பெரிய சாமியாராக இருக்கிறார்’ என்று பெரியார் காலில் விழுந்து கும்பிட்டார்கள். ‘சாமியாருடன் வருகின்றவர் அவருக்குச் சீடராக இருப்பார். அதனால், அவருக்கும் சக்தி இருக்கும்’ என்று நினைத்து அண்ணாவின் காலிலும் விழுந்து கும்பிட்டார்கள். இந்தச் சம்பவம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மக்கள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

'தேவதாசி முறை' ஒழிப்பில் நீதிக் கட்சி பல சாதனைகள் புரிந்திருந்தது. ஆனால், உட்கட்சி பூசலால் கட்சி வீழ்ந்துகொண்டு இருந்தது. பொப்பிலி அரசர் நீதிக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். பி.டி.ராஜன், குமாரராஜா முத்தையா செட்டியார் என்று யாரும் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில் தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருந்த பெரியாரால்தான் நீதிக் கட்சியை கட்டிக்காக்க முடியும் என்று கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.


அதுவரை நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்த பெரியார், 1940 ஆகஸ்ட் 2-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நீதிக்கட்சி புத்துயிர் பெறவேண்டுமானால் கட்சியின் பெயரை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தார். பெரியாரின் இந்த முடிவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் சம்மதிக்கவில்லை. அவரை தலைமைப் பதவியிலிருந்து வீழ்த்த நினைத்தனர். ‘பெரியார் சர்வாதிகாரம் செய்கிறார்’ என்று சொல்லி, பொதுச்செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதன், பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் செயற்குழு அண்ணாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. (தொடரும்...)