24 April 2011

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு

Posted by Gunalan Lavanyan 11:28 PM, under | No comments


புட்டப்பர்த்தி சாய்பாபா ஞாயிறு அன்று (ஏப்ரல் 24) காலை 7.30 மணிக்கு மரணமடைந்தார். ஞாயிறு மாலை 6 மணி முதல் குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக பாபாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. புதன் அன்று (ஏப்ரல் 27) இறுதிச் சடங்கு நடைபெறும் என்று ஆஸ்ரம வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.



பாபாவின் இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள். பாபாவின் மறைவால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு

வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யப்படும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நான்கு நாளும் அனந்தபூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆந்திர அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்

புட்டபர்த்தி சாய்பாபா மறைவுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய - மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாபாவின் மரணச் செய்தியை கேட்டுவிட்டு கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ’சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் பாபா. இதன்மூலம் தமிழக மக்களின் இதயத்தில் அவர் இடம் பிடித்துவிட்டார்’ என்று கூறியிருக்கிறார். ‌ஜெயலலிதா வெயிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சாய் பாபாவின் இழப்பு மனித குலத்துக்கு பேரிழப்பு’ என்று தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’தெய்வீகத் தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்தவர்’ என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாபா மறைவால் நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது. சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது’ என்று கூறியிருக்கிறார்.

அஞ்சலி

தமிழ்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாபாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி சென்று அஞ்சலி செலுத்தினார். ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு


















பாபா மரணத்தில் மர்ம முடிச்சுகள்!

Posted by Gunalan Lavanyan 3:48 PM, under | 2 comments

உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று மரணம் அடைந்தார்.

இதயக் கோளாறு, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்த பாபாவுக்கு வயது 85. பாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். அதனால், அவருடைய மரணச் செய்தியைக் கேட்ட பலர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறர்கள்.



ஆனால், பாபாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக ஆந்திரா வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பாபா இருந்த புட்டபர்த்தியில் கடந்த ஒரு வார காலமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. அதற்குக் காரணமே அவருடைய மரணத்தால் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்று அவருடைய பக்தர்கள் கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, அவர் இறந்தபிறகுதான் 144 தடை உத்தரவே பிறப்பக்கப் பட்டது என்றும், ஆனால், உடனே விஷயம் வெளியில் தெரிந்தால் பதட்டமான சூழ்நிலை உருவாகிவிடும் என்பதால், அதைத் தடுப்பதற்காகத்தான் ஒரு வாரம் காலதாமதமாக மரணச் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் சிலர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் புட்டபர்த்தியின் மாவட்ட ஆட்சியர் ஒருமுறை மருத்துவ மனைக்கு சென்று பாபா உயிரோடுதான் இருக்கிறார் என்றும், ஆனால், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என்றும் தகவல் கூறியிருந்தார். ஆனால், அந்தத் தகவலும் உண்மையில்லை என்று ஒருசாரார் பேசிக் கொள்கிறார்கள்.

அதேநேரத்தில் பாபா டிரஸ்டுக்குச் சொந்தமான சொத்தை யார் நிர்வகிப்பது என்ற தகராறின் காரணமாகத்தான் மரணச் செய்தியை மருத்துவர்களே அறிவிக்காமல் ஒத்திவைத்து இருந்தார்களோ என்ற சந்தேகமும் பக்தர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

எது எப்படியிருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரத்தான் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பாபாவின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் அவிழும்.

19 April 2011

180 டிகிரி

Posted by Gunalan Lavanyan 8:28 PM, under | No comments

180 டிகிரி படத்திலிருந்து சில காட்சிகள்...


















18 April 2011

நயன்தாரா மாதிரி!

Posted by Gunalan Lavanyan 12:02 AM, under | No comments


திரைப்பட பாடலாசிரியர் பா விஜயின் ஸ்டைலில் அடுத்து கதாநாயகனாக அறிமுகமாகும் சினிமா கவிஞர் சினேகன். ஏற்கெனவே அமீர் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்து, டான்ஸ், காமெடி என கலக்கிய சினேகன் இப்போது உயர்திரு 420ஆக அவதாரம் எடுத்து நிற்கிறார். நயன்தாராவின் ஜெராக்ஸ் காப்பி என்று சொல்லப்படும் கர்நாடகப் பைங்கிளி மேக்னா ராஜ்தான் படத்தின் கதாநாயகி.


இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரேம்நாத் உயர்திரு 420இன் இயக்குனராக பரிணமித்து இருக்கிறார். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சகமான படமாக உயர்திரு 420 உருவாகி வருவதாகக் கூறுகிறார்கள்.

படத்தின் சில காட்சிகள்...








14 April 2011

ராதாவின் எதிர்பார்ப்பு

Posted by Gunalan Lavanyan 8:06 AM, under | No comments

நீண்ட நாட்களாக திரைக்குவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு இன்னு வராமலேயே இருக்கும் படம் கோ. ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகள் கார்த்திகா இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

காதலர் தினத்தில் வெளிவருவதாகப் பேசப்பட்ட ’கோ’ உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளிவரலாம் என்று கூறப்பட்டது. அதை உறுதி செய்வதுமாதிரி படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 14 அன்று படம் திரைக்கு வரும் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டு இருந்தார். ஆனால், ஏப்ரல் 14 அன்றும் வெளிவருகிறமாதிரி எந்த அறிகுறியும் இல்லை.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘மதராசபட்டினம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மைனா’ படங்களுக்குப் பிறகு கோ படத்தை வெளியிட்டு வெற்றிப்படமாக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார் உதயநிதி, ஆனால், பின்னணி இசை அமைப்பதில் ஹாரிஸ் ஜெயராஜ் காலம்தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணி எந்தநிலையில் இருக்கிறது என்பதும் தெரியவில்லை. 

அதனால், ராதாவும் அவர் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் கோ படம் எப்போது வெளியாகும் என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

கோ படத்தின் சில காட்சிகள்...















13 April 2011

பத்து சீமான்களின் வேலையைச் செய்த தங்கபாலு!

Posted by Gunalan Lavanyan 6:54 AM, under | No comments

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எஸ்.வி.சேகர் தன்னுடைய சொத்துக்கணக்கை தாமாகவே சென்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் அளித்தார். கடந்த 5 ஆண்டுகளில் மனைவி மற்றும் தன்னுடைய வருமானம் பற்றிய வருமானக் கணக்கை தேர்தல் ஆணையரிடம் அளித்தார். அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை உண்டாக்கிய இந்தச் செயல் பற்றி எஸ்.வி. சேகரிடமே கேட்டோம்.

எதற்காக திடீரென்று தேர்தல் ஆணையரை சந்தித்து சொத்துக்கணக்கு கொடுத்தீர்கள்..?

தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரும் இப்படித்தான் கேட்டார். ‘நீங்கள்தான் போட்டியிடவில்லையே, எதற்காக என்னிடம் கொடுக்கிறீர்கள்’ என்று கேட்டார்? எம்எல்ஏ ஆகும்போது சொத்துக்கணக்கை தாக்கல் செய்த மாதிரிதான் இப்பவும் கொடுத்து இருக்கிறேன். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அதனால், கடந்த 5 ஆண்டுகளில் என்னுடைய வருமானம், என் மனைவியுடைய வருமானம் மற்றும் எங்கள் சொத்து மதிப்புகளைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் பிரவீன்குமாரிடம் கொடுத்தேன். தேர்தலில் நிற்கவில்லை என்பதற்காக கடந்த 5 ஆண்டுகள் 100 கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டு ஓடிவிடலாமா? எல்லோருமே இப்படி தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும். ஆனால், யாரும் செய்வது இல்லை. செய்யவேண்டும் என்று விதியும் இல்லை. ஆனால், நான் செய்திருக்கிறேன். நான் எம்.எல்.ஏவாக இருக்கும்போது பதவியைப் பயன்படுத்தி எதையும் சம்பாதிக்கவில்லை என்பதை சொல்வதற்காகத்தான் அப்படிச் செய்தேன். எல்லாருக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்.

சொத்துக்கணக்கு தாக்கல் செய்தபோது...


காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கு மனு கொடுத்து இருந்தீர்களே என்ன ஆனது?

ஆமாம் கொடுத்தேன். ஆனால், அது நடக்கக் கூடாது என்று எப்படியோ தடுத்துவிட்டார்கள். ஆனால், நான் யாரையும் குற்றம் சொல்லத் தயாராக இல்லை. தார்மீக அடிப்படையில் கேட்டேன்; கொடுக்கவில்லை. ஆனால், எனக்கு காங்கேயத்தில் ஒதுக்கியிருப்பதாக தகவல் வந்தது. அது நடக்கும் என்று இருந்தேன். ஆனால், வேட்பாளரை அறிவிப்பதற்கே இழுபறி நீடித்து வந்ததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், இப்போது தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத தங்கபாலு போட்டியிடுகிறார். தங்கபாலு யார் என்றுகூட மக்களுக்குத் தெரியாது. மெகா டிவி வெச்சிருக்காங்களே அந்த அம்மாவோட புருஷனா... வேட்புமனு நிராகரிச்சாங்களே அந்த அம்மாவோட புருஷனா... என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். இதனால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; காங்கிரஸுக்குத்தான் நஷ்டம். 10 சீமான் செய்ய வேண்டிய வேலையை தங்கபாலுவே செய்துவிட்டார்.

விருப்பமனு தாக்கல் செய்தபோது...
தலைவரே மாற்று வேட்பாளர் என்பது கேலிக்குரியதாகிவிட்டதே?

ஒரு கட்சித் தலைவர் டம்மி புருஷனாக இருக்கலாம்; ஆனால், டம்மி வேட்பாளராக இருக்கக் கூடாது. ஆனால், தங்கபாலு டம்மி வேட்பாளராக இருக்கிறார் என்றால் என்ன சொல்வது. (சிரிக்கிறார்)

எதற்காக வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடித்து வந்தது?

எல்லாரிடமும் பணம் வாங்கிக்கொண்டு யாரை அறிவிப்பது, யாரை தவிர்ப்பது என்று தெரியாமல் குதிரை பேரம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அதுதான் காரணம். இதுபற்றி ஏற்கெனவே ராகுல்காந்தியிடம் பேசியிருக்கிறேன்.

என்ன பேசினீர்கள்?

தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே எல்லாத் தொகுதிகளிலும் தகுதியுடையவர்களை பட்டியலிட்டு வைத்துக்கொண்டு, கூட்டணி பிரச்னை, இட ஒதுக்கீட்டுப் பிரச்னை எல்லாம் தீர்ந்தபிறகு ஏற்கெனவே முடிவுசெய்து வைத்திருப்பவர்களை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தேன். அப்படி செய்திருந்தால், இந்த இழுபறிக்கு இடமே இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், அதை கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் தடுத்துவிட்டார்கள். அதுமட்டும் இல்லாமல், டெல்லியில் உள்ள தலைவர்களின் மனநிலையே வேறு. தமிழ்நாட்டில் தலைமையில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர்கள் கேட்பார்கள். அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. தேர்தல் முடிந்ததும் தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்தே தூக்கினாலும் தூக்கிவிடுவார்கள்!

தங்கபாலு வேண்டுமென்றே சதி செய்துதான் தன் மனைவியை வேட்பாளராக அறிவித்து, இப்போது தானே போட்டியிடுகிறார் என்று கூறுகிறீர்களா..?

அவர் சதி செய்தார் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு கட்சித் தலைவர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் தங்கபாலு. இவருடைய நடவடிக்கையால் கட்சிக்குத்தான் மரியாதைக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

தங்கபாலு நடவடிக்கையால் மயிலாப்பூரில் காங்கிரஸ் ஜெயிக்காது என்று சொல்கிறீர்களா..?

நான் அப்படி சொல்லவில்லை. வெறும் பிராமணர்கள் மட்டும் இருக்கிற தொகுதி இல்லை மயிலாப்பூர். இங்கே குடிசைவாழ் மக்கள் இருக்கிறார்கள்; மீனவ மக்கள் இருக்கிறார்கள்; படித்தவர்கள் - படிக்காதவர்கள் என்று எல்லாதரப்பு மக்களும் வசிக்கிறார்கள். தங்கபாலு இப்படி நடந்துகொண்டதால், காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையே போய்விட்டது. அதுவும் இல்லாமல் குரங்கு கையில் கிடைத்த அப்பம் மாதிரிதான் மயிலாப்பூர் நிலைமை இருக்கிறது. பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்யும்போது வழக்கறிஞர், ஆடிட்டர் எல்லாரையும் வைத்து மனுவை பரிசீலனை செய்துதான் பூர்த்தி செய்து கொடுப்பார்கள். அப்படி எதுவுமே செய்யாமல் தங்கபாலு இப்படி செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு தலைவருக்கு வேண்டிய எந்தத் தகுதியும் அவரிடம் இல்லை. யார் கையில் கிடைக்கக் கூடாதோ, அங்கே மயிலாப்பூர் தொகுதி போயிருக்கிறது.
பொதுவாக இந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்கிறீர்களா?

திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெறும். தேர்தலில் நிற்பவர்கள் வெற்றி பெறுவதற்காகத்தானே போட்டியிடுகிறார்கள். தோற்பதற்காக யாரும் போட்டியிடமாட்டார்கள். அதனால், இந்தக் கூட்டணி தோற்கும் என்று நான் எப்படி சொல்வேன். எப்பவும் நெகடிவாக யோசிக்கக் கூடாது. ஆனால், மக்கள் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது. எதுவேண்டுமானாலும் நடக்கலாம்!
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து என்ன பேசினீர்கள்?
மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்து அவரிடம் ஆசிபெற்றேன். அவர்கூட சொன்னார், ‘என்னாய்யா உனக்குத்தான் கிடைக்கும்னு நினைச்சேன். இப்படி ஆகிவிட்டதே...’ என்றார். நான் என்ன சொல்வது.

கருணாநிதியை சந்தித்தபோது...

அதிமுகவில் இருந்திருந்தால் சீட் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாகக் கிடைத்திருக்கும். ஆனால், அதை வேண்டாம் என்று நான் மறுத்திருப்பேன். காங்கிரஸில் எனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கவில்லை என்றால் என்ன? எம்பி.யாக வேண்டும் என்று என் ஜாதகத்தில் எழுதியிருக்கும். அதனால், நான் எம்.பியாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எப்பவும் உயர்வாக சிந்திக்க வேண்டும். எம்.எல்.ஏ பதவி போயிடுச்சேன்னு அழக்கூடாது. பதவிக்காக ஆசைப்படுற ஆள் நான் கிடையாது. அப்படி இருந்திருந்தால், திமுகவில் போய் சேர்ந்திருப்பேனே!

பலே பாசிட்டிவ் யோசனைதான்

பேட்டி: சா.இலாகுபாரதி

பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி

Posted by Gunalan Lavanyan 1:14 AM, under | No comments

வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் போவதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்தனர். சிறப்புப் பேருந்துகள் இல்லாததால் கூட்டநெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.



எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழகத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதனால், தேர்தலில் வாக்களிப்பதற்காக பெரும்பான்மையான மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். பணி நிமித்தமாக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து வேலை செய்யும் பலர் வோட்டு போடுவதற்காக பஸ் பிடித்தி ஊருக்குத் திரும்ப கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். 

இதனால், செவ்வாய் அன்று (ஏப்ரல் 12) இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் நெரிசலில் மூழ்கியது. பேருந்தில் ஏறுவதற்குக் கூட இடம் இல்லாமல் 100 அடி சாலையில் மக்கள் நடந்தபடியே இருந்தனர். சிலர் லாரிகளிலும், பலர் சரக்கு வாகனங்களிலும் ஏறி பயணித்தனர். டாடா குட்டி யானை ஓட்டுனர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு பயணிகளிடம் வசூல் வேட்டை நிகழ்த்தத் தொடங்கிவிட்டனர். விழுப்புரம் - ரூ.200, திருவண்ணாமலை - ரூ.200, திருச்சி - ரூ.375, கும்பகோணம் - ரூ.350, மதுரை - ரூ.500 என்று வசூல் வேட்டை தொடர்கிறது.

அரசு போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்துகளுக்கு சரியான ஏற்பாடு செய்யாததால் மக்கள் இப்படி பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.