24 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 4

Posted by Gunalan Lavanyan 7:02 AM, under | No comments

தி.மு.க. உதயம்
என்ன சொன்னாலும் பெரியார் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவரின் முடிவு இறுதிசெய்யப்பட்ட முடிவு. அண்ணாவுக்கு பெரியாரின் வாரிசு அரசியல் பிடிக்கவில்லை. அதனால், பெரியாரின் நிலைப்பாட்டையும் தன்னுடைய நிலைப்பாட்டையும் விளக்கி திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எழுதினார். அண்ணாவின் நிலைக்கு உடன்பட்ட தம்பிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’. அண்ணா தீர்க்கமாக முடிவெடுத்தார். தன் தம்பிகளோடு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார். வேறொரு பெயரில் தி.க-வுக்கு மாற்றாக இன்னொரு இயக்கத்தை தொடங்குவது என்று முடிவு செய்தார். தொடங்கினார். அந்த இயக்கம் 1949 செப்டம்பர் 17 அன்று உதயமானது. பெயர்: தி.மு.க - திராவிடர் முன்னேற்றக் கழகம்.

தி.க-வில் பெரியார் மட்டும்தான் எல்லா பொறுப்புகளையும் வகித்தார். யாருக்கும் பொறுப்புகளை பகிர்ந்தளிக்க அவருக்கு விருப்பமில்லை. ஆனால், தி.மு.க-வில் எல்லோருக்கும் பொறுப்பு. எல்லோரும் கட்சியின் தூண்கள் என்று அண்ணா நினைத்தார். அதனால், அனைவருக்கும் பொறுப்புகளை பகிர்ந்து அளித்தார். பொதுச் செயலாளராக அண்ணா செயல்பட்டார். கழகத்துக்கு கொடியும் தேர்வு செய்யப்பட்டது. கறுப்பு - சிவப்பு நிறத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கழகக் கொடி பறக்கத் தொடங்கியது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்தது. காங்கிரஸின் திட்டங்களும், செயல்பாடுகளும் அண்ணாவுக்கு துளியும் பிடிக்கவில்லை. அதனால், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எதிராக கழகத் தொண்டர்களை ஒன்று திரட்ட முடிவு செய்தார். தமிழகமெங்கும் தி.மு.க-வுக்கு கிளைகள் தொடங்கப்பட்டன. கூட்டங்கள், மாநாடுகள் நடந்தன. தமிழகமே தி.மு.க-வின் பக்கம் திரும்பியது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்துகிற காங்கிரஸின் மக்கள் விரோதப் போக்குகளை தி.மு.க. வன்மையாகக் கண்டித்தது. பேரணிகள், கூட்டங்கள், துண்டறிக்கைகள் வழியாக அண்ணா மக்களைச் சந்தித்தார். அதேநேரத்தில், காங்கிரஸ் எதிர்ப்பு மக்களுக்கு பாதகத்தை விளைவித்துவிடக் கூடாது என்பதிலும் அவர் கண்ணாக இருந்தார்: ‘காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரில் பொது சொத்துகளை பாழ்படுத்தக்கூடாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தேவை’ என்று, தன் தம்பிகளுக்கு அண்ணா அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் 1952-ல் பாராளுமன்றத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் தேர்தல் வந்தது. அண்ணாவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஆனாலும், கட்சி ஆரம்பித்து அப்போதுதான் மூன்று ஆண்டுகள். அதனால், ஆழம் தெரியாமல் காலை விட அவர் விரும்பவில்லை. அதேநேரத்தில், அன்றைய அரசியல் சட்டம் திராவிடர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கவில்லை. ஆகவே, அத்தகைய ஒரு சட்டத்தின் கீழ் நடைபெறும் தேர்தலை புறக்கணிப்பதாக அண்ணா அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இதைத் தொடர்ந்து, அடுத்த தேர்தலுக்குள் தி.மு.க-வை பலப்படுத்தவேண்டும் என்று அண்ணா தீவிர முயற்சியில் இறங்கினார். அதன் முதல்கட்டமாக 1956-ல் தி.மு.க-வின் மாநில மாநாடு திருச்சியில் கூடியது. மாநாட்டுக்கு வந்தவர்களை இரண்டு பெட்டிகள் வரவேற்றன. ஒன்று, சிவப்பு. மற்றொன்று கறுப்பு. தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாம் என்று விரும்பம் கொண்டவர்கள் தங்களுடைய வாக்குகளை சிவப்புப் பெட்டியில் போடவேண்டும். போட்டியிடத் தேவையில்லை என்று கருதுபவர்களின் வாக்கு கறுப்பு பெட்டியில் போய்ச் சேரவேண்டும். சிவப்புப் பெட்டியில் வாக்குகள் அதிகரித்தன. தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

தேர்தலில்  தி.மு.க.
இதைத்தொடர்ந்து, 1957-ல் காங்கிரஸை எதிர்த்து தி.மு.கழகம் களம் கண்டது. அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் 112 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தலில் தி.மு.க.-வுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. முதல் தேர்தல் முடிவிலேயே 15 இடங்களை தி.மு.க. பிடித்தது. காஞ்சியில் அண்ணாவுக்கே வெற்றி! மீண்டும் காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைத்தபோதிலும், முழுமையான வெற்றி காங்கிரஸுக்கு கிடைக்காமல் போனது, அந்த இயக்கத்தில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கட்சி தொடங்கிய எட்டு ஆண்டுகளில் தி.மு.க. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.


சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து அண்ணா பேசினார். அவருடைய பேச்சில் ஆழ்ந்த கருத்துகள் இருந்தன. எதிர்கட்சிக்காரர்களும் அவருடைய பேச்சுக்கு மயங்கினர். சிந்தனையை தூண்டக்கூடிய வகையில் அண்ணா பேசினார்.

தி.மு.க. தமிழகமெங்கும் வெற்றிக்கொடி கட்டியிருந்த நேரத்தில், 1959 - சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் வந்தது. தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. மேயர் பதவியும் தி.மு.க-வுக்கே! இந்த வெற்றி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. தம்பிகள் கட்சியின் வளர்ச்சிக்கு அண்ணாவோடு சேர்ந்து அதிகமாக உழைத்தார்கள்.

20 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 3

Posted by Gunalan Lavanyan 2:27 AM, under | 2 comments

திராவிடர் கழகம் உதயம்
சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு கூடியது. மாநாட்டில் அண்ணா சில தீர்மானங்களைக் கொண்டுவந்தார்: பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட சர், ராவ்பகதூர், திவான் பகதூர், ராவ் சாகிப் போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் அவற்றை ஒதுக்கித்தள்ள வேண்டும். இனி அத்தகைய பட்டங்களை யாரும் பெறக்கூடாது. ‘நீதிக் கட்சி’ என்ற பெயருக்கு பதிலாக ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்ற வேண்டும் - இப்படி பல தீர்மானங்களை அண்ணா முன்மொழிந்தார். இந்தத் தீர்மானங்களுக்கு ‘அண்ணா தீர்மானங்கள்’ என்று பெரியார் பெயர் வைத்தார்.

பட்டம் பதவிகளைத் துறக்க விரும்பாதவர்கள் அண்ணாவின் தீர்மானங்களுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையெல்லாம் மீறி பெரியாரின் ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நீதிக்கட்சி என்ற பெயர் மறைந்தது. திராவிடர் கழகம் மலர்ந்தது.

மாநாடு முடிந்தபிறகு, திராவிடர் கழகத்துக்கு மாவட்டங்கள் தோறும் கிளைகள் தொடங்கப்பட்டன. தி.க-வின் செயல்பாடுகளை மக்கள் கவனிக்கத் தொடங்கினர். திராவிடர் கழகம் செல்வாக்குப் பெற்ற இயக்கமாக வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்காக அண்ணா அயராது உழைத்தார்.

பெரியார் – அண்ணா அறிக்கைப் போர்
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை திராவிடர் கழகத்தினர் முன்வைத்தனர். தி.க.வின் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. 1947, இந்தியாவுக்கு சுதந்திரம் தருவதென்று முடிவு செய்யப்பட்டிருந்த நேரம். 1947 ஆகஸ்ட் 6 ‘விடுதலை’ இதழில் பெரியார் ஓர் அதிர்ச்சிகரமான அறிக்கை விடுத்தார்: ‘திராவிட நாடு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியை துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்பதுதான் பெரியாரின் அந்த அறிக்கை. பெரியாரின் இந்த முடிவில் அண்ணாவுக்கு உடன்பாடு இல்லை. அதனால், பெரியார் அறிக்கைக்கு தன்னுடைய திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எதிர் அறிக்கை விட்டார்: ‘ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி ஒழியும் நாள். உலகமே பேசக்கூடிய நாள். வரலாற்றில் இடம்பெறும் நாள். ஆகவே, அந்தத் திருநாளைக் கொண்டாடவேண்டும்’ என்று அண்ணா அறிக்கையில் கூறினார்.

சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அண்ணா எதிர்ப்பாளர்கள், அண்ணாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பெரியாரை திசை திருப்பினர். கழகத்தில் அண்ணா எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்தன. இந்த எதிர்ப்பை அண்ணா எதிர்பார்த்தார். எதிர்ப்பு வரும் என்பதற்காக, அகில இந்தியாவே கொண்டாடக்கூடிய திருநாளை துக்க நாளாக ஏற்றுக்கொள்ளமுடியுமா? அண்ணாவின் அறிக்கை பெரியாரை கோபம் கொள்ளச் செய்தது. இதன்பிறகு அண்ணாவின் கழகப் பணிகள் சற்று ஓயத்தொடங்கின. அதனால், தி.க-வில் உற்சாகம் குறைந்தது.

இந்தநிலையில் அண்ணாவை சமாதானப்படுத்தும் விதமாக 1948 அக்டோபர் 23 அன்று ஈரோட்டில் சிறப்பு மாநாட்டை பெரியார் கூட்டினார். மாநாட்டில் பேசிய பெரியார், ‘நான் பொதுத்தொண்டில் ஈடுபட்டு நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கோ வயது எழுபதுக்கும் மேல். எத்தனை நாட்களுக்குத்தான் என்னால் உழைக்க முடியும்? எனக்குப் பின் அண்ணாதுரையால்தான் கழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுத்துவிடுகிறேன். இதன்மூலம் தந்தையாகிய யான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனி தனயனாகிய அண்ணா தன் கடமையைச் செய்ய வேண்டும்’ என்று பேசினார். பெரியார் - அண்ணா கருத்து வேறுபாடு தணிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், திடீரென்று நடந்த ஒரு சம்பவம் பெரியார் - அண்ணாவுக்கு இடையில் விரிசலை அதிகப்படுத்தியது.

1949-ம் ஆண்டு பெரியார், மணியம்மையை இரண்டாவது திருமணம் செய்தார். ‘திராவிடர் கழகத்தின் இளம் தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; அதனால்தான், கழகத்தையும், கழகத்தின் சொத்துகளையும் பாதுகாக்க இந்த வயதில் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார். முன்னதாக அண்ணாவால் மட்டும்தான் கழகத்தைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று கூறியிருந்த பெரியார், இப்போது இப்படிக் கூறுவது கழகத் தொண்டர்கள் மத்தியிலும், அண்ணா ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. பெரியார் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. அவர்களை அண்ணா அமைதிப்படுத்தினார். ‘ஆவேசமும் ஆத்திரமும் கொண்டால், மக்கள் மத்தியில் கழகத்துக்குத்தான் அவப்பெயர். அதனால், பொறுத்திருங்கள் முடிவெடுப்போம்’ என்று ஆறுதல்படுத்தினார்.

16 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 2

Posted by Gunalan Lavanyan 10:10 PM, under | No comments

தொடர்கிறது... (முதல் அத்தியாயம் படிக்கா தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கலாம்:                                                                                                             http://doordo.blogspot.com/2010/03/1909-2009.html) 1935-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இந்த ஆண்டு திருப்பூரில் செங்குந்தர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்தான் மிகப்பெரிய சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த அண்ணாவும் பெரியாரும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். முன்னதாக மாநாட்டில் அண்ணா பேசினார். அவருடைய வசீகரமான பேச்சு பெரியாரை ஈர்த்தது. அண்ணாவை எப்படியாவது சுயமரியாதை இயக்கத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று பெரியார் விரும்பினார். பெரியாரின் விருப்பம் நிறைவேறியது. அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். அண்ணாவின் பேச்சும் எழுத்தும் - விடுதலை, குடியரசு பத்திரிகைகளின் துணையாசிரியர் பொறுப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.

‘விடுதலை’யில் அவர் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ‘ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள்’ என்ற தலையங்கத்தை பெரியார் படித்தார். அண்ணாவின் எழுத்து, மேலும் பெரியாரை ஈர்த்தது. படித்த பெரியார் தரை தளத்தில் இருந்தார். எழுதிய அண்ணா மூன்றாவது மாடியில். மாடிக்குச் செல்லும் பாதையோ குறுகலானது. அந்த படிகளில் ஏறி மாடிக்குச் செல்வது பெரியாருக்கு சற்று சிரமம்தான். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், ‘அண்ணா... அண்ணா...’ என்று அழைத்தவாறு மாடி ஏறிவிட்டார்.

பெரியார் வந்தவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் அண்ணா. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் ஏன் வரவேண்டும். சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் அண்ணா. பெரியார் அதைப் பொருட்படுத்தாமல், ‘அண்ணாதுரை, நீங்கள் எழுதிய ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள், பிரமாதம்... பிரமாதம்...’ என்று பாராட்டினார். பெரியாருக்கு யாரையும் பாராட்டும் வழக்கம் இல்லை. ஆனால், அண்ணாவின் தலையங்கம் அவரை மூன்றாவது மாடியே ஏறவைத்துவிட்டது. அண்ணாவின் எழுத்தாற்றல் பெரியாரையே மாற்றியது.

இந்தி எதிர்ப்பு
இந்தச் சூழலில் 1937-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தேர்தல் வந்தது. காங்கிரஸ் அமோக வெற்றி. ராஜாஜி மாகாண முதலமைச்சர் ஆனார். 1938-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டு ராஜாஜி இந்தி மொழியை கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார். 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்தி கட்டாயத்தை தமிழ்நாடே எதிர்த்து போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் பெரியார், அண்ணா, மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், மு.சி.பூரணலிங்கம் பிள்ளை, தெ.பொ.வேதாசலம், அழகிரிசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், ஈழத்து சிவானந்த அடிகள் போன்றோர் தீவிரம் காட்டினர்.

‘எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி, எத்தனை பட்டாளம் கொண்டு வரும்’ என்று அண்ணா முழங்கினார். ‘இப்படை தோற்கின், எப்படை வெல்லும்’ என்று தமிழர்களை உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்தார். பள்ளிக்கூடங்கள் முன் மறியல்கள் நடந்தன. இந்தி எதிர்ப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறி பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனை. அண்ணாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனை. இந்தி திணிப்புக்கு எதிராக எழுதிய பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டன. பத்திரிகை ஆசிரியர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்பு கூட்டங்களுக்கு தடை! ‘இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அடக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் காங்கிரஸ் தன் புனிதத்தை இழந்துவிட்டது’ என்று மகாகவி ரவீந்திரநாத் தாகூர், ஜின்னா, அயத்கான் போன்றோர் குற்றம் சாட்டினர்.

ராஜாஜி பின்வாங்கினார். இந்தி எல்லாப் பள்ளிகளிலும் இல்லை. சில பள்ளிகளில் மட்டும்தான் என்று அறிவித்தார். அப்படியும் போராட்டம் ஓயவில்லை. 1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் அனுமதி இல்லாமலேயே இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியது. இதைக் கண்டித்து மாகாண காங்கிரஸ் அரசுகள் பதவி விலகின. ராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒருவழியாக இந்தி கட்டாயம் கதை முடிந்தது.

‘சாமி’யார்? அண்ணா
1940-ம் ஆண்டு வட இந்தியா முழுவதும் பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரோடு அண்ணாவும் சென்றார். இந்தப் பயணத்தின்போது வெண்தாடியுடன் கங்கை நதிக்கரையில் பெரியார் நடந்துச் செல்வார். அவரோடு அண்ணாவும் நடப்பார். பெரியாரின் தாடியையும் அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற சால்வையையும் பார்த்த பலர், ‘பெரிய சாமியாராக இருக்கிறார்’ என்று பெரியார் காலில் விழுந்து கும்பிட்டார்கள். ‘சாமியாருடன் வருகின்றவர் அவருக்குச் சீடராக இருப்பார். அதனால், அவருக்கும் சக்தி இருக்கும்’ என்று நினைத்து அண்ணாவின் காலிலும் விழுந்து கும்பிட்டார்கள். இந்தச் சம்பவம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மக்கள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

'தேவதாசி முறை' ஒழிப்பில் நீதிக் கட்சி பல சாதனைகள் புரிந்திருந்தது. ஆனால், உட்கட்சி பூசலால் கட்சி வீழ்ந்துகொண்டு இருந்தது. பொப்பிலி அரசர் நீதிக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். பி.டி.ராஜன், குமாரராஜா முத்தையா செட்டியார் என்று யாரும் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில் தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருந்த பெரியாரால்தான் நீதிக் கட்சியை கட்டிக்காக்க முடியும் என்று கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.


அதுவரை நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்த பெரியார், 1940 ஆகஸ்ட் 2-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நீதிக்கட்சி புத்துயிர் பெறவேண்டுமானால் கட்சியின் பெயரை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தார். பெரியாரின் இந்த முடிவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் சம்மதிக்கவில்லை. அவரை தலைமைப் பதவியிலிருந்து வீழ்த்த நினைத்தனர். ‘பெரியார் சர்வாதிகாரம் செய்கிறார்’ என்று சொல்லி, பொதுச்செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதன், பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் செயற்குழு அண்ணாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. (தொடரும்...)

09 March 2010

வன்கொடுமைக்கு எதிராக ஓர் அறிக்கை!

Posted by Gunalan Lavanyan 10:59 PM, under | No comments

சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக ஓவியர் சந்ரு இருந்தவரைக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வரை எளிதாக அனுக முடிந்தது. மாணவர்களி்ன் தேவைகள் சரியாக உணரப்பட்டன; புரிந்துகொள்ளப்பட்டன. அவர்களின் வேண்டுகோள்கள் அங்கீகரிக்கப்பட்டன; நிறைவேற்றப்பட்டு வந்தன.  ஆனால், தற்போது புதிதாக தற்காலிக முதல்வராகப் பதவியேற்று இருப்பவரால் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைகளும், அமைதியின்மையும், சாதிய துவேஷமும் நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது. அதற்குத் தூண்டுகோலாகவும், அடிகோலாகவும் கல்லூரியின் முதல்வரே இருந்து வருகிறார் என்றும் தெரிகிறது. இதுகுறித்து கவின்கலைக் கல்லூரியின் இந்நாள் – முன்னாள் மாணவர்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கை: (ஓர் பார்வையாளனாகவும், மாணவச் சமுதாயம் சாதிப்படிநிலைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற அக்கறைக் கொண்ட ஒரு சமூகவாதியாகவும் மட்டுமே இருந்து இந்த அறிக்கையை முழுமையாக  உங்களுக்கு அளிக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இட்டு, மாணவர் சமுதாயத்துக்கு துணை நில்லுங்கள்… சாதிய அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுங்கள்…)

சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர் மீது
நிகழ்ந்துள்ள மனித உரிமை மீறல், வன்கொடுமை குறித்து
உங்கள் கவனத்திற்கு...

தமிழக கலைப்பாரம்பரியத்தில் தனக்கென ஒரு தனித்த அடையாளம் கொண்டது சென்னை அரசு கவின்கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் மாசு மருவற்ற பல கலை ஆளுமைகள் முதல்வர்களாகவும் முதல்வர் பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.

தற்சமயம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பில் இருக்கும் ‘அடியாள்’ என்றும் ஜாதி வெறி செயல்பாடுகளுக்குப் பலசமயம் துறை ரீதியான தண்டனை அனுபவித்தவர் என்று பெயரெடுத்தவர் திரு.மனோகரன். ஓவியக் கல்லூரியில் பயிலும் சசிக்குமார் என்கின்ற முதுகலை முதல் ஆண்டு மாணவர் சுய ஆர்வத்தால் தமிழின் பெருமை மிகு அய்யன் திருவள்ளுவரின் 1330 திருக்குறளையும் சுடுமண் சிற்பமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு முடித்துள்ளார். மேலும், இத்திருக்குறள் சுடுமண் சிற்பங்களை செம்மொழி மாநாட்டு நேரத்தில் காட்சிப்படுத்தவும் திட்டமிட்டு இருந்தார். எழுதி முடிக்கப்பட்ட அனைத்து சிற்ப குறள் பலகைகளையும் சுடும் முயற்சிக்கு கல்லூரியில் ‘சூளை’ அமைத்துத்தர கல்லூரி முதல்வரை அணுகி இருக்கிறார். மாணவர்களுக்கு அவசியமான ‘சுடுமண் சூளை’ கல்லூரியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தி ரு.மனோகரன் அவர்கள் ‘சூளை’ அமைத்துத் தருவதாகவும் சிற்பம் செய்ய களிமண் வாங்கித் தருகிறேன் என்று கூறி ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான சசிக்குமார் என்ற மாணவர் 26.2.2010 மாலை மனோகர் அவர்களின் வாகனத்தை சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.

இச்சூழலில் மாணவர்களின் உரிமையை கேட்கும் கமல்ஹாசன், எஸ்வேந்திரன் என்ற இரண்டு மாணவர்களை (சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு எஸ்வேந்திரன் வரவில்லை, கமலஹாசன் அந்த இடத்திலேயே இல்லை) இச்சம்பவத்தை காரணமாக வைத்து இந்த சம்பவத்தில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அம்மாணவர்களின் மீது புகார் கொடுத்த கல்லூரி முதல்வர், தன்னுடைய சமுதாயம் சார்ந்து இயங்கும் காவல்துறை அதிகாரிகளின் துணைகொண்டு தன் அதிகாரத்தை பயன்படுத்தி அம்மாணவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாத வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்.

பொய் வழக்கில் பாதிக்கப்பட்ட எஸ்வந்திரன் தமிழக கலைச்சூழலில் கடந்த பத்து வருடங்காலமாக இயங்கிவரும் ஓவியரும் சிற்பியுமாவார். இவரது கைது அப்பட்டமாக பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்துள்ளது. இவர் உடன் பிறந்த தம்பி ஆனந்தகுமார் சிற்பக்கலை இறுதியாண்டு படித்து வருகிறார். சம்பவம் நடந்த இரவு சுமார் 11 மணி அளவில் சிற்பப்பணியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஆனந்தகுமாரை பெரியமேடு காவல்துறை ஆய்வாளர் ‘முருகேசன்’ தலைமையில் வந்த காவல் துறையினர் கல்லூரியிலிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இது சக மாணவர்களின் முன்னிலையில் நடந்துள்ளது.
இழுத்துச் செல்லப்பட்ட மாணவர் ஆனந்தகுமாரை பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி தன்னுடைய அண்ணன் எஸ்வந்திரன்தான் வாகனத்தை சேதப்படுத்த உடந்தையாக இருந்தார் என்று எழுதி வாங்கிக்கொண்ட காவல்துறை இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். வெள்ளிக்கிழமை இரவு சுமார் 1 மணியளவில் தன்னுடைய அறையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட எஸ்வந்திரன், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து, கொலை மிரட்டல் விடுத்து, சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தார். மறுநாள் சனிக்கிழமை காலை அங்குவந்த மனோகரன், ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், துணை ஆய்வாளர் நடராஜன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து பொய் புகார் எழுதிக்கொடுத்தனர். அச்சமயம் அங்கிருந்த மாணவர் ஆனந்தகுமாரை மனோகரன் மேற்படி காவலர்களின் முன்னிலையில் கடுமையாக கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். தற்காலிக முதல்வர் மனோகரன், சாதி ரீதியாகவே எப்போதும் செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பணிபுரிந்த குடந்தை அரசு ஓவியக் கல்லூரி, சென்னை அரசு ஓவியக்கல்லூரி ஆகிய இரண்டு இடங்களிலும் மாணவர்களை சாதி ரீதியாக மிரட்டி, அச்சுறுத்தியதன் காரணமாக துறை ரீதியாக விசாரிக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்து தண்டிக்கப்பட்டவர் என்பது யாவரும் அறிந்தது.

பாதிப்பிற்குள்ளான மாணவர் எஸ்வந்திரன், ஆனந்தகுமார், கமலஹாசன் மூவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்லூரி தற்காலிக முதல்வர் மனோகரனும் காவல்துறையினரும் கைகோர்த்து நிகழ்த்திய வன்கொடுமையான மனித உரிமை மீறலுக்கும் வன்முறைக்கும் பின்புலமாய் இருப்பது மனோகரனின் சமூகத்தைச் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி (செயலர், சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை) என்பது தெரிய வருகிறது. தனக்கு மூத்த ஆசிரியர்கள் பலர் முதல்வராக வருவதை மீறி, தன் இனம் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துணையுடன் முதல்வர் பொறுப்புக்கு வந்ததும் தன்னை இனி எவரும் கேள்வி கேட்க முடியாது என மாணவர்களை பலசமயம் மிரட்டும்போது குறிப்பிட்டுள்ளார். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாதிப்பற்றாளர் என்பதற்கு சான்றாக சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக் கல்லூரிகளில் முதல்வர் பொறுப்புகளில் உள்ள அவரின் இனத்தைச் சார்ந்த மனோகரன் (சென்னை), சந்திரசேகரன் (கும்பகோணம்) ஆகியோர் சாதி ரீதியான வன்முறைகளை நிகழ்த்தி இருப்பது கலைக்கல்லூரி வரலாற்றில் அதிர்ச்சியளிக்கு இருண்ட காலமாகும். இச்சூழல் தொடர்ந்தால் வளரும் மாணவர் சமுதாயம், இதுவரை சாதி பாகுபாடு பார்க்காமல் இருந்த ஓவியக்கல்லூரிகளின் நிலைமாறி சாதியக் குழுக்களாக, பிரிந்து வன்முறை சூழலுக்குத் தள்ளப்படும் அவலம் நிகழும். இவ்வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்புலமாக இருந்து காவலர்களை ஏவிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதும் அவரின் அடி வருடிகளாக செயல்படும் மனோகரன், சந்திரசேகரன் ஆகியோரின் சாதிய செயல்பாடுகளை தடுத்து நிறுத்திடவும் மாணவர்களின் பல்லாண்டுகால நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக கைகோர்க்க அழைக்கிறோம்.
மேலும், இந்திய கலைச்சூழலில் மிக முக்கிய ஆளுமையான ஓவியர் சந்ரு அவர்களையும் இச்சம்பவத்தில் உள்நோக்கத்துடன் காவல்துறையினரால் அவமானப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக படைப்பாளிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தங்களின் கருத்துகளை பதிவுசெய்ய தோழமையுடன் அழைக்கிறோம்.
இவண்
அரசினர் கவின்கலைக் கல்லூரிகளின்
இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள்

06 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 1

Posted by Gunalan Lavanyan 5:34 PM, under | No comments



சென்னை மெரினா கடற்கரையில் அணையா விளக்கு எரிய தூங்கிக்கொண்டிருக்கும் அண்ணா, வரலாற்று சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரில் 1909 செப்டம்பர் 15 அன்று பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அண்ணாதுரை. தந்தை நடராஜன் - தாய் பங்காரு அம்மாள். நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாவுக்கு ராஜாமணி என்கிற சித்தி இருந்தார். இவருக்கு அண்ணா என்றால் அளவுகடந்த பிரியம். இவர்தான் அண்ணாவை வளர்த்தார். அண்ணா இவரை அன்போடு ‘தொத்தா’தான் என்று அழைப்பார்.


கல்வி
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆரம்பப்பள்ளியில் ஆறு வயதில் அண்ணா சேர்க்கப்பட்டார். அந்தக்காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் குடுமி வைத்து, காது குத்தி, கடுக்கன் போடுவார்கள். அண்ணா குடுமியுடன்தான் பள்ளிக்குச் செல்வார். மாணவர்கள் எல்லோரும் கிராப்பு வெட்டி வரும்போது, தான் மட்டும் குடுமி வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இந்த விஷயத்தை எப்படியாவது தொத்தாவிடம் சொல்ல வேண்டும். தானும் கிராப்பு வெட்டிக்கொள்ள வேண்டும் என்று துடியாகத் துடித்தார். அவரின் ஆசை ஒருநாள் பலித்தது. தொத்தாவிடம் சொன்னார். தொத்தா தலையாட்டினார். மாணவன் அண்ணாதுரை கிராப்புத் தலையுடன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார்.

காஞ்சிபுரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அண்ணா சென்னை வந்தார். 1928-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி அமைந்தகரையில் இருந்தது. கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும்போதே 1930-ல் ராணி அம்மாவை திருமணம் செய்தார். இடைநிலை (இன்டர் மீடியட்) வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றார். அதிக மதிப்பெண் பெற்றும், மேல் படிப்பு படிக்க அண்ணாதுரைக்கு வசதி இல்லை. கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி அண்ணாவின் நிலையை அறிந்தார். அண்ணாவின் மேல்படிப்புக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தான் செய்து தருவதாகக் கூறினார். அண்ணாதுரை பி.ஏ. ஹானர்ஸ் படிக்க வழிவகுத்துக் கொடுத்தார்.

பேச்சாளர்
1931-லிருந்து மூன்று ஆண்டுகள் அண்ணா மேற்படிப்பு படித்தார். அந்த நாட்களிலேயே சமூகச் சிந்தனைகள் அவருக்கு வரத்தொடங்கியிருந்தன. கல்லூரி நாட்களில் பாடப்புத்தகங்களோடு சமூகச் சிந்தனை அளிக்கும் புத்தகங்களையும் அண்ணா படித்தார். கன்னிமரா நூலகமே கதியென்றுக் கிடந்தார். கட்டுரைகள் எழுதினார். வாய்ப்பு வரும்போதெல்லாம் தமிழிலும், ஆங்கிலத்திலும் உரையாற்றினார். அன்றைய நாட்களில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த சொற்பொழிவுக் கூட்டங்களில் அண்ணா பேசினார். அவர் பேச்சு மக்களை ஈர்த்தது. மாணவர்கள் அண்ணாவின் பேச்சை பற்றி பேசத்தொடங்கினர். அண்ணா பேசுகிறார் என்றால், கூட்டம் அலைமோதியது. இப்படி கல்லூரி நாட்களிலேயே எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் வளர்ந்த அண்ணா 1935-ம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார்.

மொழிபெயர்ப்பாளர்
அந்தக்காலத்தில் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேடைகளில் ஏறிவிட்டால் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். சர்.ஏ.ராமசாமி முதலியார், தொழிலாளர் தலைவர் பாசுதேவ் போன்றோர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும்போது அவர்களின் மொழி ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் புரியாது. அதனால், ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். அதுபோன்ற கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் வாய்ப்பு அண்ணாவுக்கு வந்தது. காலப்போக்கில் பாசுதேவ் பேசுகிறார் என்றால், அங்கு அண்ணாதுரையும் இருப்பார் என்று மக்கள் புரிந்துகொண்டனர். கடல்மடை திறந்த அண்ணாவின் தமிழைக் கேட்க மக்கள் அலையலையாகக் கூடினர். நாளடைவில் நீதிக் கட்சியோடு அண்ணாவுக்கு நெருக்கம் அதிகமானது.

அந்தநேரத்தில் சென்னை நகரசபைக்கு தேர்தல் வந்தது. நீதிக் கட்சி அண்ணாவை வேட்பாளராக அறிவித்தது. பெத்து நாயக்கன் பேட்டையில் அண்ணா போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் மா.சுப்பிரமணியம் நிறுத்தப்பட்டார். பலத்த போட்டி. காங்கிரஸ் சார்பாக சத்தியமூர்த்தி, திரு.வி.க., சீனிவாசராவ் என்று காங்கிரஸின் பிரசார பீரங்கிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கினர். அவர்களுக்கு ஈடுகொடுத்து அண்ணா மக்களிடம் பிரசாரம் செய்தார். தான் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னார்.

ஒரு பிரசாரக் கூட்டத்தில், ‘சேரிகளில் மின்சார விளக்குகள் இல்லை. ஆனால், நகரசபைக் கோயில்களில் இரண்டு அலங்கார விளக்குகள் போடுவது ஏன்?’ என்று அண்ணா கேள்வி எழுப்பினார். ஏழை மக்களின் நலனுக்காக அண்ணா பேசிய இந்தப் பேச்சை காங்கிரஸ்காரர்கள், ‘அண்ணாதுரைக்கு ஓட்டுப் போட்டால், கோயில்களின் முன் இருக்கும் அலங்கார விளக்குகளை எடுத்துவிடுவதாக பேசியிருக்கிறார். அதனால், அவருக்கு வாக்களிக்காதீர்கள்’ என்று மக்களிடம் திரித்துப் பிரசாரம் செய்து, துண்டு பிரசுரங்கள் வெளியிட்டனர். காங்கிரஸ்காரர்களின் இத்தகைய சூழ்ச்சிகளில் மக்கள் சிக்கிவிட்டார்கள். அதனால், தேர்தலில் அண்ணா தோல்வி கண்டார். (தொடரும்...)

02 March 2010

சுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டம்!

Posted by Gunalan Lavanyan 9:47 PM, under | No comments

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்கி வந்த சுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டைத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது சன் நியூஸ் தொலைக்காட்சி. குருக்கள், குருஜிக்கள் வரிசையில் மற்றொரு நபராக சேர்ந்திருக்கிறார் இந்த செக்ஸ் ஆசை ‘சாமி’யார்?

செவ்வாய் (02.03.2010) அன்று இரவு 9 மணி அளவில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நேரடிக் காட்சிகள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்த்திரைப்பட நடிகை, R என்ற முதல் எழுத்தை பெயராகக் கொண்ட ஒரு நடிகையுடன் நித்யானந்தா சல்லாபித்துக்கொண்டு இருந்தார் அந்தக் காட்சியில். (சுவாமியின் லீலையை பார்க்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.... http://www.envazhi.com/?p=16649)

பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பார்க்கவே முடியாத அளவுக்கு அருவெறுப்பும் அபாசமும் நிறைந்த அந்தக் காட்சிகள் நித்யானந்தாவின் பக்தகோடிகளுக்கு ஒரு பேரதிர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்த வேடதாரியின் காம ரூபம், இந்த ஒரு நடிகையோடு மட்டும்தானா? இன்னும் எத்தனைப் பேரோ… எத்தனை பக்தைகளோ… ஆண்டவனுக்கே வெளிச்சம்!
பாவங்களைப் போக்குபவர்கள்… ஞானத்தையும் (அறிவையும்), அருளையும் வழங்குபவர்கள், துறவு பூண்டவர்கள் இப்படி துறவறத்தைத் துறந்து சல்லாபக் கோலம் பூணுவது என்ன முறையோ… நீங்களே பதில் சொல்லுங்கள்…

சாதாரண மனிதரைப் போன்ற ஆசையும் ஆசாபாசமும் இருப்பின் இந்தத் துறவுக்கோலமும் காவி வேஷமும் எதற்கு..?

இப்படி குருக்கள், குருஜிக்களின் குட்டும், காமக் கூத்தும் வெளிவந்துகொண்டே இருந்தாலும் அவர்களைத் தேடி போகிறவர்களின் (பக்தர்களின்) எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை. எப்போதுதான் திருந்தப்போகிறது இந்த மூடநம்பிக்கைச் சமூகம்…

25 February 2010

காதலும் மறக்கும்

Posted by Gunalan Lavanyan 9:01 PM, under | No comments

To: …………….sudha@gmail.com
subject: to my sweet darling
அன்பிற்கினியவளே!
இராத்திரி முழுதும் உறக்கம் இழந்து கட்டிலில் புறண்டுக்கொண்டிருந்தேன். நீண்ட நாழிகைக்குப் பிறகு, உறக்கம் தொலைத்த இரவை நடந்து கழிக்கலாம் என்று நடக்கத் தொடங்கினேன்... யாருமற்ற இரவில் தனிமை மிகக் கொடியது என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்தத் தனிமை மிக இனிமையாகவே இருந்தது. வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிலா நகர்ந்துகொண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து என் சட்டைப் பையில் விழுந்து தெறித்ததுபோல் இருந்தது. ஒரு நொடி கண்களை இமைத்துப் பார்த்தேன். பிரமை! மாயை கலைந்ததும் மீண்டும் நடந்தேன். நேற்று உன்னோடு நான் இருந்த மணித்துளிகள்... குளத்தில் எறிந்த கல் எழுப்பும் அலையாய் நெஞ்சில் எழுந்துகொண்டிருந்தது.
ஃப்ளாஷ்பேக்!
விடிந்தும் விடியாததுமான காலைப் பொழுதில் உனக்கு முந்தியே வந்து பூங்காவில் அமர்ந்து புல்லின் நுனியை கடித்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர, வேறு யாருமற்றுக் கிடந்த பூங்காவை ஒவ்வொரு மனிதராக வந்து நிரப்பிக்கொண்டிருந்தார்கள். சூரியன் முழுமையாக தனது இமைகளைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான். மொட்டுகள் மலர துடித்துக்கொண்டிருந்தன. மூடியிருந்த பூக்கள் விரியத் தொடங்கியிருந்தன. பனித்துளிகள் காய்ந்துகொண்டிருந்தன. லேசான காற்று என் காதில் சில்லென்று வீசிவிட்டுப் போனது. செம்பருத்தி செடி என் தோளில் உரசிக்கொண்டிருந்தது. என் கை கடிகார முள் ‘டிக் டிக்’ என்று எழுப்பும் ஓசை நேரம் கடந்துகொண்டிருப்பதை அறிவித்தது.
செல் எடுத்து உனக்கு தொடர்புகொண்டேன். ஸ்விட்ச் ஆஃப். பதட்டமில்லாமல் உன் வீட்டுக்கு டையல் செய்தேன். நீண்ட ஒலிக்குப் பிறகு மணி அடிக்கும் ஓசை ஓய்ந்தது. எரிச்சலோடு பூங்காவை சுற்றிக்கொண்டிருந்தேன்.
‘‘மணி என்ன சார்’’ எங்கிருந்தோ ஒரு குரல் காதை அறைந்தது.
திரும்பிப் பார்த்தேன். ஒரு வயோதிக மனிதர் வாக்கிங் ஸ்டிக் பிடித்து நின்றுகொண்டிருந்தார்.
‘‘ஜஸ்ட் எய்ட் ஓ க்ளாக்’’ சொல்லிவிட்டு நடக்கும்போதுதான் மூளைக்குள் உறைத்தது. ‘மாலை 5.30 மணிக்கு நீ வரச்சொல்லியிருந்தது...’
மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டு பூங்காவைவிட்டு நகர்ந்தேன்.
மாலை 5.30 மணி.
அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து ஒரு தம் பற்ற வைத்து, தலையை வருடிக்கொண்டே சீரியஸாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தேன்.
‘‘என்ன சார் அஞ்சரை மணி ஆயிடுச்சு கிளம்பலையா’’ என்று மறுபடியும் ஒரு குரல் எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்து காதில் ஊடுருவியது.
இப்போது மூளை அலறியது... ‘ஈவினிங் ஃபைவ் தர்டி... ஃபைவ் தர்டி... ஃபைவ் தர்டி’ என்று டவாலி கோர்ட்டில் கூப்பிடுவது போல் ஓர் அலறல்.
சற்றைக்கெல்லாம் என் பைக் உறுமியது. அடுத்த பத்து நிமிடத்தில் பார்க் வாசலில் வண்டியை பார்க் செய்தேன்.
உள்ளே நுழைந்ததும் உன்னுடைய வாசனை மூக்கை துளைத்து மனசை பிசைந்தது. என்னைப் பார்த்ததும் சிணுங்கினாய்.
‘‘ஏண்டா இவ்ளோ லேட்... நான் அஞ்சு மணிலேருந்து வெயிட் பண்றேன் தெரியுமா...’’ சொல்லிவிட்டு கோபமாகப் பார்த்தாய்.
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்... ‘‘நான் காலம்பறயே உனக்காக இங்கே வந்துட்டேன். அது உனக்குத் தெரியுமா...’’
‘‘என்ன உளர்றே...’’
‘‘ஆமாம்’’ என்று நடந்ததையெல்லாம் சொன்னேன். நீ என் மடியில் குலுங்கிக் குலுங்கி சிரித்தாய்... நானும் சிரித்தேன்.
‘‘அசடு வழியுது தொடச்சிக்கோ...’’ என்றாய்.
வெட்கமாகப் போய்விட்டது எனக்கு.
‘‘வெட்கப்பட்டதெல்லாம் போதும்... போதும்...’’ என்று போதும் போதும் என்கிறவரை முத்தமிட்டாய்...
‘‘இப்படி
ஆயுள் முழுவதும்
உன் முத்தம்
எனக்குக் கிடைக்கும் என்றால்
நான் தினம் தினம்
மறக்கிறேன் என்னை’’ என்று கவிதை சொன்னேன்.
என்னை கட்டி அணைத்துக்கொண்டாய்.
‘‘இராத்திரி ரெண்டு மணி ஆகுது எங்க போறீங்க இந்நேரத்துல’’ ஒரு குரல் என் காதை வந்து உரசியது. நினைவு திரும்பினால் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
‘‘இல்லே சார் தூக்கம் வரலே அதான் ஒரு வாக் போலாம்னு...’’ வார்த்தைகளை மென்று விழுங்கினேன்.
வழக்கம் போல் போலீஸின் துருவல் நடந்தது.
‘‘எங்க ஒர்க் பண்றே... ஐ.டீ. காட்டு...’’ என்றதும், பர்ஸை எடுத்து நீட்டினேன்.
பார்த்துவிட்டு, ‘‘இந்த ஃபோட்டோல இருக்கிறது யாரு’’ என்று மறுபடியும் ஒரு கேள்வி. பழையபடி என் மறதி.
‘‘ஓ ஸாரி ஸார். ஷீ ஈஸ் மை கேர்ள் ஃபிரண்ட். திஸ் ஈஸ் மை ஐ.டீ.கார்ட்’’ என்று ஐ.டீ.யை நீட்டினேன்.
அதைப் பார்த்துவிட்டு, ‘‘அந்த சுரேஷ் நீங்கதானா... சுதா எல்லாம் சொல்லியிருக்கா... நேத்து நடந்ததைக்கூட வீட்ல வந்து சொன்னா... எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்... சரி அது போகட்டும். ஐ ஹேம் ராகவன். சுதா ஈஸ் மை டாட்டர். சீக்கிரம் வந்து உங்க பேரண்ட்ஸை வீட்லே பேசச் சொல்லுங்க... கல்யாணம் முடிச்சா இந்த ஞாபக மறதியெல்லாம் இருக்காது... இப்போ போய் தூங்குங்க. மணி ரெண்டரை ஆகுது. நாளைக்கு ஆஃபீஸ் போக வேணாமா..?’’
‘‘ஆமா அங்கிள் போகணும். என் பேரன்ட்ஸோட சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்... பை...’’ வீடு வந்து சேர்ந்து கட்டிலில் விழுந்தேன். படுத்ததே தெரியவில்லை. தூங்கிவிட்டேன்.
காலை எழுந்ததும் பல்கூட துலக்கவில்லை. உனக்கு மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறேன்... நிறைய விஷயங்கள் உன்னிடம் பேசவேண்டி இருக்கிறது. மாலை 5.30 மணிக்கு பார்க்கில் சந்திக்கலாம். மறக்காமல் நான் வந்துவிடுகிறேன். நீயும் வந்துவிடு.
ஆயிரம் முத்தங்களுடன்
சுரேஷ்
send
sending.....

18 February 2010

வாரிகொடுத்த வள்ளல்!

Posted by Gunalan Lavanyan 11:09 PM, under | No comments

டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது அந்த இளைஞனுக்கு பதினாறு வயது. அப்போது, அவனுக்கு சங்கீதத்தில் ஞானம் அதிகம். நாடகப் பாடல்களைப் பாடும்போது தாளம் தப்பாமல் பாடுவது, கடினமான வரிகளையும் பிழையில்லாமல் பாடுவதெல்லாம் அவனுக்கு ‘வாய் வந்த கலை’. மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியங்களை அலட்டிக்கொள்ளாமல் வாசிப்பது ‘கை வந்த கலை’.

டி.கே.எஸ். நாடகக் குழு காரைக்குடியில் நாடகங்களை நடத்திவந்த சமயத்தில், குழுவிலிருந்த பிரதான நடிகரான எம்.ஆர்.சாமிநாதன் ஒருநாள் காணாமல் போய்விட்டார். அப்போது நடந்துவந்த ‘மனோகரா’ என்ற நாடகத்தின் பிரதான பாத்திரமான வசந்தன் வேடத்தில் அதுவரை சாமிநாதன்தான் நடித்து வந்தார். திடீரென்று அவர் காணாமல்போகவே என்ன செய்வதென்று தெரியாமல் டி.கே.சங்கரன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். அருகில் இருந்த டி.கே.சண்முகம், “சாமிநாதனுக்கு பதிலாக வசந்தன் வேடத்தில் நடிக்க நம்மிடம் ஒரு இளைஞன் இருக்கிறான். அதனால் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை” என்று சொல்ல சங்கரன் ஆறுதல் அடைந்தார்.

அதுவரை சிறிய வேடங்களிலேயே நடித்து வந்த அந்த இளைஞனுக்கு பிரதான நகைச்சுவை வேடத்தில் தான் நடிக்கப் போவதை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை. அதற்குப் பதிலாக தன் திறமையைக் காட்டினான். அதனால், இனி வசந்தன் வேடத்தில் அந்த இளைஞனையே நடிக்கவைப்பது என்று டி.கே.எஸ்.குழுவினர் முடிவு செய்தனர்.

அந்த இளைஞன்தான், பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நகைச்சுவை சாம்ராஜ்யத்தை நிறுவி அதில் வெற்றிக்கொடி நாட்டிய… தமிழ்நாட்டு மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த ‘கலைவாணர்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன். 1926-க்குப் பிறகு டி.கே.எஸ். நாடகக் கம்பெனி ஏற்றத்தைக் கண்டது. புராண நாடகங்களுக்குப் பதிலாக சமூக நாடகங்களை நடத்தத் தொடங்கியது. எம்.கந்தசாமி முதலியார் என்ற நாடக ஆசிரியர் வந்து சேர்ந்ததுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம். அப்படி ‘மேனகா’ என்ற புரட்சிகரமான நாடகத்தை கம்பெனி நடத்தியது. அதில் சாமா அய்யர் வேடத்தில் நடித்து கிருஷ்ணன் தூள் பரத்தினார். மக்களின் வரவேற்பு அதிகமானது. கிருஷ்ணனின் புகழ் பரவத் தொடங்கியது.

இந்தச் சமயத்தில் டி.கே.எஸ். கம்பெனியிலிருந்து கிருஷ்ணன் விலக நேர, செய்தி அறிந்ததும் ‘கோல்டன் கம்பெனி’யார் கிருஷ்ணனை தன் கம்பெனிக்கு அழைத்துக் கொண்டனர். ஒருமுறை ஆலப்புழையில் கோல்டன் கம்பெனி முகாமிட்டு இருந்தது. அப்போது, ‘சம்பூர்ண ராமாயணம்’ என்ற நாடகம் நடந்து வந்தது. அதில் என்.எஸ்.கிருஷ்ணனும் என்.எஸ்.நாராயண பிள்ளையும் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தனர்.

ஒருநாள் நாடகத்தில் சூர்ப்பனகை பங்கத்துக்குப் பிறகு கர-தூஷண வதம் செய்கிற காட்சி. கரனாக வேடம் போட்டிருந்த நாராயணப் பிள்ளை ‘வதம்’ செய்யப்படுவதற்கு முன் வேடிக்கையான வசனங்களைப் பேசி மக்களின் ஆரவாரத்தை தூண்டுவது வழக்கம். அன்று அப்படி நாராயணப் பிள்ளை வசனம் பேசத் தொடங்கினார்…
“ஏ! தங்காய்… சூர்ப்பனங்காய்!” என்று காயில் முடிகிற வசனங்களாகப் பேசி கரவொலி பெற்றார். அவருக்குப் பிறகு தூஷணன் வேடம். தூஷணனாக கலைவாணர் வந்தார். நாராயணப் பிள்ளையைவிட அதிகமாக மக்களின் கைத்தட்டலைப் பெறுவது என முடிவு செய்து, பேசத் தொடங்கினார்…
“நீலமேக சியாமள ரூபா! அணா! பைசா!” என்று பேசினார். கலைவாணர் இப்படிப் பேசியதும் மக்கள் வெகுவாக ஆரவாரம் செய்தனர். நாராயணனுக்கு வந்ததைவிட கைத்தட்டல்கள் அதிகம் கிடைத்தது. இப்படித் தொடங்கியதுதான் கலைவாணரின் நகைச்சுவை சாம்ராஜ்யம்.

நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. கிருஷ்ணன், ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தப் படம் ஜெமினி பிக்சர்ஸ் கம்பெனியால் தயாரிக்கப்பட்டது. எஸ்.எஸ்.வாசன்தான் கிருஷ்ணனுக்கு திரைப்படத்தில் முதல் வாய்ப்பு வழங்கினார். ஆனால், டி.கே.எஸ். குழுவால் நாடகமாக நடிக்கப்பட்ட ‘மேனகா’ என்ற கதை படமாக எடுக்கப்பட்டபோது அதில் கிருஷ்ணன் நடித்தார். எதிர்பாராதவிதமாக இந்தப் படம் முதலில் வெளியாகிவிட்டது. ஆகவே, மக்களுக்கு கிருஷ்ணன் திரையில் அறிமுகமான முதல் படம் ‘மேனகா’.

ஒருபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அதைப் பற்றியே யோசிப்பது, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை மேலும் எவ்வாறு மெருகூட்டுவது என்று சிந்தித்துக்கொண்டு இருப்பது என்று வழக்கமாகக் கொண்டிருந்தார் கலைவாணர். அப்படி ஒருநாள் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாணிக்கவாசகர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது படத்தின் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் தன்னுடைய வாய்ஜாலத்தை கிருஷ்ணன் காதுபடவே காட்டியிருக்கிறார். ஆனால், சுந்தரம் அமைத்திருந்த காட்சியமைப்பில் கிருஷ்ணனுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. எனவே, “காட்சியை மாற்றியமைக்க வேண்டும். அதை என்னுடைய பொறுப்பில் விட்டுவிடுங்கள். காட்சி எடுத்து முடித்தபிறகு எப்படி வந்திருக்கிறது என்று பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்தக் காட்சியில் திருப்தி இல்லையென்றால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். அதற்கான செலவை நான் தந்துவிடுகிறேன்” என்று யாரும் நேருக்கு நேர் நின்று பேசத் தயங்கும் டி.ஆர்.சுந்தரத்தைப் பார்த்து கிருஷ்ணன் உரத்துச் சொல்லிவிட்டார். இதைக் கேட்ட படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் ஒரே ஆச்சர்யம், அதிர்ச்சி. ஆனால், சுந்தரம் எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணனின் நிபந்தனைக்கு தலை அசைத்துவிட்டார். படப்பிடிப்பு தொடங்கியது. கிருஷ்ணனும் மதுரமும் இணைந்து நடித்த அந்தக் காட்சி எடுத்தாகிவிட்டது. காட்சியைத் திரையிட்டு பார்த்தபோது சுந்தரத்துக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அப்படியே கலைவாணரை ஆரத்தழுவிக் கொண்டார். அதன்பிறகு கலைவாணர் மதுரம் நடிக்கும் மாடர்ன் தியேட்டர்ஸின் எந்தப் படமானாலும் படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் நுழைவதே இல்லை.

அதேபோல, படப்பிடிப்புக்கு போகும்போது நேரம் தவறாமல் குறித்த நேரத்துக்கு சில மணி முன்பே போய்விடுவதை கிருஷ்ணன் கடைப்பிடித்து வந்தார்.

ஜெமினி பிக்சர்ஸ் ‘மங்கம்மா சபதம்’ படத்தை எடுத்து வந்த சமயம். கலைவாணரும் அவரது குழுவினரும் நிர்ணயிக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு நேரமான காலை 7 மணிக்கு முன்பே வந்துவிட்டனர். ஆனால், குழு நடிகர்களில் ஒருவரான ‘புளிமூட்டை’ ராமசாமி மட்டும் 6.45 ஆகியும் வரவில்லை. விஷயத்தை கேள்விப்பட்ட ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், “இன்னும், அந்த நடிகர் ஏன் வரவில்லை?” என்று கேட்டுக்கொண்டே கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி தமது அறைக்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருந்தார். புளிமூட்டை வந்து சேராததைப் பற்றி வாசன் விசாரித்த செய்தி கலைவாணருக்கு எட்டியது. மேக்கப் அறையிலிருந்து அப்படியே வெளியே வந்தவர், வாசன் நடைபோட்டுக் கொண்டிருந்த தாழ்வாரத்தை நோக்கி மெல்ல கணைத்துக்கொண்டே வந்தார். வாசன் அவரை நிமிர்ந்து பார்த்தார், கலைவாணர் “வணக்கம்” என்று கைகுவித்துச் சொன்னார். “புளிமூட்டை ராமசாமி இன்னும் வரவில்லை என்று தாங்கள் கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டேன், அவன் எப்படியும் 7 மணிக்குள் வந்துவிடுவான். எங்கள் குழுவில் நேரம் தவறாமல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பதைக் கடைப்பிடித்து வருகிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மணி 6.59. அதேநேரத்தில், புளிமூட்டை வேர்க்க விறுவிறுக்க அவர்கள் முன் வந்து நின்றார். வாசன் முகம் மலர்ந்தது. கலைவாணரின் பேரில் அவர் கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.

புளிமூட்டை ராமசாமிக்கு ‘புளிமூட்டை’ என்று பட்டப்பெயர் வந்ததும் கலைவாணரின் திருவாயால்தான். கலைவாணர் தனது ‘அசோகா ஃபிலிம்ஸ்’ தயாரித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ (எம்.ஜி.ஆர். நடித்த படம் அல்ல) என்ற படத்தில் ராமசாமிக்கு ஒரு திருடன் வேடம். படப்பிடிப்பின்போது ராமசாமி மேக்-அப்போடு நடித்துக்கொண்டிருந்தார். கதையின்படி கள்வர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியைத் தேடினார். அவரைக் காணவில்லை. உடனே அருகில் இருந்தவரிடம் “எங்கே அந்தப் புளிமூட்டை” என்று வேடிக்கையாகக் கேட்டார். அன்று முதல் ராமசாமியின் பெயருக்கு முன்னால் புளிமூட்டை சேர்ந்துகொண்டது. இதேபோல் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளைக்கும் ‘யதார்த்தம்’ என்ற பட்டப்பெயர் மற்றொரு படப்பிடிப்பில் கலைவாணரால் வழங்கப்பட்டதுதான்.

மாம்பலம் வெங்கட்டராம ஐயர் தெருவிலிருந்த கலைவாணரின் இல்லம் எப்போதும் கலகலப்போடு இருக்கும். தன்னுடைய வீட்டில் ஏதாவது நிகழ்ச்சிக்கு ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்திருந்தால் முதலில் கலைவாணர் மாடியிலிருந்து இறங்கி வருவார். நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்தை ஒருமுறை உற்றுப் பார்ப்பார். “ஏம்ப்பா! ஜமக்காளத்தை இன்னும் விரிக்கவில்லையா…” என்று கேட்டுக்கொண்டே தாமே ஜமக்காளத்தை எடுத்து விரித்துவிடுவார். தாம் ஒரு பெரிய திரைப்படக் கம்பெனி நடத்தி வந்த போதிலும் தம்மை யாரும் ‘முதலாளி’ என்று கூப்பிடுவதை அனுமதிக்கமாட்டார். எல்லாருக்கும் அவர் ‘அண்ணன்’தான். அவரது கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த பையன் அவரை அப்படி ‘முதலாளி’ என்று அழைத்துவிட்டான். உடனே அவர், “ஏண்டா தம்பி, இப்படியெல்லாம் என்னை உயர்த்தித் திட்டுறே? சும்மா ‘அண்ணே’ன்னு கூப்பிடு போதும்” என்றார். அப்படித் தொழிலாளர் மத்தியிலும் அவர் ஏற்றத்தாழ்வை பார்த்ததில்லை.

தான் ஒரு பெரும் நடிகன் என்ற கர்வம் அவருக்கு எப்போதும் இருந்தது இல்லை. தன்னைவிட புகழில் குறைந்த நடிகர்களாக இருந்தவர்களிடத்திலும் அவர் ஏற்றத் தாழ்வின்றி பழகுவார். ஒருநாள் திடீரென்று ஃபிரெண்ட் ராமசாமியின் வீட்டுக்கு என்.எஸ்.கே. சென்றார். தரையில் மலையாளப் பாயை விரித்துப் படுத்திருந்த ராமசாமிக்கு கலைவாணரைக் கண்டதும் ஒரே ஆச்சர்யம். அதோடு வணக்கத்தையும் வைத்தார்.

“எவ்வளவு தூரத்திலிருந்து வரேன் தெரியுமா உனக்கு?” என்று கேட்டுக்கொண்டே கிருஷ்ணன் கட்டிலில் அமர்ந்தார். “அண்ணே டீ சாப்பிடுங்கள்” என்று ராமசாமி பணிவாக உபசரித்தார். “நான் டீயை சாப்பிடுவதில்லை. குடிப்பதுதான் வழக்கம்” என்று தனது பாணியிலேயே சொன்னார். தொடர்ந்து, “டேய் ராமசாமி இப்போதான் நீ நடித்த ‘மனம்போல் மாங்கல்யம்’ படம் பார்த்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது. நீயும் நன்றாக நடித்திருக்கிறாய். நீ முன்னுக்கு வருவாய். இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றார். இதைக் கேட்ட ராமசாமிக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

கலைவாணர் தாம் வாழ்ந்த காலத்தில் அரசியல் சார்பற்றவராக திகழ்ந்தார். தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் ப.ஜீவானந்தத்தோடும் பழகுவார். தி.மு.க. தலைவரான அண்ணாவோடும் பழகுவார். ஜீவா மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தாரோ அதேபோல அறிஞர் அண்ணா மீதும் அளவில்லா அன்பு கொண்டிருந்தார்.

1957-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனிவாசன் நிறுத்தப்பட்டிருந்தார். கலைவாணர் அண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவத் துறையில் கைராசிக்காரர். மிகவும் புகழ் பெற்றவர். எனவே, என்.எஸ்.கே. பிரசாரத்தை இப்படித் தொடங்கினார்… “இந்தக் கைராசிக்காரருக்கு உங்க வாக்குகளை அளித்து சட்டசபைக்கு அனுப்பிவச்சுட்டா, உங்க குழந்தை குட்டிகளுக்கு ஒடம்புக்கு ஏதாவது வந்துட்டா என்ன செய்வீங்க? நல்லா யோசிச்சு உங்க ஓட்டை யாருக்குப் போடணுமோ அவங்களுக்குப் போடுங்க!” என்று மக்களை சிரிக்க வைத்தார். அண்ணாவை ஜெயிக்க வைத்தார்.

கலைவாணர் தன் வாழ்வின் இறுதி நாள் வரை தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. இருப்பதை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு இரண்டு கைகளாலும் வாரி வழங்கினார். வீட்டு வாசலில் ‘அண்ணே’ என்று குரல் கேட்டால் அதற்குப் பதில் குரல் ‘அன்புக்குரலாக’ ஒலிக்கும், இல்லை என்று வந்தவர்களுக்கு இல்லை என்று அனுப்பியது கலைவாணர் சரித்திரத்தில் இல்லை.

அப்படிப்பட்ட கலைஞன் துரதிர்ஷ்டவசமாக சிறை செல்ல நேரிட்டது. ‘இந்து நேசன்’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1944-ம் ஆண்டு கலைவாணர் கைதானார். அவரோடு அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும் கைதானார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிரிவு கவுன்சில் அப்பீலுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1946 ஏப்ரல் 25-ம் தேதி கலைவாணரும் பாகவதரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து விடுதலையானபிறகு ஓய்வின்றி படங்களில் நடிக்கத் தொடங்கினார். பழைய உற்சாகத்தோடு நடித்தார். ஓய்வின்றி உழைத்தவரை பலர் ஓய்வெடுக்க வேண்டினர். சிலர் வற்புறுத்தி குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று அவரை ஓய்வெடுக்க வைத்தனர். குற்றாலத்தில் கலைவாணர் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டது. அப்போதும் உற்சாகத்தோடு வீங்கியிருந்த வயிற்றைப் பார்த்து நகைச்சுவை செய்தார். பிறகு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். தமிழ்நாட்டின் பெருந்தலைவர்களும் திரைப்படத்துறையின் பெரும் நடிகர்களும் அவரை வந்து பார்த்தனர். வந்தவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசினார். “உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றவர்களிடமெல்லாம் “அவ்வளவு சீக்கிரம் எமன் என்னைக் கொண்டுபோய்விட மாட்டான். நான் இன்னும் கலை உலகுக்குத் தொண்டு செய்ய வேண்டியிருக்கு” என்று சொன்னார்.

கலைவாணர் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு தனி ஆள் நியமித்து, தனக்கு வந்து குவிந்த பழங்களை சாறு பிழிந்து மருத்துவமனையில் இருந்த எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கச் செய்தாராம்.

திடீரென்று ஒருநாள் அந்தச் செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. கோவை, சேலம் உள்ளிட்ட படப்பிடிப்புத் தளங்களில் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களிலும் படப்பிடிப்புத் தளங்களிலும் படப்பிடிப்பு ரத்து. செய்தியைக் கேட்டதும் சினிமா கலைஞர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் அந்தத் துயரத்தைக் காண சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்யத் தொடங்கிவிட்டனர். நல்லவேளை, அவர்கள் எதிர்பார்த்து வந்த துயரம் அங்கு நடந்திருக்கவில்லை. இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட கலைவாணர் படுக்கையில் உட்கார்ந்து கொட்டக் கொட்ட விழித்தபடி குறையாத சிரிப்போடு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், வந்தவர்கள் எதற்கு வந்தார்களோ அந்த வேலையை செய்யத் தொடங்கிவிட்டனர். கலைவாணரைப் பார்த்து விம்மத் தொடங்கிவிட்டனர். பிறகுதான் கலைவாணருக்கு காரணம் புரிந்தது. யாரோ புரளி செய்திருக்கிறார்கள் என்று!

எதிர்பார்த்து வந்தவர்களை இல்லை என்று அனுப்பியதில் மனம் உடைந்தாரோ என்னவோ, அவர்களை ஏமாற்றக்கூடாது என்றுகூட நினைத்து இருக்கலாம். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் தமிழகம் நினைத்து முன்பு ஏமாந்த அந்தத் துயரம் நடந்தேவிட்டது. ஒரு சகாப்தம் முடிந்தேவிட்டது.

பயோ-டேட்டா…

பெயர்: என்.எஸ்.கிருஷ்ணன்
காலம்: 29.11.1908 – 29.08.1957
பிறந்த ஊர்: ஒழுகினசேரி – கன்னியாகுமரி மாவட்டம்
பெற்றோர்: சுடலையாண்டி பிள்ளை – இசக்கியம்மாள்
உடன் பிறந்தோர்: 6 சகோதரிகள் (வீட்டில் இவர் மூன்றாவது பிள்ளை)
மனைவிகள்: நாகம்மை (முதல் மனைவி)
                        டி.ஏ.மதுரம் (இரண்டாவது மனைவி)
                        வேம்பு (மூன்றாவது மனைவி, மதுரத்தின் தங்கை)
குழந்தைகள்: 8 பேர்
படிப்பு: 4-ம் வகுப்பு
தொழில்: நடிப்பு, இயக்கம், தயாரிப்பு (நாடகம் மற்றும் சினிமா)
சொந்த நிறுவனங்கள்: என்.எஸ்.கே. நாடகக் குழு மற்றும் அசோகா ஃபிலிம்ஸ்.
சந்தோஷம்: உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வது.
வருத்தம்: தன் இறுதி நாட்களில், பண வசதி, உடல் நலம் இல்லாமல் இருந்தபோது உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போனது.
அரசியல்: மக்களுக்கு நல்லது செய்கிற கட்சிகளை ஆதரிக்கும் அளவுக்கு மட்டுமே அரசியலில் ஈடுபாடு.
அரசியல் நண்பர்கள்: பேரறிஞர் அண்ணா (தி.மு.க.)
                                    பா. ஜீவானந்தம் (இ.கம்யூ)
இயக்கிய படங்கள்: மங்களம் (1951), பீலி கூத்ரு (1951), பணம் (1952)
நடித்துப் புகழ்பெற்ற நாடகம்: மேனகா
புகழ்பெற்ற வில்லுப்பாட்டு கதை: கிந்தனார்.